என் மலர்
கோவில்கள்
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் உள்ள புதுப்பாடியில் அமைந்துள்ளது திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புதுப்பாடி. இங்கு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
ஆலயத்தின் உள்ளே நுழைகையில், அக்னி மூலையில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்று நீரைத் தான் ஆலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்துகிறார்கள். கிணற்றின் எதிரே கருவறை மண்டபம் இருக்கிறது.
கருவறையானது விமான அமைப்புடன் உள்ளது. கருவறைக்குள் அருள்மிகு வைத்தியநாத சுவாமி அருள்பாலிக்கிறார். இவரது சன்னிதிக்கு எதிரே வெளிப்பிரகாரத்தில் நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது. நந்திக்கு முன்பாக சாளரம் காணப்படுகிறது. அதன் வழியாகத்தான் நந்தி, ஈசனை வழிபடுகிறார்கள். இந்த அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனின் முன் ஒரு நிமிடம் மனமொன்றி நிற்கையில் மனதிலுள்ள பாரங்கள் நீங்கி மனது நிம்மதியடைவதை உணரலாம்.
சுவாமி சன்னிதியை விட்டு வருகையில் கரு வறையின் வலப்புறத்தில் திரிபுர சுந்தரி அம்பாள் சன்னிதி உள்ளது. இந்த அன்னை நின்ற திருக்கோலத்தில் இரண்டு கரங்களில் மலர்கள் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் வரத, அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகின்றார். புன்முறுவல் பூத்த முகத்துடனும், சாந்த சொருபியாகவும், சமர்ப்பிக்கும் குறைகளை உடனே தீர்ப்பவளாகவும் திகழ்கிறார்.
அம்பாள் சன்னிதியை அடுத்து நாம் தரிசிப்பது நவக்கிரக சன்னிதி. வேறெந்த ஆலயத்திலும் இல்லாத அமைப்பாக இந்த ஆலயத்தில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. அம்பாள் சன்னிதியை விட்டு வெளியே வந்தால், வெளிப்பிரகாரத்தில் இடது புறத்தின் மூலையில் விமான அமைப்பில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். தும்பிக்கையை வாயில் வைத்த கோலத்தில் ஆகாரம் உண்ணும் பாவனையில் எழுந்தருளியுள்ளார்.
விநாயகர் சன்னிதியை அடுத்து பிரகாரம் சுற்றி வருகையில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதியை நாம் வணங்கலாம். இங்கு நின்ற கோலத்தில் சுப்ரமணியர் அருள்பாலிக்கின்றார். அடுத்ததாக இருப்பது ஈசான லிங்க சன்னிதி. இந்த சன்னிதிக்கு வெளியே சிறிய அளவிலான நந்தி, பலிபீடம் இருக்கிறது. காஞ்சி மகாப் பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சுவாமிகள், இந்த ஆலயத்திற்கு மூன்று முறை வந்து, இந்தச் சன்னிதியில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்ததாக இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

வைத்தியநாத சுவாமி
ஈசான லிங்க சன்னிதியை அடுத்து நாம் தரிசிப்பது கால பைரவர். கருவறை பிரகார கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவபெருமானுக்குப் பின்னால் பெருமாள், பிரம்மா, துர்க்கை எழுந்தருளியுள்ளார்கள். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதியை நாம் தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தில் தானாக தோன்றிய இரண்டு புற்றுகள் அமைந்துள்ளன. ஆடி வெள்ளி, தை வெள்ளி மற்றும் கருட பஞ்சமி தினங்களில் பக்தர்கள் இந்த புற்றிற்கு விமரிசையாக பூஜை செய்கின்றனர்.
வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சன்னிதியில் மூலவர் சன்னிதிக்கு சற்று முன்பாக வலது புறம் சல்லாப நாகங்களும், இடது புறம் ஐந்து தலை நாகமும் உள்ளன. தம்பதி ஒற்றுமை ஏற்பட, தாம்பத்திய மேன்மை ஏற்பட சல்லாப நாகங்களை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஆலய விசேஷங்கள் :
ராகு, கேது பரிகாரத்தலமாகவும், 27 நட்சத்திரங்களில் கடகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு பரிகாரத்தலமாகவும் இவ்வாலயம் திகழ்கிறது. திரு மணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், செல்வம் பெருகவும் வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியரை வழிபட்டு பலனடைகின்றனர்.
இவ்வாலயத்தில் பிரதோஷம், கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி, சஷ்டி, திருவாதிரை, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் சிறப்பான பூஜை நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன உற்சவம் இவ்வாலயத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்னாபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி (நான்கு கால பூஜை) இவைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை நல்ல முறையில் கொண்டாடுகின்றனர்.
இவ்வாலயத்திற்கு ராஜ கோபுர அமைப்பு இல்லை. நந்தவனம் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் கொட்டியூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள மகாதேவர் கோவில் ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் கொட்டியூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள மகாதேவர் கோவில் ஆண்டுக்கு 28 நாட்கள் மட்டுமே வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது.
தல வரலாறு :
பார்வதி தேவியின் தந்தையான தட்சன், சிவபெருமான் இல்லாமல், இரண்டு பெரும் வேள்விகளை வெற்றிகரமாக நடத்தி முடித்து, மூன்றாவதாக ‘பிரகஸ்பதீஸ்தவ’ எனும் வேள்வியையும் நடத்த முடிவு செய்தான். அந்த வேள்வியில் கலந்து கொள்ளும்படி சிவபெருமானைத் தவிர அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.
தந்தை நடத்தும் மாபெரும் வேள்வியில், கணவருடன் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டுமென்று பார்வதி தேவியும் விருப்பம் கொண்டாள். தன் விருப்பத்தை ஈசனிடம் தெரிவித்தாள்.
‘அழைப்பில்லாமல் சென்றால் அவமானமே வந்து சேரும். நாம் அங்கு செல்ல வேண்டாம்’ என்றார் ஈசன்.
பார்வதி தேவி அதைக் கேட்கவில்லை. தட்சன் நடத்தும் வேள்விக்குத் தனியாகச் சென்றாள். அங்கு தட்சன், பார்வதியையும் சிவபெரு மானையும் அவமதித்துப் பேசினான். அதனால் கோபமடைந்த பார்வதி தேவி தனது உயிர் அங்கேயே போகும்படிச் செய்தார். இதனையறிந்த சிவபெருமான் வேள்வி நடக்குமிடத்திற்குச் சென்று தட்சனின் தலையைத் துண்டித்து எறிந்தார்.
தட்சனின் தலையைத் துண்டித்த பின்பும் கோபம் குறையாத சிவ பெருமான், அங்கேயே ஓரிடத்தில் சுயம்புவாகத் தோன்றினார் என்றும், அந்த இடம் கேரளாவிலிருக்கும் கொட்டியூர் என்றும் தல புராணம் சொல்கிறது. இத்தலம் பிரம்மன், சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் கூடியிருந்த தலம் என்பதால் ‘கூடியூர்’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கொட்டியூர்’ என்று மாறிப்போனது.
