என் மலர்
அமெரிக்கா
- இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன.
- வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நெவார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து இருக்கிறது. "கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம்."
"மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க நெவார்க் காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம்," என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் தெரிவித்து உள்ளது.
- தங்கள் வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பணம் பெற்றது அய்லோ
- பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை
வயது முதிர்ந்தவர்கள் காணும் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இணையதளங்கள் நடத்தும் நிறுவனங்கள் பல அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் "அய்லோ ஹோல்டிங்க்ஸ்" (Aylo Holdings) எனும் நிறுவனமும் ஒன்று.
அய்லோ, தங்களின் "போர்ன் ஹப்" (Pornhub) எனும் இணையதளத்தில் இத்தகைய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து அவர்களிடம் பணம் பெற்று, அந்த வீடியோக்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விளம்பர வருவாய் ஈட்டி வருகிறது.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான "கேர்ள்ஸ் டூ போர்ன்" எனும் வீடியோ பதிவேற்றம் செய்யும் நிறுவனத்துடன் அய்லோ ஹோல்டிங்க்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பயனர்கள் காணும் விதமாக தங்களின் போர்ன் ஹப் வலைதளத்தில் பரப்பி வந்தது.
ஆனால், "கேர்ள்ஸ் டூ போர்ன்" நிறுவனம், பெண்களை சட்டவிரோதமாக கடத்தி, மிரட்டி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தகாத வீடியோக்களை எடுத்து போர்ன் ஹப் உட்பட பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சட்டவிரோத செயல் குறித்து சில பெண்கள் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் என தெரிந்தும், 2017லிருந்து 2020 வரை கேர்ள்ஸ் டூ போர்ன் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 83 லட்சம் ($1,00,000) வரை பணம் பெற்று போர்ன் ஹப் வீடியோக்களை பரப்பியதும், அதன் மூலம் விளம்பர வருவாயாக சுமார் ரூ. 6 கோடிகள் ($7,64,000) வரை ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல பெண்கள் போர்ன் ஹப் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தும் அவற்றை அந்நிறுவனம் உதாசீனப்படுத்தியது.
இவ்வழக்கு விசாரணையில் ப்ரூக்ளின் நீதிமன்றம், அமெரிக்க அரசாங்கத்திற்கு போர்ன் ஹப், சுமார் ரூ. 15 கோடி ($1.8 மில்லியன்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சம்மதித்துள்ள போர்ன் ஹப், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தனித்தனியே இழப்பீடு வழங்கவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கவும், புகார்களை உடனுக்குடன் கவனித்து தீர்வளிக்க கண்காணிப்பாளர் ஒருவரை தங்கள் வலைதளம் சார்பாக நியமிக்கவும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.
ஆனால், பெண்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமான ஒரு நிறுவனத்திற்கு இது போதுமான தண்டனையே அல்ல என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- முன்னதாக டுவிட்டர் பெயரை எக்ஸ் என மாற்றினார் மஸ்க்
- விளம்பர வருவாய் மஸ்க் எதிர்பார்த்ததற்கு மாறாக குறைந்தது
உலக புகழ் பெற்ற உரையாடல்களுக்கான இணையவழி சமூக வலைதளமான "டுவிட்டர்" (Twitter) நிறுவனத்தை, 2022ல் உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். 2023ல் மஸ்க் அந்நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், கருத்து சுதந்திரத்தை வளர்க்கவும் பல அதிரடி முயற்சிகளை எடுத்தார். முன்னதாக "டுவிட்டர்" பெயரை "எக்ஸ்" (X) என மாற்றினார்; நிறுவன இலச்சினையை (logo) மாற்றினார்; பல உயர்மட்ட அதிகாரிகளையும், கடைநிலை மற்றும் இடைநிலை ஊழியர்களையும் பணிநீக்கம் செய்தார்; தலைமை நிர்வாக செயல் அதிகாரியை மாற்றினார். ஆனால், இதுவரை "எக்ஸ்" விளம்பர வருவாய் அவர் எதிர்பார்த்தது போல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, எக்ஸ் குறித்த தனது திட்டங்களை மஸ்க் மாற்றியமைப்பார் என தெரிகிறது.
- காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன.
- கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் வெறுப்பூட்டும் வாசகங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோவிலில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. நெவார்க் நகரில் உள்ள சுவாமிநாராயண் கோவில் சுவற்றில் எழுதப்பட்ட வாசகங்களுடனான புகைப்படங்களை இந்து- அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும், வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் இந்த வெறுப்பூட்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.
