என் மலர்tooltip icon

    சீனா

    • சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அமெரிக்கா அறிவித்தது.
    • சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவுக்கு பதிலடியாக சீனாவும் வரிகளை விதித்தது. இதனால் மற்ற நாடுகளின் வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்துவதாவும், சீனாவுக்கான வரிவிதிப்பை 245 சதேவீதமாகவும் அதிகரித்து அமெரிக்கா அறிவித்தது.

    பதிலடியாக அமெரிக்காவுக்கான அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இந்நிலையில் வரிச் சுமையை குறைப்பதாக கூறி சீனாவுடன் வர்த்தகத்தை நிறுத்தும்படி மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் 'சீனாவின் நலன்களைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு தரப்பினரும் அமெரிக்காவுடன் (வர்த்தக) ஒப்பந்தத்தை எட்டுவதை உறுதியாக எதிர்க்கிறோம்" என்று சீனா தெரிவித்துள்ளது.

    சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சீனா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, மேலும் பல பரஸ்பர எதிர் நடவடிக்கைகளை எடுக்கும்' என்று தெரிவித்துள்ளது. இவ்விரு வள்ளலரசுகளின் வர்த்தக போருக்கு இடையில் மற்ற நாடுகள் இரு தரப்பில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றன.

    • இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹூவாய் (Huawei) தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10G ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த பகுதி தலைநகர் பெய்ஜிங்கிற்கு அருகில் அமைந்துள்ளது. இது சீனாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

     வெளியிடப்பட்ட தகவலின்படி, நெட்வொர்க்கில் உண்மையான பதிவிறக்க வேகம் 9834 Mbps ஐ எட்டியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் பதிவேற்ற வேகம் 1008 Mbps ஆக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 ஜி இணைய சேவை மூலம் 2 மணி நேர படத்தை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

    இந்த சேவையானது அதி நவீன 50 ஜி பேசிஸ் ஆப்டிகலி நெட்வொர்க் தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீனாவின் மற்ற மாகாணங்களிலும் இந்த 10ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 5G சேவையே தற்போது தான் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சீனாவில் 10G சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.  

    • சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
    • இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது

    அமெரிக்காவுடன் மோதலுக்கு மத்தியில் இந்தியர்களுக்கு 3 மாதத்தில் 85 ஆயிரம் விசாக்களை வழங்கிய சீனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது

    சீன அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் ஏப்ரல் 9-ந்தேதி வரை 85 ஆயிரம் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக சீன தூதர் சூ பீஹோங்கின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, "ஏப்ரல் 9-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள சீன தூதரகங்கள் இந்த ஆண்டு சீனாவுக்குச் செல்லும் இந்திய குடிமக்களுக்கு 85,000-க்கும் மேற்பட்ட விசாக்களை வழங்கி உள்ளன.

    சீனாவைப் பார்வையிடவும், பாதுகாப்பான, துடிப்பான, நேர்மையான மற்றும் நட்பு சீனாவை அனுபவிக்கவும் அதிகமான இந்திய நண்பர்களை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.

    இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் செல்லும் இந்த 85 ஆயிரம் பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆவர்.

    மேலும் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை சீனா தளர்த்தியுள்ளது. இந்தியர்களை ஈர்க்கும் முயற்சியாக, சீனா இந்த தளர்வை அறிவித்துள்ளது.

    அதன்படி எந்த ஆன்லைன் முன்பதிவுகளும் இல்லாமல் வேலை நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். இந்தியர்களுக்கு விசா கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் விண்ணப்பிக்கும் விசாக்கள் தற்போது மிக விரைவாக அங்கீகரிக்கப்படுகின்றன.

    அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு 90 நாட்கள் வரி விலக்கு அறிவித்தார். அதேவேளையில் சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.

    இதனால் இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவுக்கு சீனா விசா சலுகைகளை அறிவித்துள்ளது. இது இந்தியா-சீனா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. வரி விதிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பலத்த சூறாவளி வீசியதால் 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.
    • உடல் எடை 50 கிலோவுக்கு குறைவான நபர்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

    பீஜிங்:

    சீன தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாளாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

    இதையடுத்து, பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. ரெயில், பஸ் சேவை பாதிக்கப்பட்டன.

    பீஜிங்கில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. வாகனங்கள், கடைகள், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    உடல் எடை 50 கிலோவுக்கும் குறைவான நபர்கள் சூறாவளி காற்றால் தூக்கி வீசப்படக் கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியது.

    • பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பு.
    • 216 மில்லியன் பவுண்டுகள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2200 கோடி) செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

    சீனாவில் ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பு. 216 மில்லியன் பவுண்டுகள் (அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2200 கோடி) செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும் பயண நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு நிமிடமாகக் குறையும். ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடகலை சாதனையாகும்.