இரண்டு கோவில்கள் :
கொட்டியூரில் ஓடும் மாவேலிப்புழை எனப்படும், பாவலி ஆற்றின் இரண்டு கரைகளிலும் சிவபெருமானுக்கு இரண்டு கோவில்கள் அமைந்திருக்கின்றன. இக்கரையில் அமைந்த கோவிலை இக்கரைக் கொட்டியூர் என்றும், அடுத்த கரையில் அமைந்த கோவிலை அக்கரைக் கொட்டியூர் என்றும் அழைக்கின்றனர்.
இக்கரைக் கோவில், சற்று உயரத்தில் இருக்கிறது. மிகப் பழமையான இக்கோவிலுக்குச் செல்லப் பல படிகள் ஏற வேண்டும். இங்கு இரண்டு சிலைகள் இருக்கின்றன. இடப்பக்கம் உள்ள சிலையைப் பார்வதி தேவியாகவும், வலப்பக்கம் உள்ள சிலையைச் சிவனாகவும் வழிபடுகின்றனர்.
அக்கரைக் கோவிலானது, அரை அடி தண்ணீர் நிரம்பியுள்ள ஒரு குளமும், அதனுள் கருங்கல்லால் ஆன நான்கைந்து மேடைகளும் இருக்கின்றன. அந்தக் குளத்திற்கு ‘திருவஞ்சிற’ என்று பெயர். இந்த இடம், தட்சன் நடத்திய வேள்வியில் வேள்விக் குண்டமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

குளத்தின் தென்கரையில் உள்ள பகுதியில், விழாவின் போது மூன்று பந்தல்கள் போட்டு, ஒன்றை ஆபரண அறையாகவும், மற்றொன்றை வாள் வைக்கும் அறையாகவும், மூன்றாவதை மடப்பள்ளியாகவும் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள முக்கியமான மேடைக்கு ‘மணித்துறை’ என்று பெயர். அதில் ‘கொட்டியூர் பெருமாள்’ என்று அழைக்கப்படும் மகாதேவர் சுயம்பு லிங்கமாய் ஒரு பள்ளத்தில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி தாட்சாயணி அக்னிப்பிரவேசம் செய்து மறைந்த இடம் என்று சொல்லப்படும் மேடை ஒன்றிருக்கிறது. அதனை ‘அம்மாறக்கல்’ என்று சொல்கின்றனர்.
வைகாசிப் பெருவிழா :
கேரள நாட்காட்டியின்படி இடபம் (வைகாசி) மாதம், சுவாதி நட்சத்திர நாளன்று தொடங்கி மிதுனம் (ஆனி) மாதம் சுவாதி நட்சத்திரம் வரை மொத்தம் 28 நாட்கள் அக்கரைக் கொட்டியூரில் வைகாசிப் பெருவிழா (வைகாச மகோற்ஸவம்) நடைபெறும். இந்த நாட்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழிபாடு நடைபெறுவதில்லை. அக்கரைக் கொட்டியூரில் விழா நடைபெறும் நாட்களில் இக்கரைக் கொட்டியூரில் வழிபாடுகள் எதுவும் நடத்தப்படுவதில்லை. மற்ற நாட்களில் அங்கு தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அக்கரைக் கொட்டியூரில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. திருவிழா நடைபெறும் நாட்களில் மட்டுமே ‘கையாலா’ எனப்படும் சிறு குடிசைகள் அமைக்கப்பட்டுப் பக்தர்கள் தங்குகின்றனர். வைகாசிப் பெரு விழாவின் போது ‘மணித்துறை’ எனுமிடத்தில் பந்தல் போட்டு தற்காலிகக் கருவறையை அமைக்கிறார்கள்.
சிவபெருமான், தட்சனைக் கொன்ற வாளை அங்கிருந்து வீசியெறிய அது 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘முதிரேரிகாவு’ எனுமிடத்தில் விழுந்ததாக சொல்கிறார்கள். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் முதிரேரிகாவில் இருந்து வாளை இக்கோவிலுக்கு எடுத்து வரும் ‘வாள்எழுநலத்து’ எனும் விழா முதன்மையானதாக இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணனூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், தலச்சேரி எனும் ஊரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் கொட்டியூருக்கு வைகாசிப் பெருவிழாக் காலத்தில் அதிக அளவில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
சுற்றுப் பகுதிகள் :
கொட்டியூரைச் சுற்றியுள்ள பல ஊர்களின் பெயர்களைப் பார்க்கும்போது, அவை தட்சன் நடத்திய வேள்வியுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. தட்சன் நடத்திய யாகத்துக்கு வந்த பார்வதிதேவி, யாகம் நடந்த இடத்தைத் தொலைவில் இருந்தே பார்த்த ஊர் `நீண்டு நோக்கி’ என்றும், பயணக் களைப்பால் சோர்வடைந்த பார்வதிதேவியின் நடை வேகம் குறைந்த இடம் `மந்தன்சேரி’ என்றும், வழியில் அவள் பால் காய்ச்சிய மலை `பாலுகாச்சி மலை’ என்றும், தட்சனின் தலையை வெட்டிய பிறகு சிவபெருமான் வாளை வீசிய இடம் `முதிரேரிக் காவு’ என்றும் அழைக்கப்படுகின்றன.
தட்சனின் தாடி :
சிவபெருமான், தட்சனின் தலையைத் துண்டித்ததன் நினைவாக ‘ஓடப்பூ’ என்று ஒரு பூ வைகாசிப் பெருவிழாக் காலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பூவை ‘தட்சனின் தாடி’ என்று அழைக் கிறார்கள். இந்தப் பூவை வீட்டில் வாங்கி வைத்திருந்தால் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.
சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.
நாடெங்கும் அனுமனுக்கு பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். ராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.
இலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் ராமபிரானிடம் ‘ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து, ரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.
ராமபிரான், ‘நாரதரே! தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.

அனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது.
எனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.
கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர் களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடவூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடவூர் - தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ரெயில் நிலையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.
நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர். அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர்.
ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர். அனைத்தையும் தந்து அருள்பவர் ஆஞ்சநேயர்.
நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.
அவர் அருளையும் கருணையையும் பெற்றால் வாழ்வில் எல்லா வளத்தையும் நீங்கள் சிரமமின்றி பெற முடியும். நாமக்கல் தலத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி மிக வமரிசையாக நடைபெற உள்ளது. முதலில் நாமக்கல் ஆஞ்சநேயர் பற்றி தெரிந்து கொள்வோம்.
முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர்நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.
அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு சஞ்சீவி மூலிகையைப் பெறுவதற்காக, இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்தார் ஆஞ்சநேயர். பணி முடிந்ததும் மலையை அதே இடத்திலே வைத்துவிட்டு திரும்பினார். அவ்வாறு வருகையில் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் குளிக்கும்போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைக்கிறது. இறைவனின் அம்சமாக இருப்பதை எண்ணி அதனை தம்முடன் எடுத்துக் கொண்டு வான்வழியாக வந்து கொண்டிருந்தார் ஆஞ்சநேயர்.
அப்போது நாமக்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் தமது கையில் இருந்த சாளக்கிராமக்கல்லை கீழே வைத்து விட்டு சந்தியா வந்தனத்தை செய்து முடித்தார்.
மீண்டும் வந்து சாளக்கிராமத்தை தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. ராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை செய்து முடித்து விட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல் என்றொரு அசரீரி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டு கிளம்பினார்.
ராமன் போரில் வென்று சீதையை மீட்டபிறகு ஆஞ்சநேயர் மீண்டும் இங்கே வந்தார். ஆஞ்சநேயர் விட்டு போன சாளக்கிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வணங்கியவாறு நின்று நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார்.
கோபுரம் வேண்டாம் :
நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கு கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார். நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாவது வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடைவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.
நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும்.
பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்புசுல்தான் பயன் படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது. பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

புண்ணிய தலமாக மாறிய நாமக்கல் :
பேரன்பு கொண்டு விளங்கும் நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர்.
கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.
நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரி தாயார், தாமரக் கண்கள் கொண்டவள் தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே!
புராணங்களின் கூற்றுப்படி, இத்திருக்கோவில் தேவசிற்பி விஸ்வகர்மாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகழ்வாராய்ச்சியின்படி, இந்தக்கோவில் பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டு உள்ளது. எதனுள்ளும் கட்டுப்படாதவர் அனுமன் என்பதை உணர்த்துவதாய் இத்திருக்கோவிலில் அனுமன் மேலே உயர்ந்து, 18 அடிகளில் கட்டிடத்துள், கோபுரத்துள் கட்டுப்படாது நின்று அருளுகிறார்.
நாமகிரி தாயாரின் அளவிட இயலா கருணையாலும், லட்சுமி நரசிம்மர் குகைக்கோவிலின் சிறப்பினாலும் மற்றும் அனுமனின் தனிச்சிறப்பினாலும் நாமக்கல் ஒரு புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது.
நாமக்கல் கோவிலின் சிறப்புகள் :
தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என்பது பெயராம். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது இந்த கோவில். லட்சுமி நரசிம்மர் கோவிலின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில் தான் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது. இங்கு உள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்.
பீடத்தில் இருந்து 22 அடியும், பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது.
வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது.

தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் :
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி தங்க முலாம் பூசிய இந்த தாமிர கவசத்தை சாத்துவதால் லட்சுமியின் அருள் கிடைக்கும். வீட்டில் செல்வ வளம் பெருகுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதன்மூலம் வீட்டில் தங்கம், வைரம், வைடூரியம் பெருகுவதாக பக்தர் களிடையே நம்பிக்கை உள்ளது. வாழ்க்கையில் பொருளா தார மேம்பாடு அடையும்.
எப்படி செல்வது? :
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்திலும், கரூரில் இருந்து 43 கிலோ மீட்டர் தூரத்திலும், ஈரோட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்திலும், கோவையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து 85 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நாமக்கல்லுக்கு பஸ் வசதி உள்ளது.
நாமக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதியும், டவுன் பஸ் வசதியும் உள்ளது. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் வருபவர்கள் சேலம் ரோடு சிக்னலில் இறங்கி கோவிலுக்கு நடந்து செல்லலாம்.
நாமக்கல்லில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பெங்களூர் - நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், நாகர் கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ், பழனி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், சேலம் - கரூர் ப£சஞ்சர், கரூர் - சேலம் பாஞ்சர் ரெயில்கள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
நாமக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
வெளிநாட்டு பக்தர்கள் திருச்சி அல்லது கோவை விமான நிலையங்களில் இருந்து இறங்கி காரில் நாமக்கல் வரலாம்.
தஞ்சை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வருவது கோடியம்மன் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலை தூக்கும் போது, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதாரம் எடுப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி.. தஞ்சன், தாரகன் என்ற இரு கொடிய அரக்கர்களை அழிப்பதற்காக அம்மன், கோடி அவதாரம் எடுத்தார். இதனால் அந்த அம்மனுக்கு ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
தஞ்சை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோடியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கருத்தட்டான்குடியை அடுத்த வெண்ணாற்றாங்கரையில் அமைந்துள்ளது.
தலவரலாறு :
தஞ்சன், தாரகன் என்ற 2 அரக்கர்கள் கடும் தவம் இருந்து, சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் இருந்து எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றனர். வரம் பெற்ற மமதையில் அரக்கர்கள் இருவரும், தவ முனிவர்கள், தேவர்களுக்கு துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.
அரக்கர்கள் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சிவன், ஆனந்தவல்லி அம்மனை சாந்த வடிவாக படைத்தார். அந்த அம்மனுக்கும், அரக்கர் களுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அம்பாளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அரக்கர்கள் தங்கள் உருவத்தை மாற்றி புதிய அவதாரம் எடுத்தனர். இவ்வாறு அவர்கள் கோடி முறை அவதாரம் எடுத்தனர். அம்பாளும், கோடி அவதாரம் எடுத்து காளிமேடு என்ற இடத்தில் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.
மரணம் அடையும் தருவாயில் அரக்கர்கள் இருவரும் அம்பாளிடம், ‘தாயே! உங்களால் சாகப்போகும் நாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றோம். எங்கள் நினைவாக இவ்வூர் எங்கள் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர். அம்மனும் அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். இதனால் அழகாபுரி என்ற இவ்வூர் அரக்கன் தஞ்சன் பெயரால் தஞ்சை புரி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி தஞ்சாவூர் என்றானது.
கடந்த 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனுடைய தாத்தா விஜயாலய சோழன், தஞ்சைக்கு வருகை தந்த போது இவ்வூரின் அழகை கண்டு இங்கேயே இருந்து ஆட்சி செய்ய முடிவு செய்தார். அதன்படி ஊரின் எல்லைகளை எட்டு திக்காக பிரித்து எட்டு திக்கிலும் எட்டு காளிகளை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த போது வடக்கு எல்லையை முதலாவதாக கொண்டு ஸ்ரீகோடியம்மனுக்கு கோவில் கட்டினார்.
கோடியம்மன் சிவனை தஞ்சமாக கொண்டுள்ளதால், கோடியம்மன் ஆலயத்தில் நந்தியுடன் கூடிய பலிபீடம் இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கொற்றன்குளக்கரை பகவதி கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
தங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண் பக்தர்கள்.. பெண் வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விளக்கேற்றி வழிபடும் தலமாகக் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொற்றன்குளக்கரை பகவதி கோவில் திகழ்கிறது.
