என் மலர்
விளையாட்டு
சென்னை:
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்னும், ரோகித் சர்மா 43 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரசல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தாவுக்கு தொடக்கம் நன்றாக இருந்தது. சுப்மன்கில் 33 ரன்னும், திரிபாதி 5 ரன்னும், மார்கன் 7 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.
தொடக்க வீரர் நிதிஷ் ரானா 52 ரன்னில் அவுட் ஆன பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்த 4 விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் கைப்பற்றி அசத்தினார்.
கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய போல்ட், 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆந்த்ரே ரசல் (9 ரன்) கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் மும்பை 10 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
கொல்கத்தா முதல் தோல்வியை சந்தித்தது வெற்றி குறுத்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
பல்வேறு கட்டங்களில் பந்துவீச வந்த ஒவ்வொரு வரும் அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினர். இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய நம்பிக்கையை எடுத்து கொள்ள முடியும்.
நிறைய நேர்மறையான விஷயங்கள் இருந்தன. கொல்கத்தா அணி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது அவர்கள் பவர்-பிளேயில் அற்புதமாக பேட்டிங் செய்தனர். ஆனால். பவர்-பிளே முடிந்த பிறகு ராகுல் சாகர் பந்துவீச வந்ததால், அவர் விக்கெட் எடுத்த விதம் மிக முக்கியமானது.
இறுதியில் குர்ணல் பாண்ட்யாவும் சிறப்பாக செயல்பட்டார். உண்மையில் நான் எல்லா பந்து வீச்சாளர்களையும் பாராட்டுவேன். அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல நல்ல அறிகுறி தெரிகிறது.
சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது.
நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் தொடங்கிய விதத்தில் சிறப்பாக பேட்டிங்கை செய்திருக்க வேண்டும். இதுபோன்று இரண்டு முறை நடந்துள்ளது. இதில் எப்படி முன்னேறுவது என்பதை பார்க்க வேண்டும்.
சூர்யகுமார் யாதவ் அச்சமின்றி விளையாடுகிறார். அவர் அடிக்கும் ஷாட்டுகளை பார்க்கும் போது ரிஸ்க் எடுத்து ஆடியதுபோல் தெரியவில்லை.
கடைசி 5 ஓவரில் இன்னிங்சை எவ்வாறு முடிப்பது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை நாங்கள் கடந்த காலத்தில் செய்துள்ளோம் என்றார்.
கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறும் போது, இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நிறைய நேரம் நன்றாக விளையாடி இருக்கிறோம்.
முதல் பாதி மற்றும் சேசிங்கில் பெரும்பாலும் நன்றாக விளையாடினோம். அதன்பின் தவறுகளை செய்தோம். அதில் இருந்து வெளியே வருவோம் என்று நம்புகிறேன் என்றார்.

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுகளில் ஒன்றான இந்திய ஓபனில் பங்கேற்க சீனா உள்பட 33 நாடுகளை சேர்ந்த 228 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். விலகலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 19-ந்தேதியாகும். மறுநாள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
ஒலிம்பிக் சாம்பியனும், 3 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரின் (ஸ்பெயின்), நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து (இந்தியா), அகானே யமாகுச்சி (ஜப்பான்), அன் சி யங் (தென்கொரியா), போர்ன்பவீ சோச்சுவாங் (தாய்லாந்து) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும், 2 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான கென்டோ மோமோட்டா (ஜப்பான்), நடப்பு சாம்பியன் விக்டர் ஆக்சல்சென், ஆண்டர்ஸ் அன்டோன்சென் (இருவரும் டென்மார்க்), ஆல்-இங்கிலாந்து சாம்பியன் லீ ஜியா ஸி (மலேசியா), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் , சாய் பிரனீத், பிரனாய், காஷ்யப் (இந்தியா) உள்பட முன்னணி வீரர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்தியா மட்டும் மொத்தம் 48 பேரை களம் இறக்குகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி போட்டி நடைபெறும் என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் தென்ஆப்பிரிக்கா, பிரேசில், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் வீரர் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். மற்ற நாட்டு வீரர்கள் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், மே 3, 6, 9, 14-ந்தேதிகளில் டெல்லி அரசு சார்பில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் கூறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதத்துக்கான (மார்ச்) சிறந்த வீரர் விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. வாக்கு அகாடமியின் அதிக ஆதரவை பெற்றதன் அடிப்படையில் புவனேஷ்வர்குமார் சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான புவனேஷ்வர்குமார் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடரில் அசத்தியதன் மூலம் இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த விருதை தொடர்ச்சியாக பெறும் 3-வது இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் ஆவார். ஏற்கனவே ஜனவரி மாதத்தில் ரிஷாப் பண்டும், பிப்ரவரி மாதத்தில் ஆர்.அஸ்வினும் இந்த கவுரவத்தை பெற்றனர். இதே போல் சிறந்த வீராங்கனை பட்டியலில் இடம் பெற்று இருந்த தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசல் லீ, இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத் ஆகியோரில் இருந்து லிசல் லீ் விருதை தட்டிச்சென்றார்.