இது தொடர்பாக நெவார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளால் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
- சிறைக்கு சென்ற போது சிம்மன்ஸிற்கு வயது 22 தான் என்பது குறிப்பிடத்தக்கது
- சிம்மன்ஸ் இழந்த வருடங்களை யார் தருவார் என பயனர்கள் விமர்சிக்கிறார்கள்
அமெரிக்காவின் தென்மத்திய மாநிலம் ஓக்லஹாமா (Oklahama).
1975 காலகட்டத்தில் இம்மாநில தலைநகரமான ஓக்லஹாமா சிட்டியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நடந்த கொள்ளை முயற்சியில் கேரலின் சூ ராஜர்ஸ் (Carolyn Sue Rogers) என்பவர் கொலை செய்யப்பட்டர். இந்த வழக்கில் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) எனும் இளைஞர் மற்றும் டான் ராபர்ட்ஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிம்மன்ஸ், குற்றம் நடந்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில், தான் லூசியானா (Louisiana) மாநிலத்தில் இருந்ததாகவும், இந்த கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்றும் கூறி வந்தார்.
ஆனால், நீதிமன்றம் அவருக்கும், அவருடன் கைது செய்யப்பட்ட டான் ராபர்ட்ஸிற்கும், மரண தண்டனை வழங்கியது. சில ஆண்டுகளில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
அப்போது சிம்மன்ஸிற்கு வயது 22 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஜூலையில் இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது.
தற்போது இந்த வழக்கில் ஓக்லஹாமா மாவட்ட நீதிமன்றம், சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி தண்டனையை ரத்து செய்தது.
இதை தொடர்ந்து சிம்மன்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே "குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில்" (National Registry of Exonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராகிறார் க்ளின் சிம்மன்ஸ்.
கடந்த 2008ல் ஒரே ஒரு முறை பரோலில் வெளியே வந்தார் சிம்மன்ஸ்.
ஓக்லஹாமா மாநில குற்றவியல் சட்டத்தின்படி தவறாக குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்கள் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் ($1,75,000) வரை இழப்பீட்டு தொகை பெற முடியும்.
தற்போது கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வரும் சிம்மன்ஸ் குற்றமே செய்யாமல் 48 வருட கால சிறை தண்டனை அனுபவித்ததை குறித்து, "பொறுமைக்கும் மன உறுதிக்கும் இது ஒரு பாடம். நடக்காது என யார் கூறினாலும் நம்பாதீர்கள்; ஏனென்றால் நடக்க வேண்டியது நடக்கும் " என தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் சிம்மன்ஸ் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கும் பயனர்கள், "அவர் இழந்த வருடங்களை யார் தருவார்கள்?" என விமர்சித்து வருகின்றனர்.
- போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்தனர்
- குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என்றார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் "பிரைமரி" (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, "இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
- கடந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
- மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ந்தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.
இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- 2015 முதல் 2021 வரையிலான காலகட்டம் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது
- "முதல் குடும்பம்" அலட்சியமாக இருந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள், 42 வயதான ஆஷ்லி பைடன் (Ashley Biden).
சமூக ஆர்வலராகவும், ஆடை வடிவமைப்பு கலைஞராகவும் உள்ள ஆஷ்லி, பல சமூக நல தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இது மட்டுமின்றி, டெலாவேர் மாநில நீதி மையத்தில் (Delaware Center for Justice) கிரிமினல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஆஷ்லி பைடன் அமெரிக்க அரசுக்கு வருமான வரி பாக்கியாக ரூ.4 லட்சத்திற்கு ($5000) மேல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 1 அன்று, பிலடெல்பியா கவுன்டி பகுதியில் உள்ள பென்சில்வேனியா மாநில வருவாய் துறை, ஆஷ்லிக்கு இது குறித்து தகவல் அனுப்பியது.
ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2015 ஜனவரி 1 தொடங்கி, பைடன் அதிபராக பதவி ஏற்கும் சில தினங்களுக்கு முன்பு 2021 ஜனவரி 1 வரையுள்ள காலகட்டம் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரை இது குறித்து ஆஷ்லி பைடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
2023 டிசம்பர் 7 அன்று ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) மீதும் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"பணக்காரர்களும் உயர்ந்த இடங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களும் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான பங்கை செலுத்துவதில்லை என ஜோ பைடன் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இரு குழந்தைகளும் வருமான வரி செலுத்தவில்லை. மிக அலட்சியமாக அமெரிக்காவின் முதல் குடும்பமான பைடன் குடும்பம் இருந்துள்ளது" என பைடன் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
- செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம்- ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
- டிரோன்கள், ஏவுகணைகளை வீசி கப்பல் மீது தாக்குதல்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளனர். இதையடுத்து செங்கடல் பகுதியில் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்தனர். அதன்படி செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினர். டிரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க அமெரிக்கா புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதில் 10 நாடுகளை இணைத்து படையை உருவாக்கி செங்கடலில் கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாயிட் ஆஸ்டின், பக்ரைனில் கூறியதாவது:-
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு சர்வதேச சவாலாகும். இதற்கு புதிய பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை அறிவித்துள்ளோம்.