தல வரலாறு :
ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்களைத் தவிர, அந்தக் காட்டுப் பகுதிக்குள் வேறு யாரும் செல்வதில்லை. ஒரு நாள், மாடு மேய்க்கும் சிறுவர்கள் அந்தக் காட்டுப்பகுதிக்குள் கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து, அங்கிருந்த கல் ஒன்றில் உடைக்க முயன்றனர். அப்போது, அந்தக் கல்லில் இருந்து ரத்தம் பொங்கி வழிந்தது.
அதைக் கண்டு பயந்து போன சிறுவர்கள், ஊருக்குள் சென்று காட்டிற்குள் நடந்ததைச் சொன்னார்கள். சிறுவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்த ஊர்ப் பெரியவர்கள், அந்தக் கல்லில் இருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அது நிற்கவில்லை.
இதையடுத்து ஊர்ப் பெரியவர்கள், அந்தப் பகுதியில் பிர பலமாக இருந்த ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். ஜோதிடர் அங்கு நடந்தவைகளைக் கொண்டு கணித்து, அந்தக் கல்லில் பகவதி தேவி இருப்பதைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பகவதி தேவிக்குக் கோவில் அமைக்கப்பட்டது.
அடர்ந்த காட்டுக்குள் அமைக்கப்பட்ட அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட, பெண்கள் உட்படப் பலரும் பயந்ததால், அக்கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட முடியாத நிலை இருந்தது. அதனால், அம்மனுக்குக் கோபமேற்பட்டுத் தங்களுக்குப் பாதிப்பு ஏதும் வந்துவிடக் கூடாது என்று பயந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், பெண் வேடமிட்டு அந்தக் கோவிலை வலம் வந்து விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர்.
அவர்கள் வழிபாட்டில் மகிழ்ந்த அம்மனும் அந்தச் சிறுவர்களின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி வைத்தார் என்றும், அன்றில் இருந்து ஆண் பக்தர்கள், இந்த அம்மனுக்குப் பெண் வேடமிட்டு வந்து வழிபட்டு வேண்டியதைப் பெறலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது என்றும் ஆலயத்தின் வரலாற்றைச் சொல்கின்றனர்.
இன்னொரு கதை :
பல நூறாண்டுகளுக்கு முன் இக்கோவில் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற சில சிறுவர்கள், விளையாட்டாக அங்கிருந்த பெரிய பாறை ஒன்றில் கற்களை வீசி எறிந் திருக்கிறார்கள். அப்போது, அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியிருக் கிறது. அதைக் கண்டு பயந்து போன சிறுவர்கள் அங்கிருந்து ஓட முயன்றிருக்கின்றனர்.
அவர்கள் முன்பு தோன்றிய பகவதி தேவி, அவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக மறுநாள் தன்னைப் பெண் வேடமிட்டு வந்து வழிபட வேண்டும் என்று சொல்லி மறைந்திருக் கிறார். மறுநாள் அச்சிறுவர்களும் அம்மன் சொன்னபடி பெண் வேடமிட்டு, அம்மனை வழிபட்டு இருக்கின்றனர். அம்மனும் அவர்கள் வேண்டியவைகளையெல்லாம் வழங்கியிருக்கிறார். அன்றிலிருந்து இந்த அம்மனுக்குப் பெண் வேடமிட்டு வழிபட்டால் வேண்டியதைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது என்று இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.

பெண் வேடத்தில் வழிபடும் ஆண்கள்
கோவில் அமைப்பு:
கேரள முறைக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பகவதி தேவி முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் மகாதேவர், மகாகணபதி, தர்மசாஸ்தா, யட்சி, மாடன், நாகராஜன் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோவிலில் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. அம்மன் வழிபாட்டுக்குரியதாகக் கருதப்படும் சில முக்கிய நாட்களின் போது வழிபாட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது.
இக்கோவிலில் வழிபடும் ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், சமயவிளக்குத் திருவிழாவின் போது, பெண் வேடமிட்டுக் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டு நன்றி தெரிவிப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். சிலர் சமயவிளக்குத் திருநாட்களில் பெண் வேடமிட்டு வந்து வேண்டி வழிபடுவதும் உண்டு.
குருத்தோலைப் பந்தல் :
இக்கோவிலின் பழங்கால வரலாற்றையும், சிறப்பையும் நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குருத் தோலைப் பந்தல் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, ஆலயத்தின் பழங்காலக் கோவில் அமைப்பின் மாதிரி வடிவம் குருத்தோலைகளால் உருவாக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இக்குருத்தோலைப் பந்தல் விழாவின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இறைவியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில், கேரளாவில் அனைத்து அம்மன் கோவில்களிலும் நடத்தப்படும் ‘ஜீவதா எழுநல்லது’ எனும் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமய விளக்குத் திருவிழா :
இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின் படி மீனம் (தமிழ் பங்குனி) மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ‘சமயவிளக்கு’ எனும் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழியில் ‘சமயம்’ என்பதற்கு ‘ஒப்பனை’ என்று பொருள். ஆண்கள்... பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபடும் திருவிழா என்பதால், அது ‘சமயவிளக்குத் திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது.
இவ்விழா நாட்களில் ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள், பெண் போன்று வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வந்து விளக்கேற்றி வழிபடுவதைக் காணமுடியும். இந்நாட்களில் ஆண்களுக்குப் பெண் போன்று, அவர்களது வயதுக்கேற்றபடி பல ஒப்பனைக் கலைஞர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஒப்பனை செய்து விடுகின்றனர்.
அமைவிடம் :
கேரளாவில் கொல்லம் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குக் கொல்லம், கருநாகப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது இஞ்சிகுடி ஆதிகேசவப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
இஞ்சிகுடி ஒரு அழகிய கிராமம். இங்கிருந்த சந்தனக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரை அடைய நினைத்த மதலோலை என்ற அரக்கி, முனிவரின் தவத்தை கலைத்தாள். தவம் கலைந்து பார்த்த முனிவரின் எதிரே நின்றிருந்தாள் மதலோலை. கடும் கோபம் கொண்ட முனிவர், அவளுக்கு சாபத்தோடு தாயாகும் வரத்தையும் வழங்கினார்.
இதையடுத்து மதலோலை, கருவுற்று அம்பரன், அம்பன் என இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அசுரத் தன்மையோடு வளர்ந்தனர். பின்னர் தவத்தால் இறைவனிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற அவர்கள், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். துன்பத்தால் துடித்த மக்கள் தேவர்களிடத்திலும், தேவர்கள் சிவபெருமானிடமும் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்குப் பலன் கிடைத்தது.
