என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டி20 உலக கோப்பை லீக் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அதிக பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டது.
    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகிறது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடரை சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கண்டுகளித்த பார்வையாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    தகுதிச்சுற்று மற்றும் நேற்று முன்தினம் வரை நடந்த லீக் சுற்று போட்டிகளின் முடிவில் 23.8 கோடி பார்வையாளர்களைக் கடந்து இந்த 20 ஓவர் உலக கோப்பை தொடர் சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 16.7 கோடி  பார்வையாளர்கள் கண்டு களித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 2016-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் 13.6 கோடி  பார்வையாளர்களைப் பெற்று இருந்தது.
    கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    டி20 உலக கோப்பை முடிந்த கையோடு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி 17-ந்தேதியும் (ஜெய்ப்பூர்), 2-வது போட்டி 19-ந்தேதியும் (ராஞ்சி), 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதியும் (கொல்கத்தா) நடக்கிறது.

    நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு கே.எல். ராகுல் கேப்டனாக நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விராட் கோலி

    நியூசிலாந்து தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணைக்கேப்டன்), 3. ருத்துராஜ் கெய்க்வாட், 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. சூர்யகுமார் யாதவ், 6. ரிஷாப் பண்ட், 7. இஷான் கிஷன், 8. வெங்கடேஷ் அய்யர், 9. சாஹல், 10. ஆர். அஸவின், 11. அக்சார் பட்டேல், 12. புவனேஷ்வர் குமார், 13. தீபக் சாஹர், 14. ஹர்ஷல் பட்டேல், 15. முகமது சிராஜ். 16. அவேஷ் கான்.
    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் ரவிசாஸ்திரி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஏற்றார். 2019-ம் ஆண்டில் அவரது பதவி காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு வருகிற 17-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.

    59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியை கூட எட்டவில்லை.

    அதே சமயம் அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது. 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.
    நமீபியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, டி20 அணியின் அடுத்த கேப்டன் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
    துபாய்:
     
    டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. சூப்பர் 12 சுற்று முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
     
    டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

    இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவலை விராட் கோலி நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

    நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பிறகு பேசிய விராட் கோலி, இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. ரோகித் அதற்காக காத்துக் கொண்டுள்ளார். இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது. அந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

    எனவே, இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ரோகித் சர்மா என்பதை விராட் கோலியே உறுதிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  

    டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்தியா சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    அடுத்து ஆடிய இந்தியா கே.எல். ராகுல், ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். 

    இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 37 பந்துகளில் 4 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 108 போட்டிகளில் விளையாடி 3,038 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்கள் கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

    இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 3,115 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அரைசதம் அடிக்க நமீபியா நிர்ணயித்த 133 ரன் இலக்கை 15.2 ஓவரில் எட்டி இந்தியா வெற்றியுடன் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2-வது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியது.

    நேற்றைய போட்டியில் நியூசிலாந்திடம் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம், அதிகாரப்பூர்வமாக இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பேட்டிங் செய்தது. கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ரோகித் சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல்- ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. அடுத்து கே.எல். ராகுல் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோககி அழைத்து சென்றது.

    கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 54 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 4 பவுண்டரியுடன் 25 ரன்களும் எடுக்க இந்தியா 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐந்து லீக் ஆட்டங்களில் கடைசி மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியுடன் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.
    அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்த இந்தியாவுக்கு 133 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நமீபியா.
    டி20 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்த்து விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட  20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் பிராட் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். மைக்கேல் வான் லிங்கன் 15 பந்தில் 14 ரன்கள் அடித்தார்.

    அஸ்வின்

    அடுத்து வந்த கிரேக் வில்லியம்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கேப்டன் ஜெரார்ட் எராமஸ் 20 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    டேவிட் வீஸ் 25 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். 9-வது வீரராக களம் இறங்கிய ஜான் பிரைலிங்க் 15 பந்தில் 15 ரன்களும், அடுத்து வந்த ரூபென் டிரம்பெல்மேன் 6 பந்தில் 13 ரன்களும் அடிக்க நமீபியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது.

    ஜடேஜா

    இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், பும்ரா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.
    சார்ஜா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆடத்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன் எடுத்தார்.

    இதில் 5-வது ரன்னை எடுத்தபோது ரிஸ்வான் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார்.

    20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் கிறிஸ்கெய்ல். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 2015-ம் ஆண்டு 36 ஆட்டத்தில் 1,665 ரன் எடுத்தார். சராசரி 59.46 ஆகும். இதில் 3 சதமும், 10 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 151 ரன் (அவுட் இல்லை) குவித்தார்.

