என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


    தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் போதுமான அளவுக்கு தைரியமாக செயல்படவில்லை. இதே போல் பீல்டிங்குக்கு களம் இறங்கிய போது வீரர்களிடம் போதுமான உத்வேகம், துணிச்சல் இல்லை. ஆனால் எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் தீவிரத்துடன் செயல்பட்டனர். 

    இந்திய அணிக்காக விளையாடும் போது நிறைய எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் எப்போதும் இருக்கும். அதை சமாளித்து தான் விளையாட வேண்டும் என்றார்.
    இந்திய அணியை பொறுத்தவரை இனி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது. அதற்காக இந்தியாவுக்கு வாய்ப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது.

    குரூப்-2-ல் பாகிஸ்தான் அணி அரைஇறுதியை எட்டுவது கிட்டத்தட்ட உறுதி. மற்றொரு அரைஇறுதி இடத்தை பிடிக்க மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்திய அணியை பொறுத்தவரை இனி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை அதிக வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும். இதே போல் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். இவ்வாறு முடிவுகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த வகையில் மட்டுமே இந்தியாவுக்கு அரைஇறுதி கதவு திறக்க வாய்ப்பு உண்டு.

    டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஷாகிப் அல் ஹசன்.
    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம்பிடித்துள்ளது.
    அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.  இந்திய வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.  அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் சேர்த்தார். 

    இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

    அதிரடியாக ஆடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். 

    வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ரன்கள் (நாட் அவுட்), கான்வே 2 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, நியூசிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

    இன்றைய வெற்றியின்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
    நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தார்.
    துபாய்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    ரோகித் சர்மா- கே.எல். ராகுல் ஜோடி அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. எனினும் இந்த புதிய வியூகம் கைகொடுக்கவில்லை. டாஸ் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடுமையாக சொதப்பினர்.

    இஷான் கிஷன் 4 ரன்களும், கே.எல்.ராகுல் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டக் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய ரோகித் சர்மா 14 ரன்களில் வெளியேறினார். அதன்பின்னர் விராட் கோலி 9 ரன்னில்  அவுட் ஆக, இந்தியா 48 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. 

    ரிஷப் பண்ட் (12), ஹர்திக் பாண்ட்யா (23), ஷர்துல் தாகூர் (0) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் குவிக்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.  நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். சோதி 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.
    3-வது ஓவரின் கடைசி பந்தில் லெக்சைடு அடித்த பந்தை ஆடம் மில்னே கேட்ச் பிடிக்க தவறியதால், ரோகித் சர்மா முதல் பந்திலேயே அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
    டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 3-வது ஓவரை டிரென்ட் பவுல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டம் இழந்தார். அவர் 8 பந்தில் 4 ரன்கள் சேர்த்தார்.

    அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். டிரென்ட் பவுல்ட் வீசிய கடைசி பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். இந்த பந்தை டிரென்ட் பவுல்ட் ஷார்ட் பிட்ச் பவுன்சராக வீசினார். ரோகித் சர்மா லெக் சைடு ஹூக் ஷாட்டாக விளாசினார். ஆனால் பந்து பவுண்டரி லைனுக்கு வெளியில் செல்லாமல் தயாராக இருந்த ஆடம் மில்னே கைக்கு சென்றது. எளிதாக பிடிக்க வேண்டிய கேட்ச்-ஐ மில்னே தவறவிட்டார். இதனால் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

    ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கினால், அதன்பின் ருத்ர தாண்டவம் ஆடுவார் என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இன்று 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
    நீணட காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி வரும் ரோகித் சர்மா, இன்று களம் இறங்காதது விராட் கோலியின் வியூகம் என கருதப்படுகிறது.
    டி20 உலக கோப்பையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ரோகித் சர்மா- கே.எல். ராகுல் அல்லது இஷான் கிஷன்- கே.எல். ராகுல் ஆகியோரில் ஏதாவது ஒரு ஜோடி களம் இறங்கும் என ரசிகர்களும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி சர்ப்ரைஸ் அளித்தது.

    கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோரை தொடக்க வீரர்களாக களம் இறக்கினார் விராட் கோலி. இது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. மேலும், நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் திகைத்தனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் உள்ளார். இவரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர். முதல் ஓவரில் லேசான ஸ்விங் இருந்தால், அது ரோகித் சர்மாவுக்கு நெருக்கடியை கொடுக்கும். இதை கணக்கில் வைத்து இந்தியா வியூகம் வகுத்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
    விராட் கோலிக்கும், டாஸுக்கும் எப்போதுமே ராசியில்லாதது இந்த போட்டியிலும் பிரதிபலிக்க, நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை கடந்த 24-ந்தேதி எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் இன்று துபாயில் நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். தோல்வியடைந்தால் அரையிறுதி வாய்ப்பு மங்கும்.

    இதனால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. 

    நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், புவிக்குப் பதிலாக இஷான் கிஷன், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
    அபுதாபி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், நமீபியா அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா 33 ரன்களும், முகமது ஷாஜத் 45 ரன்களும் சேர்த்தனர். அஸ்கர் 13 ரன்கள், கேப்டன் முகமது நபி 32 ரன்கள் அடித்தனர்.

    இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 56 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகள் சரிந்தன. முன்வரிசை வீரர்கள் சோபிக்காத நிலையில், டேவிட் வீஸ் நிதானமாக விளையாடினார். அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய அவர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, நமீபியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

    நவீன் உல் ஹக், ஹமித் ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி குரூப்-2 புள்ளி பட்டியலில்  2ம் இடத்தில் நீடிக்கிறது.
    தாயின் மோசமாக உடல்நிலை காரணமாக பாபர் அசாம் கடந்த 3 ஆட்டங்களிலும் கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் தான் விளையாடினார் என்று அவரது தந்தை சித்திக் தெரிவித்துள்ளார்.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

    அந்த அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. தொடக்க போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு அணியை நல்லமுறையிலும் வழிநடத்தி சென்றார். இதனால் 3 ஆட்டங்களிலும் வெற்றி கிடைத்தது.

