என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாநில பா.ஜனதா சார்பில் தொடங்கிய கபடி போட்டியை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா சார்பில்   தொடங்கிய கபடி போட்டியை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுவை பா.ஜனதா சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக புதுவையில் இதுவரை கண்டிராத வகையில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி புதுவை பா.ஜனதா சார்பில் நடத்தப்படுகிறது. லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்   தொடங்கிய கபடி போட்டியை சப்தகிரி வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்ட், சிவசங்கரன் மற்றும் புதுவை கபடி சங்க நிர்வாகிகள் ஆரியசாமி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் புதுவையை சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ-.3 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ-.1 லட்சமும் வழங்கப்படுகிறது.  
    கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் கருவடிக்குப்பம் சிவாஜி சிலையிலிருந்து தொடங்குகிறது. 

     அங்கிருந்து ஊர்வலம் போட்டி நடைபெறும் லாஸ்பேட்டை தாகூர்கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை சென்றடைகிறது. அதன் பின்னர் பரிசளிப்பு விழா நடக்கிறது.

    புதுவை மாநிலத்தில் நேற்று 3202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

     புதுவை மாநிலத்தில்  3202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் புதுவையில் 350 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் ஒருவர், மாகியில் 9 பேர் என மொத்தம்  444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    தற்போது 100 பேர் மருத்துவமனைகளிலும், 1150 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம், 1250 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  ஜிப்மர் மருத்துவமனையில் 46 பேரும், அரசு மார்பக மருத்துவமனையில் 28 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     19 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  உயிரிழப்பு  ஏதும் இல்லை. புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 590 பேர் தொற்றில் இருந்து குண மடைந்துள்ளனர். 1882 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
    புதுவையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்கள் தொற்று பெருமளவில் குறைந்து ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. 
    8-ந் தேதி 280 ஆக இருந்த கொரேனா  இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாகூரில் சாராயக்கடை கேஷியர் தாக்கப்பட்டார்.
    பாகூர்:

    பாகூர் கரைமேடு சாலையை சேர்ந்தவர் சுதாகர் (வயது 37). சாராயக்கடை கேஷியர்.  இவர் பாகூரில் உள்ள சாராயக் கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார். 

     இவரது கூட்டாளி முத்தையனுடன் பாகூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் மதுகுடித்து கொண்டு இருந்தார்.
    இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தையன் அங்கு கீழே கிடந்த வீட்டுக்குப் பயன்படுத்தும் கண்ணாடியை எடுத்து உடைத்து சுதாகர் மார்பிலும், முகத்திலும் குத்திவிட்டு கொலை மிரட்டல் விட்டு தப்பி ஓடி விட்டார்.

    காயமடைந்த சுதாகர் அருகிலிருந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை  அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தையனை  தேடி வருகின்றனர்.

    வில்லியனூரில் புதுமாப்பிள்ளை குத்தி கொலை செய்யப்பட்டார்
    சேதராப்பட்டு:

    வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 27). ஏ.சி. மெக்கானிக்கான இவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகிறது.
    இந்நிலையில் நேற்றிரவு மணிகண்டனின் எதிர் வீட்டில் வசிக்கும் சங்கர் அவரது மனைவி ரமணி இருவரும் திருமண நாள் கொண்டாட்டத்திற்கு உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வீட்டின் வெளியே தம்பதியினர் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடினர். 

    சங்கரின் மைத்துனர் ராஜா மற்றும் இவரது நண்பர்கள் 3 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்று மதுபோதையில் அதிக சத்தத்துடன் அந்த நிகழ்ச்சியில் ரகளை செய்தனர்.

    இது அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் தட்டிக் கேட்டார். அப்போது சதீசுக்கும், சங்கர் மற்றும் அவரது மைத்துனர் ராஜா ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.  இதனை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். 

    பின்னர் வீட்டில் சிறிது நேரம் தூங்கி விட்டு சதீஷ் வீட்டின் வெளியே வந்தார். அப்போது அங்கு சாலையில் மது அருந்திக் கொண்டிருந்த சங்கர் மற்றும் அவரது மைத்துனர் ராஜா மேலும் 2 பேர் சதீசை  பார்த்ததும் ஆத்திரம் அடைந்தனர்.

    போதையில் இருந்த அவர்களை கண்டதும் சதீஷ் வீட்டிற்குள் செல்ல முயன்றார். உடனே அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீசை சரமாரியாக குத்தினர். இதில் சதீசுக்கு கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் விழுந்த சதீசை மீட்டு உறவினர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்  பரிதாபமாக இறந்து போனார்.
     
    இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார்  விசாரணை  நடத்தி சதீஷ் கொலையில் சம்பந்தப்பட்ட சங்கர் அவரது மைத்துனரான வில்லியனூர் அம்மன் நகரைச் சேர்ந்த ராஜா, கண்டமங்கலம் தென்னல் பகுதியைச் சேர்ந்த அசார், புது நகரை சேர்ந்த தமிழ் ஆகிய 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    அசார் மீது கண்டமங்கலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த கொலை சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பை வனத்துறை ஊழியர் பிடித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை புதுசாரம் பகுதியில் மரசெக்கு எண்ணை கடை நடத்தி வருபவர் குமரன்.  இவர். வியாபாரம் முடிந்து கடையிலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளை  எடுத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். 
    அப்போது வாகனத்தின் முன் பகுதியிலிருந்து நல்ல பாம்பு ஒன்று எட்டிப் பார்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமரன் உடனடியாக வாகனத்தை  சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அந்த முயற்சி பலன்  தராததால் வனத் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர் சண்முகம்  வாகனத்தில் இருந்த பாம்பை பிடிக்க போராடினார்.  ஆனால், அந்த பாம்பு வனத்துறை ஊழியரின் கையில் சிக்காமல் வாகனத்தின் முன் பகுதிக்கும், பின் பகுதிக்கும் சென்று சுமார் ஒரு மணி நேரம் போக்கு காட்டி கொண்டு இருந்தது. 

    இதனை அடுத்து மெக்கானிக் உதவியுடன் வாகனத்தை பிரித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். 

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோட்டார் சைக்கிளில் பாம்பு இருக்கிறது என்ற தகவல் பரவ  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடியதால் மேலும் பரபரப்பானது.  வாகனத்தில் இருந்த  பாம்பை பிடிக்கும் வீடியோவை  பொதுமக்கள் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் வைரலாக பரவ விட்டுள்ளனர்.


    புதுவை அருகே வங்கியில் கடன் பெற்றவர் திருப்பி செலுத்தாததால் ஜாமீன் கையெழுத்து போட்ட வேதனையில் வேளாண் கூட்டுறவு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே அரியூர் குமரன் நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது54). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (வங்கி) மானேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலா என்ற மனைவியும், தேவநாதன் (22) என்ற மகன், சுகந்தி(26) என்ற மகளும் உள்ளனர்.

    சுகந்தி பி.டெக் படித்து விட்டு அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். தேவநாதன் பி.டெக் படித்து விட்டு வேலை தேடி வருகிறார்.

    இதற்கிடையே குப்புசாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் பணிபுரிந்த இளங்கோ என்பவருக்கு வங்கி மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற்றுக்கொடுத்தார். அதற்கு குப்புசாமி ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார்.

    ஆனால் வங்கியில் பெற்ற கடனை இளங்கோ திருப்பி செலுத்தாமல் இருந்து வந்தார். இதனை பலமுறை இளங்கோவிடம் குப்புசாமி எடுத்துக்கூறி பணத்தை திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தி வந்தார். ஆனால் குப்புசாமி பணத்தை செலுத்த முன்வரவில்லை.

    இதனால் குப்புசாமி தனது சம்பள பணத்தில் இருந்து கடனை செலுத்தி கொண்டிருந்தார். இதன் காரணமாக குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் குப்புசாமி கஷ்டப்பட்டு வந்தார்.