    கிறிஸ்கெய்லின் 6 ஆண்டு கால சாதனையை தான் முகமது ரிஸ்வான் முறியடித்தார். அவர் 1,676 எடுத்துள்ளார். ஒரு சதமும், 15 அரை சதமும் இந்த ஆண்டில் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 104 ரன் குவித்தார். அவருக்கு இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    இதனால் இந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அவரது ரன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 79 ரன் எடுத்தார்.

    மேலும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கும் இந்த ஆட்டத்தில் சாதனை படைத்தார். அவர் 18 பந்தில் ஒரு பவுண்டரி, 6 சிக்சருடன் அரை சதத்தை தொட்டார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே இந்திய வீரர் ராகுல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 18 பந்தில் அரை சதம் அடித்து இருந்தார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 2014-ம் ஆண்டு 18 பந்தில் அரைசதம் அடித்து இருந்தார்.

    இந்த 3 பேரும் 20 ஓவர் உலக கோப்பையில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த வீரர்களில் 3-வது இடத்தில் உள்ளனர். யுவராஜ்சிங் 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருக்கிறது.
    இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக பும்ராவை நியமித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அப்போதிருந்தே, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேப்டனாக யார் பொறுப்பேற்க வேண்டும் என்று விவாதித்து வருகின்றனர். 

    துணை கேப்டனான ரோகித் சர்மாவின் பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, “இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுலின் பெயர்கள் அடிபடுகின்றன. என்னை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்த பதவிக்கு நியமித்தால் பொருத்தமாக இருக்கும். 

    அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். போட்டியை நன்றாக புரிந்து செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார். 
    முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. 

    அவ்வகையில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 

    விளையாட்டுத் துறையில்  சிறந்த பங்களிப்புக்காக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அவரது மரணத்திற்கு பிறகு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது மகள் பன்சூரி ஸ்வராஜ் பெற்றுக்கொண்டார். 

    7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. 
    வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.

    முதல் 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறாததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி தொடங்கு வதற்கு முன்பு இந்தியா தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த தோல்விக்கு விராட்கோலி தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போட்டிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் நாம் என்ன சொல்ல முடியும்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இப்போதே திட்டமிட வேண்டும். எதிர்கால இந்திய அணி மிகவும் முக்கியமானது. ஐ.பி.எல்.க்கும் உலக கோப்பைக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்திருக்க வேண்டும்.

    உலக கோப்பையில் இந்திய வீரர்களால் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை.

    வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் வீரர்கள் இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறி உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) விராட்கோலி கேப்டனாக உள்ளார். 20 ஓவர் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு உலக கோப்பைக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்து இருந்தார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் கூறி இருந்தார்.

    20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுலும் இதற்கான போட்டியில் உள்ளார்.

    20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை வென்றதன் மூலம் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு சிதைந்தது.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, குரூப்-2-ல் இடம் பெற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த லீக்கில் நியூசிலாந்திடம் 110 ரன்னில் அடங்கியது. இவ்விரு மோசமான தோல்விகள் இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்புக்கு ‘ஆப்பு’ வைத்தது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டிருந்த இந்திய அணி விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

    இருப்பினும் அடுத்த இரு லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை பந்தாடி ரன்ரேட்டிலும் ஏற்றம் கண்டதால் இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு எட்டிப்பார்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 210 ரன்கள் குவித்து மலைக்க வைத்த இந்திய அணி, ஸ்காட்லாந்தை 85 ரன்னில் சுருட்டி அந்த இலக்கை 6.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. ரன்ரேட் உயர்ந்தாலும் இந்திய அணி மற்ற ஆட்டங்களின் முடிவை சார்ந்து இருக்க வேண்டிய பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகும் என்ற சூழலில் நேற்று இவ்விரு அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் அரைஇறுதி கனவு முற்றிலும் கலைந்தது. 20 ஓவர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியா சூப்பர் சுற்றுடன் வெளியேறுவது இது 4-வது நிகழ்வாகும். நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரைஇறுதி சுற்றை அடைந்தது.

    இந்தியா தனது கடைசி லீக்கில் இன்று (திங்கட்கிழமை) புதுமுக அணியான நமிபியாவை துபாயில் சந்திக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று 6 புள்ளியை எட்டினாலும் பலன் இல்லை. எனவே இது சம்பிரதாய மோதலாகவே இருக்கும். அனுபவம் இல்லாத நமிபியாவை இந்திய அணி எளிதில் தோற்கடித்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இதுவரை ஆடாத சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படலாம். மேலும் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு, இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர்குமார் ஆகியோரை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

    இந்த உலககோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும். அத்துடன் ரவிசாஸ்திரியின் பயிற்சியாளர் பணியும் இந்த ஆட்டத்துடன் முடிவுக்கு வருவது நினைவு கூரத்தக்கது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ×