என் மலர்
விளையாட்டு



அபுதாபி:
ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றுவரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் “குருப்-1” பிரிவில் நேற்றுடன் “லீக்“ ஆட்டங்கள் முடிந்தது.
இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றன. நிகர ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 2-வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
தென் ஆப்பிரிக்கா அதிர்ஷ்டம் இல்லாமல் 3-வது இடத்தை பிடித்து வெளியேறியது. இலங்கை (4 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (2 புள்ளி), வங்காளதேசம் (வெற்றி எதுவும் பெறவில்லை) ஆகிய அணிகள் ஏற்கனவே வெளியேறி இருந்தன.
குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் மட்டுமே தகுதி பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் (மாலை 3.30), பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் தான் இந்தியா அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க முடியும். அதாவது ஆப்கானிஸ்தானின் வெற்றிக்காக ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
நியூசிலாந்து வெற்றி பெற்றால் இந்தியா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ஆப்கானிஸ்தான் வென்று, நாளைய ஆட்டத்தில் இந்திய அணி நமீபியாவை வீழ்த்தினால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் 6 புள்ளியுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒருநாடு முன்னேறும். தற்போது இந்தியாவின் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிது அல்ல. இதனால் நியூசிலாந்து அணியே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது . இந்தியா வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது.
8 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஸ்காட்லாந்து அணி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கிறது.
பாரீஸ்:
உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக ஜோகோவிச் (செர்பியா) திகழ்கிறார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை நம்பர்-1 இடத்தில் நீடிப்பார்.
அவர் அரை இறுதியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் நம்பர்-1 இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.
அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் நம்பர்-1 இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். சாம்ராஸ் 1993 முதல் 1998 வரை தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார்.
ரோஜர் பெடரர் தொடர்ந்து 310 வாரங்கள் நம்பர்-1 இடத்தில் இருந்ததை ஜோகோவிச் கடந்த மார்ச் 8- ந் தேதி முறியடித்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் அவர் மெட்வதேவிடம் தோற்றார்.
தற்போது பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பையுடன் முடிந்தது.
இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.) தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளரானதால் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரோடு என்.சி.ஏ. தலைமை நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் டிராவிட்டும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்தால் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்கள். வலுவான தளம் அமைக்கப்படும். இதனால் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் லட்சுமணுக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதால் இந்த பதவியை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. லட்சுமணும் ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் என்.சி.ஏ.வின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ். லட்சுமண்-ராகுல் டிராவிட் ஜோடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நிலையில் பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் சேர உள்ளனர்.







