என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.
    • விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
    • செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.


    பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.

    இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.

    இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும்.


    பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.

    • தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு.
    • அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

    எந்தெந்த நாட்களில் எதை எதை வாங்கி வைத்தால் நலமாக இருக்கும் வளர்ச்சி அடையும் என்றெல்லாம் பசூர் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் பிரதானமாக வெள்ளை நிறப் பொருட்கள் வாங்கினால் நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு மஞ்சள் நிற பொருட்கள் வாங்குவது நலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


    வெள்ளை நிறத்திற்கு பிளாட்டினம் வாங்கலாம். மஞ்சள் நிறத்திற்கு தங்கத்தை வாங்குங்கள் என்கிறார்கள். இதெல்லாம் ஆன்மீக ரீதியாக சரியானதல்ல. ஏற்புடையதும் அல்ல. தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளியும் வாங்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை.

    பல நூல்கள் வெள்ளியை மிகவும் உயர்வாக குறிப்பிடுகிறது. அதற்குப் பிறகு தான் தங்கத்தையே கொண்டு வருகிறது. அதனால் வெள்ளியும் வாங்கலாம். ஆனால், தங்கம் வாங்கினால் தான் நல்லது என்பது தவறு. பொதுவாக தானியங்களில் தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள்.

    அதனால் தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும் போது மரக்காவில் அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் உள்ளே வரச் சொல்வார்கள். அட்சய திருதியை அன்றைக்கு முனை முறியாத பச்சரிசி வாங்குவது நல்லது.

    (கைக்குத்தல் அரிசி தான் முனை முறியாத அரிசி) அந்த முனை முறியாத அரிசியை புடைத்து எடுத்து, பணப் பெட்டியில், பீரோவில் கொஞ்சம் வைப்பது நல்லது. அதற்கடுத்து மஞ்சள். இதில் தான் மகிமையும் உள்ளது. மஞ்சள் தான் எல்லா வகையிலும் நல்லது தரக்கூடியது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம்.

    மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு. அடுத்தது, அட்சய திருதியை விரதம் இருப்பது பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகம் உள்ளது.

    அட்சய திருதியை தினத்தன்று விரதம் இருக்க விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    உத்திர கால விரதம் என்ற நூலில் கூட, அன்றைக்கு தானம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறது. அன்னதானம் செய்யுங்கள். வஸ்திர தானம் துணி தானம் கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை கொடுக்க வேண்டும்.


    காசாக கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதை பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இவை தவிர, அட்சய திருதியை அன்றைக்கு நிதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் சொல்லி திதி கொடுக்க வேண்டும்.

    அப்படி திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்து தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம் தான். எல்லாவற்றையும் தாண்டி மனதார, வாயார, வயிறார யாராவது வாழ்த்தினால் தான் அட்சய திருதியை அன்று நமக்கு நல்லது நடக்கும். அதற்கு தானம் செய்யுங்கள்.

    • அட்சய திரிதியை தானத் திருவிழா என்றும் கூறுவர்.
    • சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதி என்பர்.

    அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். அட்சய என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள்.


    அற்புதத் திருநாள் அட்சய திரிதியை. அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.

    அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கி பயனடையலாம். உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாம்.

    ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே.


    பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிட மிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான்.

    கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, "அட்சய' என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான். பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான்.

    மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.

    இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான- தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.

    கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.

    • வாஸ்து நாள் (காலை 8.54-க்கு மேல் 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-10 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி நண்பகல் 12.14 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.51 மணி வரை பிறகு சதயம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். வாஸ்து நாள் (காலை 8.54-க்கு மேல் 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு. திருசெங்காட்டங் குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-லாபம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- சுபம்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பக்தி

    மீனம்-பாசம்

    • திருச்சாந்துருண்டை பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும்.
    • வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக்குமார சுவாமி, தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் 'திருச்சாந்துருண்டை' எனும் பிரசாதத்தை உட்கொண்டால் 4,448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நகரத்தார் மக்களின் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    அதாவது, பண்டைய காலத்தில் பூம்புகார் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளில் குடியேறிய நகரத்தார் மக்கள் பல தலைமுறைகளாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து தங்கள் குலதெய்வமான தையல் நாயகியை வழிபடுவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமை தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜிப்பர். பின்னர், பாதயாத்திரை தொடங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவிலின் கொடிமரம் முன்பு செலுத்துகின்றனர்.

