என் மலர்
புதுச்சேரி
புதுவை சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான புதிய தலைமுறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை புதிதாக பதிவு செய்தனர். அவர்களில் ஒரு சிலர் கூறிய கருத்துகளை பற்றி பார்ப்போம்.
புதுச்சேரி வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷா:-
வாக்களிக்க செல்வதற்கு முன்பாக ஒருவித சந்தோஷமும், எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற பயமும் இருந்தது. வாக்குச்சாவடிக்கு சென்ற உடன் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று விளக்கி கூறினர். நான் எனது ஜனநாயக கடமையை முதல் முறையாக ஆற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும். வாக்களிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நல்ல வாழ்க்கை வாழ, நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதுவையை சேர்ந்த ஜோஸ்பின்:-
முதல் முறை வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளேன். வாக்குச்சாவடியின் உள்ளே சென்ற உடன் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இருந்தது. அங்கிருந்த ஊழியர்கள் வழிகாட்டினர். அதன்படி என்னால் எளிமையாக வாக்களிக்க முடிந்தது.
தற்போதைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பை பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. சுற்றுச்சூழலும் தூய்மை இன்றியே காணப்படுகிறது. முந்தைய காலகட்டத்தை காட்டிலும் தற்போது அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்துவிட்டால் போராட்டம் தேவை இல்லை. அப்படி ஒருசூழ்நிலை ஏற்பட வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
நெல்லித்தோப்பு மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது53). இவர் புதுவையில் ஒரு பிரபல ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பாண்டியனுக்கு தலையில் அடிப்பட்டதால் அவருக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படும்.
இதற்கிடையே இவர் காலை 5 மணிக்கு எழுந்து ஓட்டல் வேலைக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக பாண்டியன் வீட்டின் குளியல் அறைக்கு குளிக்க சென்றார்.
ஆனால் வெகுநேரமாகியும் பாண்டியன் திரும்பாததால் சந்தேமடைந்த அவரது மனைவி மாதவி குளியல் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு கணவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டியன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருவடிக்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது உறவினர் அய்யனாரப்பன். நேற்று மாலை அய்யனாரப்பன் தனது மகள் வேதரக்ஷனாவுடன் முதலியார்பேட்டை வண்ணாகுளம் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை அய்யனாரப்பன் ஓட்டி செல்ல பின்னால் வேதரக்ஷனா அமர்ந்து சென்றார். அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அய்யனாரப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் அய்யனாரப்பனும், வேதரக்ஷனாவும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் அய்யனாரப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வேதரக்ஷனா பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேதரக்ஷனா பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை கிழக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்களுக்கான டோக்கன் வழங்கிய 7 பேரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்த மேலும் 5 பேரை தேர்தல் பறக்கும்படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
வில்லியனூர் தொகுதி தேர்தல் பறக்கும் அதிகாரி இளங்கோவன் தலைமையிலான குழுவினர் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகில் ஜி.என்.பாளையத்தில் வாக்காளர்களுக்கு ஒருவர் பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு தேர்தல் பறக்கும் படையினர் சென்றனர். அப்போது அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர்.
அப்போது அவரது சட்டை பையில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், இவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இந்த பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து முருகனை வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபோல் திருபுவனை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராமசாமி தலைமையில் தேர்தல் பறக்கும்படை குழுவினரான மகேஷ், மகேஷ்குமார் மற்றும் ஆகியோருடன் காரில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செல்லிப்பட்டு முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்குகிடமாக நின்ற 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர். அவர்களது சட்டை பையில் ரூ.2லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வாக்காளர் பட்டியல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் சோரப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஏழுமலை (வயது45), தனபால் (63) என்பதும், இவர்கள் சுயேட்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நின்றிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும்படையினர் அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் வில்லியனூரில் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுபோல் மணவெளி தொகுதியில் ஒரு தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த குணாநிதி (27), ரமேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லியனூர் பாரதிநகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு அனிலன் என்ற மகன் உள்ளார். இவர் நெல்லித்தோப்பில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது தங்கை ஆனந்தி (வயது17). இவர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சேகர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாய் ஜோதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் கண்டமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் அனிலனுடன் இருந்து ஆனந்தி படித்து வந்தார்.