இதற்கான பணியில் அமெரிக்காவுடன் இங்கிலாந்து, பக்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சீஷெல்ஸ் ஆகிய நாடுகள் இணையும். சில நாடுகள் கூட்டு ரோந்து பணியை நடத்தும். மற்றவை தெற்கு செங்கடல் மற்றும் ஏமன் வளைகுடாவில் உளவுத்துறை ஆதரவை வழங்கும்
இவ்வாறு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசுக்கே சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளதாக நீதிமன்றங்கள் தெரிவித்தன
- புதிய சட்டத்தின்படி அகதிகளை மீண்டும் எல்லையில் கொண்டுவிட நீதிபதி உத்தரவிட முடியும்
வாழ்வாதாரத்தை தேடி அமெரிக்காவின் அண்டை நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மிக நீண்ட, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது பல ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக இவர்களால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் தோன்றுவதால் சட்டவிரோதமாக உட்புகுவதை தடுக்க அங்கு அரசியல் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். தேர்தல்களில் இப்பிரச்சனை வாக்குகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அம்சமாக முன்வைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31 அன்று, 2023 நிதியாண்டில் மட்டும் சுமார் 6 லட்சம் அகதிகள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து எல்லை பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை பாதுகாப்பு துறை தெரிவித்தது.
அமெரிக்க மத்திய அரசின் சட்டப்படி இவ்வாறு உள்ளே நுழைவது குற்றமாக கருதப்பட்டாலும், அமெரிக்க குடியுரிமை நீதிமன்றங்களில் சிவில் வழக்காகவே இவை விசாரிக்கப்படுகின்றன. மேலும், இது குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக அந்நாட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன.
இந்நிலையில், அகதிகளை தடுக்கும் விதமாக தென்மத்திய மாநிலமான டெக்ஸாஸ், கடுமையான சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இப்புதிய சட்டத்தினபடி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே அகதிகளை கண்டறிந்து கைது செய்யலாம். கடும் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக கருதப்படும் இதற்கு நீண்டகால சிறை தண்டனையும், சுமார் ரூ.1.50 லட்சத்திற்கும் ($2000) மேல் அபராதம் விதிக்கப்படும். மேலும், டெக்ஸாஸ் நீதிமன்ற நீதிபதிகள் அந்த அகதிகளை மீண்டும் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்று விட உத்தரவிட முடியும். மீண்டும் நுழைய முயல்பவர்களுக்கு 20 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
குடியரசு கட்சியை சேர்ந்த டெக்ஸாஸ் கவர்னர் க்ரெக் அப்பாட் (Greg Abbott), "இச்சட்டம் பேரலையாக மெக்சிகோ மற்றும் அண்டை நாடுகளிலிருந்து டெக்ஸாஸ் எல்லை வழியாக அகதிகள் வருவதை தடுக்கும்" என தெரிவித்தார்.
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இச்சட்டம் விவாத பொருளாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஜிம் நண்பர்கள் அர்னால்டை தங்கள் கொண்டாட்டங்களில் இணைத்து கொள்வார்கள்
- என்னை போல் பலரும் பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அர்னால்ட்
1965ல் ஜோ கோல்ட் (Joe Gold) எனும் தொழில்முறை உடற்பயிற்சியாளர் தொடங்கிய கோல்ட்'ஸ் ஜிம் (Gold's Gym) தொடர் உடற்பயிற்சி கூடம் அமெரிக்கா முழுவதும் பிரபலமானது.
இங்கு உடற்பயிற்சி பயின்றவர்களில் முன்னாள் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் முன்னணி ஹீரோவுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) ஒருவர்.