அனைவரையும் அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த சிவபெருமான், தனது இடதுபாகத்தில் அமர்ந்திருந்த பார்வதி தேவியை புன்னகையோடு நோக்கினார். அவரது பார்வையின் பொருளை உணர்ந்த அன்னை, கண்டவர் மயங்கும் பேரழகு கொண்டு அசுரர்களின் முன்பு போய் நின்றாள்.
அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவளது அழகில் மதி மயங்கினர். மணந்தால் அவளைத்தான் மணப்பது என இருவரும் முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கு தோன்றினார். இரு அரக்கர்களும் அந்தப் பெண்ணை தங்களுக்கே மணம் முடித்து தர வேண்டும் என அந்த வயோதிகரிடம் கேட்டனர்.
அதைக்கேட்ட வயோதிகர் ‘ஒரு பெண்ணை எப்படி இருவர் அடைய முடியும்?. உங்களில் பலசாலி யாரோ, அவர்களுக்கே இந்தப் பெண் கிடைப்பாள்’ என்றார்.
இருவரில் யார் பலசாலி என்று அறிந்து கொள்வதற்காக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த பயங்கரமான சண்டையில், அம்பரன் தன்னுடைய தம்பி அம்பனைக் கொன்றான். வெற்றி பெற்ற மகிழ்வில் அம்பரன், அந்தப் பெண்ணை நெருங்கினான்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள்
அப்போது அன்னையானவள், காளியாக உருவெடுத்தாள். கண்ணில் கோபம் பொங்க ஆக்ரோஷமாக நின்ற அம்பிகையைக் கண்டு அம்பரன் நடுநடுங்கிப் போனான். அவளிடம் இருந்து தப்பிக்க வடக்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவனைத் துரத்திச் சென்ற காளிதேவி, தன்னுடைய சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் அசுரனின் மீது வீசினாள். ஆனால் அந்த அசுரன் அவற்றையெல்லாம் தன் கைகளில் பற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஐந்து காத தூரம் விரட்டிச் சென்ற காளி, தன் சூலாயுதத்தை ஏவினாள். சூலாயுதத்திற்கு அம்பரனால் தப்ப முடியவில்லை; இறந்து போனான்.
அசுர வதம் முடிந்தும், காளியின் கோபம் அடங்கவில்லை. இதைக் கண்ட திருமால், காளியிடம் சாந்தம் அடைந்து, முன்பு போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டும் என்று வேண்டினார். தேவியும் அப்படியே இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள்.
இறைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் மூலவரான பெருமாள் ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்ற பெயரில் சேவை சாதிக்கிறார். அவருக்கு இருபுறத்திலும் ஸ்ரீதேவி -பூ தேவி தாயார் இருக்கின்றனர். கருவறைக்கு எதிரே கருடாழ்வாரும், கருவறை முகப்பின் வலது புறம் லட்சுமி நாராயணரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மரம். இந்த விருட்சம் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரெயில் நிலையத்தில் இருந்து, ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இஞ்சிகுடி கிராமம்.
சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ளது.
இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தன் தவ வலிமையால், அனைத்து கிரகங்களையும் வென்று, தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். சீதையைக் கடத்தி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் இலங்கை சென்று இதனைக் கண்டறிந்து, ராமபிரானிடம் தெரிவித்தார். சீதையை மீட்க, ராமபிரான் இலங்கை மீது போர் தொடுத்தார்.
அந்தப் போரின் ஒரு கட்டத்தில், லட்சுமணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையை சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியை, தன் காலால் முழு பலத்தைக் கொண்டு அழுத்தினார். இதனால் வலி தாங்க முடியாத சனி பகவான், தன்னை விட்டு விடும்படி வேண்டியதுடன், ஸ்ரீராமரின் துதியையும் பாடினார். ராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர், சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார். அதே சமயம் ‘ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது’ என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார்.
இப்படி சனி பகவானை, ஆஞ்சநேயர் தன்னுடைய காலால் அழுத்தும் திருக்கோலமே மூலவராக அமையப் பெற்றத் திருத்தலம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அமைந்துள்ளது. அனுமனின் பாதம் இத்தலத்திலும், அருகேயுள்ள ஆனைமலையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆலய அமைப்பு :
ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அமைப்பில் சுதை வடிவம்கொண்ட எளிய நுழைவாசல் இருக்கிறது. ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில், தலமரமான நெல்லி மரம் காணப்படுகிறது. எதிரே கருங்கல்லில் உருவான தீப தூண் 15 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. கருவறை கோபுரம் ஐந்து கலசங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றது.
ஆலயத்தின் பின்புறம், நான்கு கால் மண்டபத்தில் புடைப்புச் சிற்ப ஆஞ்சநேயர், அவரின் பின்புறம் விஜயநகர பேரரசின் கல்வெட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்வெட்டு மண்டபம் என அழைக்கின்றனர்.

கருவறையை நேராக நோக்கினால் மூலவர் தெரிவதில்லை. உற்சவரே அழகுற காட்சி தருகின்றார். வாசல் அருகில் சென்று இடதுபுறம் நோக்கினால், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய கோலத்தில் இருக்கிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும் இந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது.
ஆஞ்சநேயரின் வால், தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சவுகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. ஒளிவீசும் அவரின் கண்கள் காருண்யத்தை வழங்குகிறது. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.
அனுமனின் காலில் உள்ள உருவம் அசுரனுடையது என்ற மற்றொரு கருத்தும் கூறப்படுகிறது. கம்ப ராமாயணத்திலும் கூட இச்சம்பவம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அனுமன் சனியை காலால் மிதித்த இடத்தின் ஐதீகம் இதுவே என்று, இப்பகுதி மக்களும், இங்கு வரும் பக்தர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.
வழிபாட்டு பலன் :
சனிதோஷம் உள்ள எவரும் இத்தலம் வந்து பெரிய ஆஞ்ச நேயரை வழிபட்டு சென்றால், தொல்லைகள் நீங்கி சுகம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு போன்றவற்றிற்கும் இந்த ஆஞ்சநேயர் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
வேலூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது, ஆம்பூர் நகரம். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தும், ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் இருக்கிறது.
மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இத்தல அம்மனிடம் நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாத பெண்கள் வேண்டிக்கொள்கின்றனர். அம்மன் வயிற்றில் முளை கட்டிய பாசிப் பயிரை வைத்து கட்டி பூஜை செய்து வேண்டிக் கொள்ள, அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதும், அவர்களுக்கு விரைந்து குழந்தை பிறப்பதும் நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
மணப்பாறையில் உள்ளது, நாகநாத சுவாமி ஆலயம். இத்தல இறைவனின் பெயர் நாகநாத சுவாமி. இறைவியின் பெயர் மாதுளாம்பிகை.
இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் நீண்ட அகன்ற திருச்சுற்று. அதன் வடக்கில் பைரவர் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கில் நவக்கிரக நாயகர்கள் சன்னிதியும், தெற்கில் நால்வர் சன்னிதியும் உள்ளன.