இதற்கிடையே ஆனந்தி வில்லியனூர் பட்டாணிக்கடை அருகில் உள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த ஆனந்தி திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆனந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அனிலன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி ஆனந்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 145, காரைக்காலில் 68, ஏனாமில் 9, மாகியில் 15 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 360, காரைக்காலில் 51, ஏனாமில் 12, மாகியில் 3 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 93, காரைக்காலில் 37, மாகியில் 9 பேர் என 139 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 42 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 426 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 40 ஆயிரத்து 317 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுவையில் 882, காரைக்காலில் 394, ஏனாமில் 18, மாகியில் 53 பேர் என ஆயிரத்து 347 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது ஆயிரத்து 773 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு 684 பேர் பலியாகியிருந்தனர். இந்நிலையில் புதுவை சாரத்தை சேர்ந்த 62 வயது பெண், காரைக்காலை சேர்ந்த 87 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 686 ஆக உயர்ந்துள்ளது.
இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாக நேற்று 237 பேருக்கு தொற்று பரவியதுடன், 2 பேர் இறந்துள்ளனர். இதனால் புதுவையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொது மக்கள் மீண்டும் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ரங்கசாமியின் வீடு திலாசுப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவில் வீதியில் உள்ளது.
திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வழக்கம் போல் அவரது ராசியான யமகா மோட்டார் சைக்கிளில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வந்தார்.
பின்னர் வாக்குச்சாவடியில் 5 நிமிடங்கள் காத்திருந்தார். அவர் 8.10 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் வாக்களிக்க காத்திருப்பதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுமார் 8.15 மணியளவில் தனது வாக்கை ரங்கசாமி செலுத்திவிட்டு யமாகாவில் மீண்டும் புறப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உட்பட மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. காலை 10 மணியளவில் என்.ஆர். காங்கிரசை சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் ஜக்கு சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களை வீசியபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதற்கு பிற கட்சிகளின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பிற வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
காமராஜர் சாலை தமிழ்அன்னை நகர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சேதுசெல்வம், நாம்தமிழர் ரமேஷ், மக்கள் நீதிமய்யம் ராஜேந்திரன் மற்றும் பலர் ஒன்று கூடினர்.
தேர்தல் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். தேர்தல் அதிகாரி சம்பவ இடத்துக்கு வரவில்லை. ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் காமராஜர் சாலை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் வாக்குச்சாவடி இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மறியலை கைவிடும்படி வலியுறுத்தினர். வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் மறியலை கைவிட வில்லை. இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக் கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருப்பினும் போலீசார் அவர்களை விடாப்பிடியாக இழுத்து அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் சுமார் அரைமணிநேரம் பரபரப்பும், பதட்டமுமாக இருந்தது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இது ஜனநாயக தேர்தல். மதவாத சக்திகளுக்கும், மதச்சார்பற்ற அணிக்கும் இடையிலான தேர்தல். நாங்கள் மாநில அந்தஸ்து, கடன் ரத்து செய்வது, மானியத்தை 40 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை பெற்றுத் தருவோம் எனக்கூறி பிரசாரம் செய்தோம்.
புதுவை வளர்ச்சிக்கு தேவையான வாக்குறுதிகளை அளித்துள்ளோம். இதனால் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். எதிரணி சந்தர்ப்பவாத கூட்டணி. தலைவர்கள் தனித்தனியே பிரசாரம் செய்தனர்.
பிரதமர், மத்திய மந்திரிகள் அவரவர் கட்சிக்கு பிரசாரம் செய்தனர். கூட்டணிக்காக வேலை செய்யவில்லை. பா.ஜனதா பணத்தை வைத்து ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அதிகார துஷ்பிரயோகம், பணபலத்துடன் தேர்தலில் செயல்பட்டுள்ளது. வருமான வரித்துறையை ஏவி விட்டது.
எதிர்கட்சி வேட்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையால் மிரட்டல் விடுத்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாள் இது. மக்களை பிரித்து புதுவையின் தனித்தன்மையை முடக்கும் பா.ஜனதா அணியை மக்கள் புறக்கணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






