search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா - ராகுல் சாகர் - போல்ட்
    X
    ரோகித் சர்மா - ராகுல் சாகர் - போல்ட்

    வெற்றிக்கான பெருமை பந்துவீச்சாளர்களையே சேரும் - கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

    சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    சென்னை:

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னையில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 152 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சூர்யகுமார் யாதவ் 56 ரன்னும், ரோகித் சர்மா 43 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரசல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தாவுக்கு தொடக்கம் நன்றாக இருந்தது. சுப்மன்கில் 33 ரன்னும், திரிபாதி 5 ரன்னும், மார்கன் 7 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள்.

    தொடக்க வீரர் நிதிஷ் ரானா 52 ரன்னில் அவுட் ஆன பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. இந்த 4 விக்கெட்டையும் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாகர் கைப்பற்றி அசத்தினார்.

    கொல்கத்தா அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய போல்ட், 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆந்த்ரே ரசல் (9 ரன்) கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் மும்பை 10 ரன் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    கொல்கத்தா முதல் தோல்வியை சந்தித்தது வெற்றி குறுத்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    பல்வேறு கட்டங்களில் பந்துவீச வந்த ஒவ்வொரு வரும் அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினர். இந்த ஆட்டத்தில் நாங்கள் நிறைய நம்பிக்கையை எடுத்து கொள்ள முடியும்.

    நிறைய நேர்மறையான வி‌ஷயங்கள் இருந்தன. கொல்கத்தா அணி ஆட்டத்தை சிறப்பாக தொடங்கியது அவர்கள் பவர்-பிளேயில் அற்புதமாக பேட்டிங் செய்தனர். ஆனால். பவர்-பிளே முடிந்த பிறகு ராகுல் சாகர் பந்துவீச வந்ததால், அவர் விக்கெட் எடுத்த விதம் மிக முக்கியமானது.

    இறுதியில் குர்ணல் பாண்ட்யாவும் சிறப்பாக செயல்பட்டார். உண்மையில் நான் எல்லா பந்து வீச்சாளர்களையும் பாராட்டுவேன். அவர்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல நல்ல அறிகுறி தெரிகிறது.

    சென்னை ஆடுகளத்தை பொறுத்தவரை புதிய பேட்ஸ்மேன் வரும்போது, மும்பை வான்கடே போல் இல்லாமல் முதல் பந்திலேயே அதிரடி காட்ட முடியாது.

    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் தொடங்கிய விதத்தில் சிறப்பாக பேட்டிங்கை செய்திருக்க வேண்டும். இதுபோன்று இரண்டு முறை நடந்துள்ளது. இதில் எப்படி முன்னேறுவது என்பதை பார்க்க வேண்டும்.

    சூர்யகுமார் யாதவ் அச்சமின்றி விளையாடுகிறார். அவர் அடிக்கும் ஷாட்டுகளை பார்க்கும் போது ரிஸ்க் எடுத்து ஆடியதுபோல் தெரியவில்லை.

    கடைசி 5 ஓவரில் இன்னிங்சை எவ்வாறு முடிப்பது என்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை நாங்கள் கடந்த காலத்தில் செய்துள்ளோம் என்றார்.

    கொல்கத்தா கேப்டன் மார்கன் கூறும் போது, இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் நிறைய நேரம் நன்றாக விளையாடி இருக்கிறோம்.

    முதல் பாதி மற்றும் சேசிங்கில் பெரும்பாலும் நன்றாக விளையாடினோம். அதன்பின் தவறுகளை செய்தோம். அதில் இருந்து வெளியே வருவோம் என்று நம்புகிறேன் என்றார்.

    Next Story
    ×