    இந்த நிலையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில்தான் இந்த சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது பாபர் அசாமின் தாயார் உடல்நலக் குறைவால் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார் என்று அவரது தந்தை சித்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    களத்தில் பாபர் அசாமின் செயல்கள் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாக உங்களை நினைக்க வைக்கலாம். ஆனால் உள்ளுக்குள் அவருக்குள் இருக்கும் வலியாருக்கும் வெளியில் தெரியாது.

    எனது தேசம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை வெளிப்படுத்துகிறேன். இந்தியாவுக்கு எதிரான போட்டி நடந்த அன்று பாபர் அசாமின் தாயார் வெண்டிலேட்டரில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

    தாயின் மோசமாக உடல்நிலை காரணமாக பாபர் அசாம் கடந்த 3 ஆட்டங்களிலும் கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் தான் விளையாடினார்.

    இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியாவுடனான போட்டியை காண மைதானத்திற்கு நான் வரக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் பாபர் அசாம் பலவீனம் அடையக்கூடாது என்பதற்காக வந்தேன்.

    இந்த வி‌ஷயத்தை தற்போது பகிர்வதன் நோக்கம் காரணமில்லாமல் நமது ஜாம்பவான்களை விமர்சிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு பாபர் அசாமின் தந்தை சித்திக் சமூக வலை தளத்தில் தனது உருக்கமான பதிவில் தெரிவித்தள்ளார்.

    அவரது இந்த பதிவு சில மணி நேரங்களில் வைரலானது. ரசிகர்கள் பலரும் பாபர் அசாமை பாராட்டி வருகின்றனர்.
    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது என விராட் கோலி கூறியுள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

    2-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. ஸ்டார்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    முதல் ஆட்டத்தில் தோற்றத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹர்த்திக் பாண்ட்யா நல்ல நிலையில் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.

    ஹர்த்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஓவர் பந்து வீசுவார். அணிக்கு 6-வது பந்து வீச்சாளர் முக்கியமானதுதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-வது பந்து வீசியதால் 6-வது பவுலர் தேவைப்படவில்லை.

    பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இருந்தால் 6-வது பவுலரை பயன்படுத்தி இருப்போம். 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகள் தேவைப்படும்போது முதன்மை பந்து வீச்சாளர்ளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    ‌ஷர்துல்தாகூர் எங்களது திட்டத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். திறமை வாய்ந்த பந்து வீச்சாளரான அவருக்கு நிச்சயமாக அணியில் நிறைய மதிப்பு கிடைக்கும். அவர் அணிக்கு பெருமை சேர்ப்பார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது.

    நியூசிலாந்து அணியில் உள்ள போல்ட் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவரது பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து திட்டம் வைத்துள்ளோம்.

    இவ்வாறு விராட்கோலி கூறினார்.

    முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-நமீபியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 130 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டில் தோற்றது.

    நமீபியா முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

    புதிய இரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் கூடுதலாக அகமதாபாத், லக்னோ ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ரூ.90 கோடி ஏலத்தில் வரை ஏலத்தில் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். 3 இந்தியர், ஒரு வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் தக்க வைத்துக்கொள்ளலாம்.

    புதிய இரு அணிகளும் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை (2 இந்தியர், ஒரு வெளிநாட்டு வீரர்) தேர்வு செய்து கொள்ளலாம்.

    தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்களுக்கான சம்பள விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.42 கோடி வரை செலவிடலாம்.

    3 வீரர்களுக்கு ரூ.33 கோடியும், 2 வீரர்களுக்கு ரூ.24 கோடியும், ஒரு வீரருக்கு ரூ.14 கோடியும் செலவழிக்கலாம். மொத்தம் உள்ள ரூ.90 கோடியில் இதன் பங்களிப்பு இருக்கும்.

    ஒரு அணி 4 வீரர்களையும் ரூ.42 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டால் ஏலத்தில் ரூ.48 கோடி வரை மட்டுமே செலவழிக்க முடியும்.

    ஒரு அணியில் 4 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டால் அந்த அணியின் முதல் வீரருக்கான தொகை ரூ.16 கோடியாக இருக்கும். 2-வது, 3-வது, 4-வது வீரர்களுக்கு முறையே ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வழங்கப்படும்.

    அதே நேரத்தில் 3 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.15 கோடியாக இருக்கும். அதற்கடுத்து ரூ.11 கோடி மற்றும் ரூ.7 கோடி வழங்கப்படும். அந்த அணி ஏலத்தில் ரூ.57 கோடி வரை மட்டுமே செலவிட முடியும்.

    2 வீரர்களை தக்கவைத்தால், முதல் வீரருக்கான தொகை ரூ.14 கோடியாக இருக்கும். அடுத்த வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்படும். ஏலத்தில் ரூ.66 கோடி வரை செலவிட முடியும்.

    ஒரு வீரரை தக்கவைத்தால் ரூ.14 கோடி கொடுக்க வேண்டும். அப்போது ஏலத்தில் ரூ.74 கோடி வரை வீரர்களை வாங்கலாம்.

    8 அணிகளும் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 1 முதல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும் டிசம்பர் 1 முதல் 25-ந் தேதிக்குள் 3 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கலாம். ஜனவரி தொடக்கத்தில் ஏலம் நடைபெறும்.

    ×