    பின்னர், அம்பாள் மற்றும் சுவாமியை தரிசனம் செய்து விட்டு தங்களது புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வது வழக்கம்.

    அதன்படி, இன்று சித்திரை மாத 2-வது செவ்வாய்க் கிழமையை யொட்டி காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், பரமக்குடி, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் கோவிலில் குவிந்தனர். பின்னர், அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு குலதெய்வ வழிபாடு மேற்கொண்டனர்.

    இந்நிகழ்வை யொட்டி பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர்கள் புயல் பாலசந்திரன், செல்வி, ராஜா, விசித்திரா மேரி உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 4 வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வருவதற்காக சீர்காழி, மயிலாடுதுறை, சிதம்பரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் குவிந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

    • ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை.
    • கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன.

    சுபஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26.4.2025) சனிக்கிழமை மாலை 4.28 மணிக்கு, பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு ராகுவும், உத்ரம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.


    ராகுவும், கேதுவும், மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்வதில்லை, பின்னோக்கிச் செல்கின்றன. ஆனால் இந்த கிரகங்கள்தான் வாழ்வில் நாம் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டுகின்றன என்பதை அனுபவத்தில் உணரலாம்.

    இப்பொழுது நடைபெறும் இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக மேஷம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்கள் மிகுந்த நற்பலன்களைப் பெறுவர். மற்ற ராசிக்காரர்கள் ராகு-கேதுக்களுக்குரிய சிறப்பு வழிபாட்டையும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளையும் தேர்ந்தெடுத்து செய்தால் சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம்.

    சுமார் ஒன்றரை ஆண்டு காலம் கும்பத்தில் ராகுவும், சிம்மத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அப்பொழுது அதன் சார பலத்திற்கேற்ப உங்களுக்குரிய பலன்கள் வந்துசேரும்.

    கடகத்திற்கு அஷ்டமத்து ராகு, கும்பத்திற்கு ஜென்ம ராகு, மகரத்திற்கு அஷ்டமத்து கேது, சிம்மத்திற்கு ஜென்ம கேது என்பதால் மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். மேற்கண்ட ராசிக்காரர்கள் நாக சாந்தி செய்துகொள்வது நல்லது.

    11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்குபெயர்ச்சியாகிச் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன் பிறகு 8.10.2025 அன்று கடகத்திற்கு செல்லும் குரு உச்சம் பெற்று, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். தொட்ட காரியங்களில் வெற்றி ஏற்படும். வருமானம் உயரும்.

    6.3.2026 அன்று சனிப்பெயர்ச்சியாகி மீனத்திற்கு செல்கிறார். இதன் விளைவாக மேஷத்திற்கு ஏழரைச் சனியும், சிம்மத்திற்கு அஷ்டமத்துச் சனியும் தொடங்குகிறது. விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டமச் சனியும், கடகத்திற்கு அஷ்டமத்துச் சனியும் விலகுகிறது.

    இந்த கிரகப் பெயர்ச்சிகளை அடிப்படையாக வைத்து ராகு-கேதுக்களுக்குரிய பலன் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டு காலம் நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள நாக தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம்.

    சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2, 4, 6, 8, 12 ஆகிய இடங்களில், ராகு- கேதுக்கள் இருந்தால் திருமண வாழ்க்கை தடைப்படும். புத்திரப் பேறில் தாமதம் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுய ஜாதகத்தில் பாதசார பலமறிந்து, நவாம்சத்தில் ராகு-கேதுக்களின் நிலையறிந்து யோகபலம் பெற்ற நாளில், உங்கள் ஜாதகத்திற்கு அனுகூலம் தரும் சர்ப்ப தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அதன் மூலம் தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும்.