மேற்கு திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். அரசமர நிழலில் இளைப்பாறும் இந்த கணபதியை வேண்டி, மரத்தடியில் முட்டையையும் பாலையும் வைத்து விட்டுச் செல்கின்றனர் பெண்கள். மரத்தின் பொந்தில் குடி கொண்டிருக்கும் நாகநாதர், அந்த பாலைப்பருகி முட்டையை உறிஞ்சி செல்வது வழக்கமாம். இதனால் அந்தப் பெண்களை பற்றியிருக்கும் நாகதோஷம் விலகும் என்பது அவர்களது நம்பிக்கை.
ஆறுமுக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் மேற்கு திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரது திருமேனிகள் உள்ளன.
இறைவன் சன்னிதியை நோக்கி நாம் நடக்கும் போது, முதலில் 16 கால் மண்டபம் உள்ளது. நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, கீழ் திசையில் சூரிய-சந்திரர்கள் அருள்பாலிக்கின்றனர். துவார பாலகர்கள் இருபுறமும் கொலுவிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம்.
மண்டபத்தின் வலதுபுறம் அன்னை மாதுளாம்பிகையின் சன்னிதி உள்ளது. நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்புரியும் அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலரையும், அட்சமாலையையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரியும் அன்னையின் அழகே அழகு.
மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் இறைவன் நாகநாதசுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் மகா கணபதியும், வலது புறம் முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் மாதப் பிரதோஷம், சிவராத்திரி, மார்கழியில் 30 நாட்கள் பூஜை, கார்த்திகை சோம வாரங்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகம் காண பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று அன்னைக்கு சிறப்பு வளையல் அலங்காரமும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று வரும் பக்தர்களுக்கு வளையலை பிரசாதமாகத் தரும் பழக்கம் உள்ளது.
ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து திங்கட்கிழமைகளில் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்க, அவர்களின் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் தல விருட்சம் வில்வம்.
ஆடி மாதம் இரண்டாவது வாரம் ஆலயத்தின் எதிரே உள்ள நினைவரங்கத்தில் மூன்று நாட்கள் இசைவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
இங்கு உற்சவர் சிலைகள் இல்லை. எனவே இறைவன் இறைவி வீதியுலா வருவதில்லை. இங்குள்ள முருகப் பெருமானுக்கு சஷ்டியின் போது விசேஷ அலங்காரங்கள் நடைபெறுவதுடன் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகிறது. கார்த்திகை மாத கார்த்திகை அன்று சொக்கப்பனை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
மனதில் வேண்டும் பிரார்த்தனை பலிக்க, கார்த்திகை மாதம் 30 நாட்களில் திருச்சுற்றை 1008 முறை சுற்றி வர வேண்டும். அவ்வாறு செய்தால் நினைத்த காரியம் நிச்சயம் கைகூடும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அன்னைக்கு பவுர்ணமி அன்று அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடப்பதும் குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் இந்து அற நிலையத் துறையின் நிர்வாகத்திற்கு உட்பட்டது.
இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
விளத்தொட்டி ஊரின் நடுவே அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முருகனின் திருத்தலங்கள் பல தனித்தனிக் காரணங்களுக்காக சிறப்பு பெற்று விளங்குகின்றன.
சுவாமிமலை - முருகன் பிரணவம் உபதேசித்த தலம். திருச்செந்தூர் - சூர வதம் நடந்த தலம். முருகன் கோபம் கொண்டு குடியேறிய தலம் பழனி. முருகன் சக்திவேல் பெற்ற திருத்தலம் சிக்கல்.
இந்த வரிசையில் முருகன் தொட்டிலில் வளர்ந்த தலமாக போற்றப்படுகிறது விளத்தொட்டி என்ற தலம்.
விளத்தொட்டி ஊரின் நடுவே அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். கிழக்கு திசை நோக்கி அமைந்த இந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் பிரம்மபுரீஸ்வரர். இறைவனின் திருநாமம் இட்சுரச நாயகி என்பதாகும். இந்த ஆலயம் தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
பல நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமை கொண்ட இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், பலிபீடம் உள்ளது. அடுத்து தனி மண்டபத்தில் நந்தி உள்ளது. நந்தியைக் கடந்தால் சிறப்பு மண்டபம் இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போல் உள்ள மகாமண்டபத்திற்கு செல்லும் வாசலின் இடதுபுறம் தலவிருட்சமான வில்வ மரமும், பிரம்மா பூஜித்த லிங்கமும் உள்ளது. அதன் அருகில் பிள்ளையார் திருமேனி இருக்கிறது.
மகாமண்டபத்தின் இடதுபுறம் வேணுகோபால் பெருமாள், ருக்மணி, சத்யபாமா, கருடாழ்வார் ஆகியோர் அருள்பாலிக்கும் தனிச் சன்னிதி உள்ளது. வலதுபுறம் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கு புறம் லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை, பிரம்மா ஆகியோர் வீற்றிருக்கின்றனர். உட்பிரகாரத்தில் மேற்கு திசையில் நிருதி விநாயகர், பாலசுப்ரமணியன், வள்ளி, தெய்வானை,கஜலட்சுமி மற்றும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
கிழக்கு பிரகாரத்தில் சனீஸ்வரன், சூரியன், பைரவர் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் அம்மன் இட்சுரச நாயகி தனிக் கோவில் கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் முன் பலி பீடமும், நந்தியும் அழகுற அமைந்துள்ளன.
பிரம்மா படைப்புத் தொழில் வேண்டி, சிவபெருமானை வில்வமரத்தடியில் அமர்ந்து பூஜித்த தலம் இது. இந்த சம்பவத்தை கூறும் கல் சிற்பம் இங்கு உள்ளது. ஒரே ஆலயத்தில் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபடக்கூடிய பெருமை இந்த ஆலயத்திற்கு உண்டு.
சிவாலயமாக இந்த ஆலயம் திகழ்ந்தாலும் முருகனே இந்த ஆலயத்தில் பிரதானம். முருகப்பெருமான் குழந்தையாய் தொட்டிலில் வளர்ந்த தலம் இது. எனவே வளர் தொட்டில் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், காலப் போக்கில் மருவி விளத்தொட்டி என மாறியுள்ளது.
முருகப்பெருமான் தொட்டிலில் வளர்ந்ததால், இவ்வூர் மக்கள் தங்கள் வீட்டு குழந்தை களை பிறந்து 10 நாட்கள் வரை தொட்டிலில் போடுவதில்லை தூளியில் போட்டுதான் தாலாட்டுகின்றனர்.
‘தொட்டில் முருகன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் இத்தல முருகப்பெருமான் இவ்வூர் மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு குழந்தை மட்டுமல்ல காவல் தெய்வமும் கூட.
