என் மலர்
விளையாட்டு
கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி மறுபடியும் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 11-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோலடித்தார். இந்திய அணி வீரர்கள் லலித் உபாத்யாய் 25-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 58-வது நிமிடத்திலும் பந்தை கோல் வளையத்துக்குள் திணித்தனர்.
அர்ஜென்டினா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அசத்தியது. அபாரமாக செயல்பட்ட இந்திய அணியின் கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதாக் ஆட்டநாயகன் விருது பெற்றார் இந்திய அணி தொடர்ந்து 2-வது முறையாக அர்ஜென்டினாவை சாய்த்தது. முந்தைய நாளில் நடந்த ஆட்டத்தில் பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முடிவில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி (8 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. பெல்ஜியம் அணி 32 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.








மும்பை:
ஐ.பி.எல். போட்டியின் 4-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
இதில் சஞ்சுசாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளிலுமே சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் முதல் வெற்றியை எந்த அணி பெறப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சுசாம்சன், பென்ஸ்டோக்ஸ், பட்லர், கிறிஸ்மேரிஸ், ராகுல் திவேதியா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பஞ்சாப் அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க்அகர்வால், கிறிஸ்கெய்ல், நிக்கோலஸ் பூரன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுலும், அகர்வாலும் அபாரமான அதிரடியை வெளிப்படுத்தினார்கள். அதே போல் இந்த சீசனிலும் இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். பனித்துளி காரணமாக 2-வது பேட்டிங் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 12-ல், பஞ்சாப் 8-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
மும்பை:
உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிகளவில் வருமானம் கொட்டுவது ஐ.பி.எல். போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.
கொரோனா பரவல் இருந்த போதிலும் இந்த போட்டியை கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடத்தி முடித்தது.
இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். இதனால்தான் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. தற்போது 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுக்கு ஒளிபரப்பு செய்ய ரூ.16,347.5 கோடிக்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ரூ.3,600 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.
அந்த நிறுவனம் 10 வினாடிக்கு விளம்பர கட்டணமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியை விட 14 முதல் 15 சதவீதம் அதிகமாகும்.
ஆண்டுக்கு ஆண்டு ஐ.பி.எல். போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதனால் விளம்பர கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கிறது. இந்த போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.