ஆஸ்திரியா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அர்னால்ட், ஹீரோவாக பிரபலமடையும் முன்பு போதுமான வருவாய் இல்லாமல் இருந்த போது கோல்ட்'ஸ் ஜிம் நண்பர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது தங்களின் கொண்டாட்டத்தில் அர்னால்டையும் இணைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
இதை மறக்காத அர்னால்ட் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகருக்கு அருகே உள்ள பாயில் ஹைட்ஸ் (Boyle Heights) பகுதியில் ஹாலென்பெக் யூத் சென்டர் (Hollenbeck Youth Center) எனும் சமூக நல கூடத்தில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தனது செயல் குறித்து அவர் தெரிவித்ததாவது:
நான் அமெரிக்கா வந்த போது ஜிம் நண்பர்கள் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டனர். எனக்கு பல பரிசுகளை அளித்தார்கள். அயல்நாட்டை சேர்ந்தவனாக கருதாமல் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நடத்தினர். அழகான கிறிஸ்துமஸ் மரம் செய்து வைத்திருப்பார்கள். அந்த நினைவுகள் மிக இனிமையானவை. அந்த மகிழ்ச்சியை நான் பலருக்கும் மீண்டும் வழங்க நினைக்கிறேன். அதனால்தான் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த செயலை தவறாமல் கடைபிடிக்கிறேன். எனக்கு இது மிகுந்த மனநிறைவை தருகிறது. இதன் மூலம் பலரும் இதே போன்று பிறருக்கு உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அர்னால்ட் கூறினார்.
பணம், புகழ், பதவி மற்றும் உலகெங்கும் ரசிகர்கள் என அனைத்தையும் பெற முடிந்த நிலையிலும் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் 30 வருடங்களுக்கும் மேலாக ஒரு நற்செயலை தொடர்ந்து செய்து வரும் அர்னால்டின் உதவும் மனப்பான்மை சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறது.
- விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுள்ளார் விவேக்
அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களமிறங்க உள்ள நிலையில், அவரை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி நாடெங்கிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
சில மாநிலங்களில் டிரம்ப் மீது பதிவாகி உள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது அரசியல் பயணம் அமையும் என்பதால், குடியரசு கட்சியில் டிரம்பிற்கு மாற்றாக உள்ள வேட்பாளர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓஹியோ (Ohio) மாநில தொழிலதிபர் விவேக் ராமசாமி (38) தனக்கு ஆதரவு தேடும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற யேல் (Yale) சட்ட கல்லூரியில் பட்டம் பெற்ற விவேக்கின் நிகர சொத்து மதிப்பு $630 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
மிக கடுமையாக பிரசாரம் செய்து, அமெரிக்கா சந்திக்கும் சவால்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ள தன் வசம் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவரித்து நாடெங்கிலும் விவேக் பயணம் செய்து வருகிறார்.
சனிக்கிழமையுடன் நிறைவடைந்த கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 42 பிரசார கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார் விவேக் ராம்சாமி. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் மற்ற எந்த வேட்பாளர்களையும் விட விவேக்கின் பிரசார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் 38 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் விவேக்.
ஓய்வின்றி உழைக்கும் அவருக்கு சக்தியாக விளங்குவது எது என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த விவேக், "நாட்டை குறித்து அக்கறையுடன் என் பிரசாரங்களுக்கு வந்து என் பேச்சை கேட்க காத்திருக்கும் மக்களின் சக்திதான் எனக்கு ஊக்க சக்தி.
மக்களிடமிருந்து விலகி செல்லாமல் பிரசாரம் செய்வதுதான் எந்த மக்களுக்கு பிரதிநிதியாக விரும்புகிறோமோ அவர்களுக்கு பொறுப்பாக இருப்பதை உணர்த்தும் வழி. தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்கள் உணர்வை புரிந்து கொள்ள முடியும் என நான் நம்பவில்லை.
அதிர்ஷ்டம் எனும் சொல்லிற்கான எழுத்துக்கள், "உ, ழை, ப், பு" என என் பெற்றோர் கூறிய அறிவுரைதான் எனக்கு கல்வியிலும், பணியிலும், தொழிலிலும், அரசியலிலும் பயனளித்து வருகிறது. " என விவேக் தெரிவித்தார்.
விவேக்கின் நீண்ட நாள் நண்பர்கள், நாளில் 16 மணி நேரம் வரை உழைக்க தயங்காத விவேக், ஓய்வெடுப்பதற்காக தனியே நேரம் ஒதுக்கியதே இல்லை என அவரது உழைக்கும் திறன் குறித்து தெரிவிக்கின்றனர்.
ஓடுதல், டென்னிஸ், புஷ்-அப் (push-up) ஆகியவை விவேக் தவறாமல் செய்து வரும் உடற்பயிற்சிகள்.