நாகை மாவட்டம் பந்தநல்லூருக்கும், மணல்மேட்டிற்கும் இடையே உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ. மேற்கே சென்றால் விளத்தொட்டி திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, மணல்மேடு, பந்தநல்லூர், திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிற்றம்பலம் வர நிறைய பஸ் வசதி உள்ளது. இங்கிருந்து விளத்தொட்டி செல்ல மினி பஸ் வசதி இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் - குமார மங்கலம் சாலையில் உள்ளது இந்த காஞ்சமடை அய்யனார் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
முன் காலத்தில், நெல் மூட்டையை மாட்டு வண்டியில் அடுக்கினார், ஒரு விவசாயி. ஆனால் வண்டியின் முன் பகுதியில் பாரம் குறைவாக இருந்தது. எனவே ஒரு பெரிய கல்லை எடுத்து முன்பகுதியில் வைத்தார். பிறகு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். வழியில் அந்தக் கல் ஒரு திடலில் விழுந்தது. விழுந்த கல்லை மீண்டும் எடுக்க முயன்றார் விவசாயி. ஆனால் முடியவில்லை.
சிலரை துணைக்கு அழைத்தார். பல பேர் இணைந்தும் அந்தக் கல்லை அசைக்க முடியவில்லை. அது தெய்வ சக்தி மிகுந்த கல் என்று, ஒரு சிற்பியை அழைத்து வந்தனர். அவர் அந்தக் கல்லில் ஒரு சிலையை வடித்தார். ஒரு உருவம் கிடைத்தது. அதே இடத்தில் ஓலைக் குடிசை போட்டு ஆலயம் அமைத்தனர். அதுதான் அய்யனார் ஆலயம்.
ஓலைக் குடிசை என்பதால் அது சேதமடைந்து விட்டது. அதனால் அய்யனார், மழையில் நனைந்தார்; வெயிலில் காய்ந்தார்.
ஒரு நாள் அந்த பகுதி விவசாயி ஒருவரின் கனவில் தோன்றிய அய்யனார், “வயல்வெளித் திடலில் கேட்பாரற்று நான் கிடக்கிறேன். எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். உங்கள் ஊரைக் காப்பவன் நான்” என்றார்.
திடுக்கிட்டு விழித்த விவசாயி, நடந்ததை ஊர் மக்களிடம் கூறினார். ஊர் மக்கள் ஒன்று கூடி வயல் வெளிகளுக்கு இடையே திடலில் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கொண்டிருந்த அந்தச் சிலையைப் பார்த்தனர். அனைவரும் ஒன்று கூடி அய்யனாருக்கு ஆலயம் கட்டி முடித்தனர்.

ஆலய அமைப்பு :
திருச்சிற்றம்பலம் - குமார மங்கலம் சாலையில் உள்ளது இந்த காஞ்சமடை அய்யனார் ஆலயம். மேற்கு திசை நோக்கிய கோவில் முகப்பில் மகாமண்டபம். அதன் எதிரே யானை மற்றும் பலிபீடம் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப வாசலில் பிள்ளையார் திருமேனி இருக்கிறது.
கருவறையில் புராண அய்யனார் சிலையுடன், புதிதாக பிரதிஷ்டை செய்த அய்யனார் சிலையும் இணைந்திருக்கிறது.
ஆலயத்தின் வெளியே, கருவறைக்கு எதிரே பெரிய குதிரைச் சிலை உள்ளது. அருகே சங்கிலி கருப்பண்ணன் திருமேனி காணப்படுகிறது. ஆலயத்தின் வலது புறம் வீரன் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். தினசரி மாலை சூரியன், தன் பொற்கதிர்களால் அய்யனாரை தழுவுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
தினசரி இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. விநாயக சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் மாதப் பிறப்புகள், நவராத்திரி, சிவராத்திரி, மாசி மகம் போன்ற நாட்களில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு செல்லும் ஊர்மக்கள், முதலில் இங்கு வந்து அய்யனாரை தரிசித்துவிட்டு, பின்னரே இரு முடிகட்டும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வெளி நாட்டிற்கு பணி நிமித்தம் செல்வோர் இங்கு வந்து அய்யனாரை தரித்த பின்னரே புறப்படுகின்றனர்.
தங்களது கோரிக்கைகளை அய்யனாரிடம் சமர்ப்பிக்கும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை பலித்ததும் இறைவனுக்கு சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி, திரவியப் பொடி, பன்னீர், எலுமிச்சை, தயிர், நார்த்தங்காய், ஜல திரவியம் முதலியவற்றால் அபிஷேகம் செய்து மனம் மகிழ்கின்றனர்.
எந்த துயர் வந்தாலும் தங்களை அய்யனார் காப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜமே!.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பந்தநல்லூர் செல்லும் வழித் தடத்தில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது அய்யனார் ஆலயம்.
பட்டுக்கோட்டை பரக்கலக்கோட்டையில் அமைந்துள்ள பொது ஆவுடையார் கோவில் இறைவன் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பரக்கலக்கோட்டை. இங்கு பொது ஆவுடையார் கோவில் இருக்கிறது. இத்தல இறைவன் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு சன்னிதி கிடையாது.
முன் காலத்தில் வான் கோபர், மகா கோபர் என இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ‘இல்லறம் சிறந்ததா? அல்லது துறவம் சிறந்ததா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு சொல்லும்படி சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவரோ, தற்போது பொது ஆவுடையார் ஆலயம் இருக்கும் இடத்தில் காத்திருக்கும் படியும், அங்கு வந்து தீர்ப்பு கூறுவதாகவும் சொல்லி அனுப்பினார்.
அதன்படி இரண்டு முனிவர்களும் இத்தலம் வந்து புளியமரம் ஒன்றின் கீழ் அமர்ந்தனர்.
சிவபெருமான், ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமையில், சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு, இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று முனிவர்கள் இருவருக்கும் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு சொல்வதற்காக வந்த சிவன் என்பதால் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
முனிவர்களுக்கு திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் காட்சி தந்ததால், இந்த ஆலயமும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் நடைதிறக்கப்படுவதில்லை. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடைபெறும். அப்போது திரையிட்டு இருப்பதால் இறைவனை தரிசிக்க இயலாது. 11.30 மணி அளவில் மீண்டும் நடை அடைக்கப்பட்டு, நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், ஈசனின் தீர்ப்பைப் பெற்ற இரண்டு முனிவர்களின் சன்னிதிகளில் பூஜை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் சுவாமி சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடைசாத்தப்பட்டு விடும்.
பகல் நேரத்தில் கோவில் நடை திறக்கப் படுவதில்லை. அந்த நேரங்களில் சுவாமி சன்னிதியின் கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னிதி கதவையே, இறைவனாக நினைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பின்னர் பிரகாரத்தில் இருந்தபடி ஆலமரத்தை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இத்தலத்தில் இறைவன் வெள்ளால மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோவில் நடை திறக்கப்படும் போது, வெள்ளால மரத்தின் முன் பக்கத்தின் ஒரு பகுதியில் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்கரிக்கிறார்கள். மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன் பாக சிவபெருமானின் பாதம் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது.
திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆலயத்தில் உள்ள மரத்திற்கு தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
மற்ற ஆலயங்களில் நடை அடைக்கப்படும் நேரத்தில் இந்த ஆலயம் திறக்கப்பட்டு நள்ளிரவு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பாக நடை அடைக்கப்படும். தமிழர்கள் திருநாளான பொங்கல் அன்று மட்டும் அதிகாலையில் நடை திறக்கப்படும். அன்று இத்தல இறைவனின் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பம்சமாகும்.
குரு தலம் :
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. இவர் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் இறைவனே மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். எனவே இத்தலம் குரு வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவனாக கருதப்படும் அலமரத்தின் இலையே, பிரதான பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இலையைப் பெற்று, வீட்டில் கொண்டு போய் வைத்தால் ஐஸ்வரியம் பெருகும். விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
காணிக்கை :
இந்த ஆலயத்தில் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம் காணிக்கையாக செலுத்தும் வித்தியாசமான நேர்த்திக்கடன் உள்ளது. பெண்கள் தங்களின் கூந்தல் வளர்ச்சி காண்பதற்காக இந்தக் காணிக்கையை செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் இருந்து குச்சிகளை, தங்களது கையால் கீறி எடுத்து துடைப்பமாக செய்து, அதனையே ஆலயத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே கூந்தல் வளரும் என்பது நம்பிக்கை. காணிக்கை செலுத்தப்பட்ட துடைப்பங்கள் மலைபோல் இந்த ஆலயத்தில் குவிந்து கிடக்கின்றன.
முன் காலத்தில் வான் கோபர், மகா கோபர் என இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ‘இல்லறம் சிறந்ததா? அல்லது துறவம் சிறந்ததா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு சொல்லும்படி சிதம்பரம் சென்று நடராஜரிடம் வேண்டினர். அவரோ, தற்போது பொது ஆவுடையார் ஆலயம் இருக்கும் இடத்தில் காத்திருக்கும் படியும், அங்கு வந்து தீர்ப்பு கூறுவதாகவும் சொல்லி அனுப்பினார்.
அதன்படி இரண்டு முனிவர்களும் இத்தலம் வந்து புளியமரம் ஒன்றின் கீழ் அமர்ந்தனர்.
சிவபெருமான், ஒரு கார்த்திகை மாத திங்கட்கிழமையில், சிதம்பரத்தில் பூஜைகள் முடிந்த பிறகு, இங்கு வந்து ஒரு வெள்ளால மரத்தின் கீழ் நின்று முனிவர்கள் இருவருக்கும் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பு சொல்வதற்காக வந்த சிவன் என்பதால் ‘பொது ஆவுடையார்’ என்றும், ‘மத்தியபுரீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார்.
முனிவர்களுக்கு திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் காட்சி தந்ததால், இந்த ஆலயமும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நள்ளிரவில் மட்டுமே திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பகலில் நடைதிறக்கப்படுவதில்லை. திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 11 மணிக்கு சுவாமிக்கு அலங்காரமும், பூஜைகளும் நடைபெறும். அப்போது திரையிட்டு இருப்பதால் இறைவனை தரிசிக்க இயலாது. 11.30 மணி அளவில் மீண்டும் நடை அடைக்கப்பட்டு, நந்தி, விநாயகர், பெத்த பெருமாள், ஈசனின் தீர்ப்பைப் பெற்ற இரண்டு முனிவர்களின் சன்னிதிகளில் பூஜை செய்யப்படும். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் சுவாமி சன்னிதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். சூரிய உதயத்திற்கு முன்பாகவே நடைசாத்தப்பட்டு விடும்.
பகல் நேரத்தில் கோவில் நடை திறக்கப் படுவதில்லை. அந்த நேரங்களில் சுவாமி சன்னிதியின் கதவிற்கே பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அப்போது சன்னிதி கதவையே, இறைவனாக நினைத்து மாலைகள் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். பின்னர் பிரகாரத்தில் இருந்தபடி ஆலமரத்தை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

இத்தலத்தில் இறைவன் வெள்ளால மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். இங்கு லிங்க வடிவம் கிடையாது. கோவில் நடை திறக்கப்படும் போது, வெள்ளால மரத்தின் முன் பக்கத்தின் ஒரு பகுதியில் சந்தன காப்பு சாத்தி, வஸ்திரங்கள் அணிவித்து சிவலிங்கமாக அலங்கரிக்கிறார்கள். மூலஸ்தானத்திற்குள் ஆல மரத்திற்கு முன் பாக சிவபெருமானின் பாதம் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளது.
திருமண வரம், புத்திர பாக்கியம் வேண்டும் பக்தர்கள், ஆலயத்தில் உள்ள மரத்திற்கு தாலி, தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர்.
மற்ற ஆலயங்களில் நடை அடைக்கப்படும் நேரத்தில் இந்த ஆலயம் திறக்கப்பட்டு நள்ளிரவு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் சூரிய உதயத்திற்கு முன்பாக நடை அடைக்கப்படும். தமிழர்கள் திருநாளான பொங்கல் அன்று மட்டும் அதிகாலையில் நடை திறக்கப்படும். அன்று இத்தல இறைவனின் மீது சூரிய ஒளிபடுவது சிறப்பம்சமாகும்.
குரு தலம் :
சிவபெருமானின் வடிவங்களில் ஒன்று தட்சிணாமூர்த்தி. இவர் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் இறைவனே மரத்தின் வடிவில் காட்சி தருகிறார். எனவே இத்தலம் குரு வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிவனாக கருதப்படும் அலமரத்தின் இலையே, பிரதான பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த இலையைப் பெற்று, வீட்டில் கொண்டு போய் வைத்தால் ஐஸ்வரியம் பெருகும். விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
காணிக்கை :
இந்த ஆலயத்தில் வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம் காணிக்கையாக செலுத்தும் வித்தியாசமான நேர்த்திக்கடன் உள்ளது. பெண்கள் தங்களின் கூந்தல் வளர்ச்சி காண்பதற்காக இந்தக் காணிக்கையை செலுத்துகின்றனர். தென்னங்கீற்றில் இருந்து குச்சிகளை, தங்களது கையால் கீறி எடுத்து துடைப்பமாக செய்து, அதனையே ஆலயத்தில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் தென்னங்கீற்று போலவே கூந்தல் வளரும் என்பது நம்பிக்கை. காணிக்கை செலுத்தப்பட்ட துடைப்பங்கள் மலைபோல் இந்த ஆலயத்தில் குவிந்து கிடக்கின்றன.