    பாலத்தின் எஃகு டிரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டன் எடை கொண்டவை. மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமான எடை கொண்ட இந்த எஃகு டிரஸ்கள் இரண்டே மாதங்களில் நிறுவப்பட்டன.

    சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கும்.

    2016 ஆம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன்ஜியாங்கில் கட்டப்பட்டது, இது வியக்கத்தக்க வகையில் 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    • சீனா 84 சதவீதம் வரி விதித்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருந்தது.
    • அதற்கு அமெரிக்கா 145 சதவீதம் வரியை உயர்த்தியது. இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    ஏப்ரல் தொடக்கத்தில் அதை நடைமுறைப்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்தார். அதேபோல் சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கும் வரி விதித்தார்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வரி விதிப்புக்கு எதிர்வினையாற்றவில்லை. ஆனால், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகரித்து வருகிறது.

    இதனால் கோபம் அடைந்த டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்தார். இதற்கும் சீனா பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதித்துள்ளது.

    முன்னதாக 84 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடமும் சீனா முறையிட்டுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு தடைவிதித்துள்ளது. இந்த விசயம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.

    • சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும்

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா எதிர் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா வரியை 145 சதவீதமாக கூட்டியது. மாறி மாறி வரிகளை விதித்து வருவதால் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் வலுத்துள்ளது.

    மற்ற நாடுகளிடம் அமெரிக்காவின் வல்லாண்மைக்கு எதிராக ஒன்று சேர சீனா அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையே உலகம் முழுவதும் மார்க்கெட் கொண்ட அமெரிக்காவில் தயாராகும் ஹாலிவுட் படங்கள் ரிலீசுக்கு சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    சீனாவின் தேசிய திரைப்பட நிர்வாகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹாலிவுட் திரைப்படங்களின் வெளியீட்டை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

    அதன் அறிவிப்பில், "சீனா மீதான வரிகளை துஷ்பிரயோகம் செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் தவறான நடவடிக்கை, அமெரிக்க திரைப்படங்கள் மீதான உள்நாட்டு பார்வையாளர்களின் ஆதரவு குறைய வழிவகுக்கும்.

    நாங்கள் சந்தை விதிகளைப் பின்பற்றுவோம், பார்வையாளர்களின் விருப்பத்தை மதிப்போம். ஆனால் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க படங்களின் எண்ணிக்கையை மிதமாகக் குறைப்போம்" என்று கூறியது. இதனால் சீனாவில் ஹாலிவுட் படங்களுக்கு இருந்த சந்தை வெகுவாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    நிங்போ:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, தைவான் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 12-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஹாங்காங் வீரர் லீ செக் யூ உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 18-21, 10-21 என தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.

    ஏற்கனவே, எச்.எஸ்.பிரனோய் இந்தத் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    நிங்போ:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் எஸ்தர் நுருமி வர்தயோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • இன்று முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
    • 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதித்தார்.

    அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.

    34 சதவீத வரி விதிப்புக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கவுக்கு 34 சதவீத வரியை விதித்தது. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார். ஆனால் டிரம்ப்புக்கு அடிபணிய மறுத்த நிலையில் சீனா மீது 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதுவும் உடனே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.

    இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே விதித்த 34 சதவீத வரியை 84 சதவீதமாக சீனா தற்போது உயர்த்தி உள்ளது. இந்த 84 சதவீத வரிவிதிப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

    இவ்வாறு போட்டி போட்டு இரண்டு வல்லரசுகளும் வரி விதித்துக்கொள்வதால் டிரம்ப் தொடங்கிய சர்வதேச வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    • சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது.
    • அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.

    இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமரிக்கா புதிய வரிகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வரும் சூழலில் சீனா அமெரிக்கா மீது பதிலுக்கு இறக்குமதி பொருட்களுக்கு 34% வரி விதிப்பதாக அறிவித்தது.

    வரும் 10 தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தது. இதனால் சூடான டிரம்ப், சீனா உடனைடியாக தனது வரியை திரும்பப்பெறவில்லை என்றால் பதிலுக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதிப்பேன் என்று மிரட்டினார்.

    இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சீனா - இந்தியா பொருளாதாரம், வர்த்தக உறவு, பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் கட்டணப் போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அனைத்து நாடுகளும் விரிவான ஆலோசனையின்படி கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும். அனைத்து வகையான ஒருதலைப்பட்சம் மற்றும் பாதுகாப்புவாதத்தை கூட்டாக எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    ×