    இதனை குப்புசாமியுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் ஏளனமாக பார்த்து அவமதித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குப்புசாமி மனஉளைச்சலில் இருந்து வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் குப்புசாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதனால் குப்புசாமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் நள்ளிரவில் குப்புசாமி வீட்டின் குளியல் அறைக்கு சென்று அங்குள்ள ‌ஷவர் குழாயில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார் நேற்று காலை அவரது மனைவி கலா குளியல் அறைக்கு சென்ற போது அங்கு கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் தேவநாதன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வங்கியில் கடன் பெற்றவர் பணத்தை திருப்பி செலுத்தாதால் ஜாமீன் போட்ட மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில், வழிகரை அம்மன் கோவில் அருகே, நேற்று காலை, தனியார் பஸ் மோதி, பாய் வியாபாரி முகமது அலி, அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சாலையில், வழிகரை அம்மன் கோவில் அருகே, நேற்று காலை, தனியார் பஸ் மோதி, பாய் வியாபாரி முகமது அலி, அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற 6 வயது சிறுவன் படுகாயம் காயம் அடைந்து சிகிச்சைபெற்று வருகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவைச்சேர்ந்தவர் முகமது அலி(வயது55). பாய் வியாபாரம் செய்து வரும் இவர், தனது பேரன் பகத் அகமதுவை(6), காரைக்கால் தருமபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக, டிவிஎஸ் மோட்டார்சைக்கிளில் அழைத்துசென்றார். திருநள்ளாறு வழிகரை அம்மன் கோவில் அருகே மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், முகமது அலி சாலையில் தூக்கியெறியப்பட்டு, அவர் மீது பஸ் சக்ரம் ஏறியதில், முகமது அலி அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். சிறுவன் பகத் அகமது சாலையோரம் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தான். தொடர்ந்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய சப்.இன்ஸ்பெக்டர் தனபால், துணை சப்.இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார், சம்வ இடத்திற்கு சென்று, சிறுவனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முகமது அலி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய, பஸ் டிரைவர் காரைக்கால் விழிதியூர் தெற்குத்தெருவைச்சேர்ந்த கலைச்செல்வனை(27) போலீசார் கைது செய்தனர்.

    புதுவை மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த  ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. 

    6-ந்தேதி 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 7-ந்தேதி 177 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.   கொரோனா பரவலை தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஆனாலும், தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. 

    புதுவையில் 8-ந்தேதி 3 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 234, காரைக்காலில் 27, மாகியில் 19 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 74, காரைக்காலில் 12, மாகியில் 10 பேர் என 96 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 1, மாகியில் 4 பேர் என 16 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு திரும்பினர். 

    புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 27 ஆயிரத்து 571 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  புதுவையில் 546, காரைக்காலில் 141, ஏனாமில் 2, மாகியில் 40 பேர் என 729 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 825 பேர் கொரோனா  தொற்று டன் உள்ளனர். சுல்தான் பேட்டையை சேர்ந்த 58 வயது ஆண் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியா னோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உயர்ந் துள்ளது. புதுவையில் 2&வது தவணை  உள்பட 14 லட்சத்து 51 ஆயிரத்து 290 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    கடந்த வாரம் ஒற்றை இலக்கத்தில் தொற்று இருந்தது. இப்போது 280 ஆக தொற்று உயர்ந் துள்ளது. உலகளவில் தொற்று அதிகரித்து வருகிறது.  இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். பலர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது இரண்டும்தான் தொற்று பரவலை தடுக்கும்.  2-வது அலையின்போது படுக்கை கிடைக்காமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலை வராமல் தடுக்க நோய் பரவலை தடுக்க வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும். 

    தமிழகத்தில் 9-ந்தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது. மாநில எல்லைகளில் பரிசோதனை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  புதுவை  வருவோருக்கு பரிசோதனை நடத்தப்படும். அவர்களுக்கு தொற்று இருந்தால் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். அவர்கள் விரும்பாவிட்டால் திருப்பி அனுப்பப்படுவார்கள். 

    புதுவை மார்பக நோய் மருத்துவமனையில் 33 பேர் தொற்றுடன்   உள்ளனர். இதில் 30 பேர் தடுப்பூசி போடாதவர்கள்.  பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. தொற்று அதிகரித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். 150-க்கும் மேற்பட்ட மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வர கால தாமதமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவை அரசு பள்ளியில் வருகிற 19-ந்தேதி மாதிரி தேர்வு நடைபெறும்.
    புதுச்சேரி:

    திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர், கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடக்கூடாது. தொடர்ந்து பள்ளிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
     
    இதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 19-ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படும். வழக்கமாக தமிழக கல்வித்துறையின் வினாத்தாள் மூலம் தேர்வு நடத்துவோம். இந்த ஆண்டு புதுவையிலேயே தயாரிக்கப்பட்ட வினாத்தாள் அடிப்படையில் மாதிரி தேர்வு நடத்தப்படும். 

    பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை மூடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பொதுத்தேர்வுகள் நடைபெறாதபட்சத்தில் இந்த மாதிரி தேர்வு கணக்கில் கொள்ளப்படும். 3 மாதத்துக்கு ஒரு முறை மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் பாரதீய ஜனதாவினர் மவுன போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    பஞ்சாப் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளில் திட்டமிட்டு குளறுபடி ஏற்படுத்தி வளர்ச்சி திட்டங்களை தடுத்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை கண்டித்து புதுவை மாநில பா.ஜனதா சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே இன்று மவுன போராட்டம் நடந்தது. 

    போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு,    வெங்கடேசன், அசோக்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், தங்க. விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், வெற்றிச்செல்வம், கோபதி, என்ஜினீயர் சிவக்குமார், மோகன்குமார், ஜெயலட்சுமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஜனநாயக விரோத, தேச விரோத காங்கிரஸ் அரசை   கண்டிக்கிறோம். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம், ராஜினாமா செய், ராஜினாமா செய் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வரே ராஜினாமா செய் என்ற பேனரை கையில் வைத்திருந்தனர். 

    போராட்டம் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்த பஞ்சாப் காங்கிரஸ் அரசின் முதல்&அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்த பஞ்சாப் காங்கிரஸ் முதல்-அமைச்சரை கண்டித்து 13-ந்தேதி வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். 

    9.1.2022 அன்று அம்பேத்கர் சிலை அருகே பாஜகவின் தலித் பிரிவு சார்பில் போராட்டம் நடைபெறும். காலையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதமர் நீடூழி வாழ வேண்டி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் மகா யாகம் நடக்கிறது.  மாநில இளைஞரணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் எங்கள் கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    புதுவையில் 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று கவர்னர் தமிழிசை கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதுவை வாணரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாண வர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சுகாதாரதுறையை பாராட்டுகிறேன். புதுவையில் 82 சதவீதம் பேர் முதல் தவணையும், 58 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இன்னும் 1 லட்சம் பேர் தடுப்பூசி போட வேண்டும். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அளித்த பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களை பார்த்து பயந்த, திட்டிய பெரியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், இளைஞர்கள் ஒருவர்கூட மறுக்கவில்லை. பெரியவர்களை விட இளையவர்கள் மிக பொறுப்பானவர்கள். கொரோனா இல்லாத காலத்தில் இந்த இளைஞர்கள் வாழ வேண்டும். 

    விழாவில் பூக்கொத்து கொடுக்காமல் தேவையான புத்தகங்களை அளித்திருப்பது பாராட்ட தக்கது. தடுப்பூசியுடன் சத்தான உணவு அவசியம். பீசா, பர்கரில் சத்து இல்லை. நவ தானியம் சாப்பிடுங்கள். கேரட்டை கடித்து சாப்பிடுங்கள். எலுமிச்சை சாறு குடியுங்கள். ரூ.150 கோடிக்கு மேல் நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை பெருமையுடன் கூற வேண்டும். தெலுங்கானாவில் உள்ள பையோடெக் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    24 மணி நேரமும் ஆராய்ச்சியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பிரதமர் நேரில் சந்தித்து ஊக்கமளித்தார். நாம் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.  அன்றைய பாடத்தை அன்றே படியுங்கள். மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களாக வர வேண்டும். எந்த காரணத்திற்கும் மகிழ்ச்சியை தொலைக்காதீர்கள். கஷ்டத்தை ஆசிரியர்களிடம் கூறுங்கள். பெரியவர்கள் தடுப்பூசிக்கு  பயந்து ஓடினார்கள். குழந்தைகளில் சுணக்கம் இல்லை. இனி பெரியவர்கள் தடுப்பூசி போட மாட்டேன் என்பது மன்னிக்க கூடியதில்லை. 

    பல மாநிலங்களில் வேகமாக நோய் பரவுகிறது. தடுப்பூசி போட்டவர்களை தொற்று அபாயகரமாக தாக்குவதில்லை. புதுவையில் தேசிய இளைஞர் விழாவை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பள்ளி மாணவர்களின் அக்கறையில்  ஜாக்கிரதையாக இருக்கிறோம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பள்ளிகளை மூடுவது குறித்து முடி வெடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜ் நகர் நாராயணதாஸ் வீதியில் வசித்து வருபவர் சித்தார்த்தன். இவர், புதுவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை இவர் தனது காரை வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்கு சென்றார்.

    பின்னர் சித்தார்த்தன் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் காரின் கதவை திறந்து திருடும் முயற்சியில் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என பார்த்தார்.

    இதனை கண்ட டாக்டர் சித்தார்த்தன் அந்த வாலிபரிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டர் சித்தார்த்தனை கையால் தாக்கினார்.

    உடனே டாக்டர் சித்தார்த்தன் செல்போனில் இதுபற்றி போலீசில் தகவல் தெரிவிக்க முயன்றார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் டாக்டர் சித்தார்த்தனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து டாக்டர் சித்தார்த்தன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாக்டரை தாக்கி அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் புதுவை குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது.

    இவர் பெரிய மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் டாக்டரிடம் இருந்து பறித்து சென்ற மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×