    ராகு சஞ்சரிக்கும் பாதசார விவரம்

    26.4.2025 முதல் 31.10.2025 வரை பூரட்டாதி நட்சத்திரக் காலில் ராகு (குரு சாரம்)

    1.11.2025 முதல் 9.7.2026 வரை சதயம் நட்சத்திரக் காலில் ராகு (சுய சாரம்)

    10.7.2026 முதல் 12.11.2026 வரை அவிட்டம் நட்சத்திரக் காலில் ராகு (செவ்வாய் சாரம்)

    கேது சஞ்சரிக்கும் பாதசார விவரம்

    26.4.2025 முதல் 27.6.2025 வரை உத்ரம் நட்சத்திரக் காலில் கேது (சூரிய சாரம்) 28.6.2025 முதல் 5.3.2026 வரை பூரம் நட்சத்திரக் காலில் கேது (சுக்ர சாரம்) 6.3.2026 முதல் 12.11.2026 வரை மகம் நட்சத்திரக் காலில் கேது (சுய சாரம்)

    • சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி சந்நிதியில் நான்கு கருட சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-9 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.37 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: திருவோணம் காைல 8.26 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி சந்நிதியில் நான்கு கருட சேவை. சென்னை ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. செம்பொனார் கோவில் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் திருவீதியுலா. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய கோவிலான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-நலம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-அன்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- நிறைவு

    மகரம்-நன்மை

    கும்பம்-சுகம்

    மீனம்-ஆர்வம்

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலையில் திருமஞ்சனம்.
    • சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-7 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 3.02 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூராடம் காைல 8.14 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலையில் திருமஞ்சனம். அலங்கார சேவை. வீரபாண்டி ஸ்ரீ கவுமரியம்மன் கருட வாகனத்தில் திருவீதியுலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணைத் தாழி சேவை. இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு. செம்பொனார் கோவில் ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-பணிவு

    கடகம்-நிறைவு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-யோகம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- சிறப்பு

    மகரம்-ஆதாயம்

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-உவகை

    • திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை.
    • திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு சித்திரை-6 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: சஷ்டி பிற்பகல் 3 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: மூலம் காலை 7.19 மணி வரை. பிறகு பூராடம்.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், சென்னை ஸ்ரீசென்னகேசவப் பெருமாள் ரதோற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர், திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-அனுகூலம்

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-வரவு

    சிம்மம்-மேன்மை

    கன்னி-தெளிவு

    துலாம்-அன்பு

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- உவகை

    மகரம்-பாராட்டு

    கும்பம்-உயர்வு

    மீனம்-விவேகம்

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடக்கும்.
    • அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசித்து செல்கின்றனர்.

    இக்கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இங்கு மூலஸ்தானத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே நடைபெறும். உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

    இதனால் மூலவர் மாரியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மனை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறும். அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதையடுத்து 5 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் தைலக்காப்பு அபிஷேகம் தொடங்கியது. இதனை முன்னிட்டு மூலவர் சன்னதி திரையிட்டு மறைக்கப்பட்டது.

    இதையடுத்து அனுக்னஞ, விக்னேஸ்வர பூஜை, தேவதானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹ வசனம், வேதிகார்ச்சனை, அக்னிகார்யம், ஜபஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றது. பின்னர், யாத்ரா தானம், க்ருஹப்ரீத்தி, கடம் புறப்பாடு நடந்தது. கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.

    அதனை தொடர்ந்து மூலஸ்தான மாரியம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருகிற ஜூன் 1-ந்தேதி வரை தினமும் காலை, மாலை தைலக்காப்பும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூன் 4-ந்தேதி வரை (48 நாட்கள்) நடைபெறுகிறது.

    • சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
    • 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    திருச்சி:

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவதலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 4.30 மணிமுதல் காலை 5.30மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து காலை 6.15மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார்.

    அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை 19-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    விழாவின் 2-ம் நாளான நாளை (19-ந்தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 20-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 21-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 22-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 23-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    24-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 25-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 28-ந்தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

    ×