என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • ரஃபா நகரில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் இலக்கு நிறைவடையும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.

    ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.

    இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.
    • எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டி உள்ளது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போர் 6 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டேர் பலியாகி உள்ளனர்.

    போரில் காசா பகுதி கடுமையாக சேதம் அடைந்துள்ளன. ஏராளமான கட்டிடங்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.

    சமீபத்தில் காசாவின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவை சுற்றி கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டு வீச்சில் ஆஸ்பத்திரி கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் ஆஸ்பத்திரிக்குள் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. சில நாட்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு இருந்த இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் அங்கிருந்து வெளியேறியது.

    ஏற்கனவே அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய தாக்குதல்களால் முற்றிலும் முடங்கியுள்ளது.

    இந்நிலையில் அல்-ஷிபா ஆஸ்பத்திரி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம், எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, காசாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக உள்ள அல்-ஷிபா ஆஸ்பத்திரி, சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு மனித கல்லறைகளுடன் காலியாக உள்ளது. அங்கு பலரது உடல்கள் கிடக்கின்றன.

    மருத்துவமனை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பெரும்பாலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அல்லது சாம்பலாகிவிட்டன. குறுகிய காலத்தில் குறைந்தபட்ச செயல்பாட்டை மீட்டெடுப்பது கூட முடியாத செயலாக உள்ளது.

    எஞ்சியிருக்கும் கட்டிடங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆராய வேண்டி உள்ளது என்றார்.

    அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மருத்துவ கருவிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது.
    • பிரதமர் பதவி விலகக் கோரி இஸ்ரேலில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தைக் கடந்துள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    டெல் அவிவ் நகரில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரி கோஷங்கள் எழுப்பினர். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
    • தவறுதலாக தாக்குதல் நடத்தி விட்டோம் என்று இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

    காசா மீதான இஸ்ரேல் போரில் வான்வழித் தாக்குதலில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் 2 பேரை நீக்கம் செய்து இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 பேரை கண்டித்துள்ளதாகவும் தெரிவித்தது.

    • காசாவுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிப் பொருட்கள் கிடைக்க அமெரிக்கா வலியுறுத்தல்.
    • இஸ்ரேல்- காசா முனை இடையிலான எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் ஒப்புதல்.

    ஹமாஸ்க்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்மட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் காசா மக்கள் கடுமையான வகையில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஆனால், காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் பெரும்பாலான எல்லைகளை அடைத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் உதவிபுரியம் நபர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மக்களை பாதுகாப்பதற்கான போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை இஸ்ரேலை விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உடன் டெலிபோனில் பேசினார். அப்போது காசா மக்களுக்கு கூடுதல் மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதன்அடிப்படையில் எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் பாதுகாப்பு கேபினட் அனுமதி அளித்துள்ளது. இந்த எல்லை இஸ்ரேல்- காசா முனை இடையே உள்ளது. இந்த எல்லை வழியாக மக்கள் காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல முடியும்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த எல்லையை இஸ்ரேல் மூடியது. மக்கள் இந்த எல்லையை கடக்கவும், இந்த எல்லையின் வான்வழியை பயன்படுத்தவும் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் கூடுதல் மனிதாபிமான உதவிகள் காசாவிற்கு கிடைக்கும் வகையில் இந்த எல்லை திறந்து விடப்படுகிறது.

    அதேபோல் அஷ்தோத் துறைமுகத்தையும் பயன்படுத்த பாதுகாப்பு கேபினட் ஒப்பதல் அளித்துள்து.

    எரேஸ் எல்லை பெய்ட் ஹனோன் எனவும் அழைக்கப்படுகிறது. எரேஸ் எல்லை மக்கள் செல்வதற்காகவும், கெரேம் ஷலோம் பொருட்கள் கொண்டு செல்வதற்காவும் பயன்படுத்தப்பட்டது வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • =பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    • இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

    டெல்அவில்:

    பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.

    டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர். இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.

    டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.

    • காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
    • ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 5-வது மாதத்தை நெருங்கி உள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே காசாவின் தெற்கு நகரமான ரபாவில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் உள்ளனர். எகிப்து எல்லையில் உள்ள அந்த நகரில் சுமார் 15 லட்சம் மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரபா நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. அங்கு மக்களுடன் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் ரபா நகரில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது.


    மக்கள் அடர்த்தி நிறைந்துள்ள பகுதியில் தாக்குதல் நடத்தினால் மேலும் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் ரபா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா, ஐ.நா.ஆகியவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாசை அழிக்கும் நோக்கத்தில் ரபா மீதான தாக்குதல் முக்கியமானது என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரபா நகருக்குள் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது ராணுவத்துக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ரபா நகருக்குள் நுழைய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தயாராகி வருகிறார்கள். மேலும் ரபா நகரில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.


    ஏற்கனவே வீடுகளை இழந்து உணவு, தண்ணீர், மருந்து ஆகியவை கிடைக்காமல் தவித்து வரும் காசா மக்களுக்கு ரபா மீதான தாக்குதல் திட்டம் மேலும் துன்பத்தை கொடுக்கும்.

    தரைவழித் தாக்குதலுக்கு உதவியாக ரபா மீது வான் வழித்தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அடி சுஹ்ரி கூறும்போது, காசாவில் இனப்படுகொலை குற்றங்களை அதிக அளவில் நடத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் சூழ்ச்சி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

    • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

    நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இதைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் வான் வழியாகவும், தரை வழியாகவும் இஸ்ரேலிய ராணுவப்படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளனர்.

    லெபனான் தாக்குதலில் பலியானவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மேக்ஸ்வெல் (31) என்றும், இந்தத் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
    • பணிபுரிந்து வந்த ஏழு வெளிநாட்டினர் காயம் அடைந்தனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

    பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜார்ஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு, ஜிவ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ×