என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

Petrol Diesel| தி.மு.க கூட்டணியினர் பீதியை கிளப்பியதால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம்- அண்ணாமலை
- போர் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- த.வெ.க தொடர்பான பா.ஜ.க நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை.
கோவை:
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விளாத்திகுளம் சிறுமி மாயமான 10-ந்தேதி சிறுமியின் பெற்றோர் குளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க சென்றுள்ளனர். அவர்கள் விளாத்திகுளம் மகளிர் காவல்நிலையம் செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் அங்கும் புகாரை ஏற்காமல் அலட்சியம் செய்துள்ளனர். மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்ற பகுதியிலேயே சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்கலாம்.
இது காவல்துறையின் தோல்வி என்பதை விட முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படும் காவல்துறை நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் வெட்கி தலைகுனிய வேண்டும்.
பெட்ரோல் கிடைக்காது என்று தி.மு.க, கூட்டணி கட்சியினர் வதந்தியையும், பொய்யையும் பரப்பி மக்களை வீதியில் நிறுத்தியுள்ளனர். மத்திய அரசு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. நமது உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி உயர்ந்து இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார். வெளிநாட்டில் இருந்து கப்பலில் எரிபொருள் வருகிறது.
போர் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.
தி.மு.க. கூட்டணியினர் பீதியை கிளப்பியதால் தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கேன்கள், பாட்டிலகளில் அவர்கள் பிடித்து சென்றனர். தமிழக மக்களை பெட்ரோல் பங்குகளில் நிற்க வைத்துள்ளது தி.மு.க அரசு. தமிழகம் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இப்படிப்பட்ட நிலைமை காணப்படவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் 8,008 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தினர் நடத்திய கூட்டம் குறித்து நான் கருத்து கூற முடியாது. என்னை பொறுத்தவரை விஜயை பற்றி நான் இதுவரை பேசிய கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. நான் அப்படியே தான் இருக்கிறேன்.
த.வெ.க தொடர்பான பா.ஜ.க நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது.
தி.மு.க கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 3 தொகுதி கூடுதலாக உயர்த்தி கொடுக்கிறபோது எங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள். அதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என சி.பி.ஐ. தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
வைகோ மிகவும் கஷ்டப்பட்டு சிரித்து கொண்டிருக்கிறார். வெறும் 4 தொகுதிகள் வாங்கி விட்டு சென்றுள்ளார். எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டார். வைகோவை இப்படி பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது.
தி.மு.க கொடுக்கும் 5 தொகுதிகளை திருமாவளவன் நிச்சயம் ஏற்கமாட்டார். தி.மு.க கூட்டணியில் இருந்து திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியேற வாய்ப்புள்ளது.
தி.மு.க கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு முன்பு நிறைய மாற்றம் வரும். டீயும் டீயும், காபியும் சேருமா என்று கேட்கிறீர்கள்.
பொதுஎதிரியை வீழ்த்துவதற்கு அனைவரும் ஒன்று சேர்வது தமிழக அரசியலில் நடந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு வரை கடைசி நேரத்தில் கூட திருப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க அரசை தூக்கி எறிய வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க தொண்டர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க.வி.னர் அகங்காரமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






