என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காரைக்கால் டவுன் போலீசாரை கண்டித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்கால்:

    காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சேது மணி (வயது 24). இவர் காரைக்கால் நகர் பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

    இவர் கடந்த சில ஆண்டுகளாக, குற்ற வழக்குகளை மறந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குற்றவழக்கு ஒன்றிற்காக காரைக்கால் கோர்ட்டில் அவர் ஆஜரானார். அப்போது காரைக்கால் டவுன் போலீசார் சேது மணியை பார்த்ததும், வேறு சில குற்ற வழக்கிற்காக போலீஸ் நிலையத்திற்கு வரும்படி வலியுறுத்தினர். 

    இதனால் பயந்து போன சேதுமணி, காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில், காரைக்கால் நகர போலீசாரின் செயலை கண்டித்து, தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார் சேதுமணியை தடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால் அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள திரு.பட்டினம் பங்களா தோட்டத்தைச் சேர்ந்தவர் சபரிராஜன். இவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சபரிராஜனின் உறவினர் அருள்மொழிதாசன் (வயது31).

    இவர் வேதாரண்யத்தில் வசித்து வந்தார். அருள் மொழிதாசன் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அருள்மொழிதாசனை அவரது தாயார் காரைக்காலில் உள்ள சபரிராஜன் வீட்டுக்கு அனுப்பிவைத் துள்ளார். தொடர்ந்து அருள் மொழிதாசன் சபரிராஜனின் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று அருள்மொழிதாசன் மதுபானத்தில் வி‌ஷத்தை கலந்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை சபரிராஜன் மீட்டு சிகிச்சைகாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழிதாசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் சந்திரபிரியங்கா சிறுவனிடம் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
    புதுச்சேரி:

    புதுவை  போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சந்திரபிரியங்கா. இவர் புதுவை முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில்  காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

    பெண் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. தொடர்ந்து மகளிர் தினத்தில் அம்மன் வேடமிட்ட வீடியோ வைரலாகியது.

    இந்த நிலையில் தற்போது அவர் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் சிறுவனிடம் அமைச்சர் என்று கூப்பிடு யார் வருகிறார்கள் என்று கூறி ஒளிந்து கொள்வதும் அமைச்சர் என்று கூறியவுடன் வந்து கைதட்டி உற்சாகப்படுவதும், தொடர்ந்து சிறுவனுக்கு சாக்லேட் கொடுப்பதும் பதிவாகி உள்ளது. 

    வீடியோ முடியும் போது அய்ய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க? என சிறுவர்கள் வரிசையாக நிற்பதை சுட்டிகாட்டி சிரிப்பதுடன் முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    அரியாங்குப்பத்தில் போலி மது தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர்
    அரியாங்குப்பம் அடுத்து சொர்ணா நகர் பகுதி உள்ளது.‌ இந்த பகுதியில் பல  குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு ரைஸ் மில் ஒன்று இயங்கி வந்தது. இந்த ரைஸ் மில் இயக்காமல் மூடியே கிடந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனிநபர் வாடகை எடுத்து  ரைஸ்மில் இயக்குவதாக கூறியுள்ளார். 

    வாடகை எடுத்த நபர் அங்கு உள்ள குடோனில் ரகசியமாக போலி மது தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலி மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளார். 

    இந்த நிலையில் அப்பகுதி மக்கள் சந்தேகப்-படும் படியாக தொழிற்சாலைச் மில்லில் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர். 

    அதன்பேரில் அரியாங்குப்பம் போலீசார் மற்றும் தெற்கு  பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-& இன்ஸ்பெக்டர் ரமேஷ், குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்த்து போலி மது பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதை கண்டறிந்தனர். 

    அப்போது அங்கு மது  பாட்டில்கள் தயாரித்து வந்த ரெட்டியார் பாளையம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த இளங்கோவன் (64) பாகூர் அழகர், விழுப்புரம் மாவட்டம் கொத்த-மங்கலத்தை சேர்ந்த மினி லாரி டிரைவர்கள் அண்ணன் தம்பிகளான பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய  4 பேரை போலீசார் கைது செய்தனர். 

    முக்கிய குற்றவாளி மனோஜ் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். இதில் ரெட்டியார் பாளையத்தை சேர்ந்த இளங்கோவன் தான் இந்த மில்லை வாடகைக்கு எடுத்துள்ளார் அதனை பாகூரை சேர்ந்த அழகர் நடத்தி வந்தார். இங்கிருந்த 6000 ஆயிரம் குவாட்டர் பாட்டில்கள் 69 கேன் எரிசாராயம், 2279 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    புதுவையில் திறந்த-வெளியில் விளம்பரங்கள் வைக்க அரசு முழுவதுமாக தடை விதித்துள்ள நிலையில் தற்போது கட்-அவுட் பேனர்கள் மாநிலம் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. 

    இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. புதுவையில் பேனர் தடைச்சட்டம்  நடைமுறையில் உள்ள போது அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பேனர் கட்அவுட் வைக்க அனுமதி வழங்குகின்றனர்.

    புதுவையில் விஜய் நடித்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தியேட்டர்கள் 6 காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    5 நாட்களுக்கு ரூ 100  கட்டணம் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்ததாக போலியான தகவல் வெளியிட்டு கட்டண பலகையும் வைக்கப்பட்டுள்ளது-.

    ஆனால் அரசு இது போன்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. போலியான அறிவிப்பை வெளியிட்ட தியேட்டர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட திரைப்-படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    புதுவை கொம்பாக்கத்தில் போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜய் (வயது 35) இவர் புதுவை காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். 

    இவருக்கு அலேஷ் என்ற மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.  விஜய்யும் அலேஷ்சும் கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைக்கு பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாடினர். 

    இந்த நிலையில் வழக்கம் போல் விஜய் பணிக்கு சென்றார். இரவு 10 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பினார். மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றிருந்ததால் விஜய் தனது தாயிடம் மாடியில் தூங்கச் செல்வதாக கூறிச்சென்றார்.

    ஆனால் வெகு நேரம் ஆகியும் விஜய் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது விஜய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து விஜயை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விஜய் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பப் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.

    போலீஸ்காரர் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பணிபுரியும் மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

    விஜயுடன் பணி புரிபவர்கள் கூறும்-போது விஜய் வழக்கம் போலவே இயல்பாகவே எல்லோரிடமும் சிரித்து பேசி வேலை-பார்த்தாகவும் அவரது முகத்தில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை என்று தெரிவித்தனர். 

    எனவே விஜய் குடும்பப் பிரச்சனையில் தான் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ்காரர் விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    குருத்தோலை ஞாயிறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    புதுச்சேரி:

    ஏசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் தியாகத்தை தியானிக்கும்வகையில் ஆண்டுதோறும் 40 நாட்கள்  தவகாலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.

    தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது, புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கப்பட்டு, சிறப்பு பிராத்தனைகள் நடத்தப்படும். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்-படுவதற்கு முன்பாக ஜெருசலம் நகரின் வீதிகளில் அவரை  ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

    அப்போது வழிநெடுகிலும் மக்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஓசன்னா  பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துவர்கள் குருத்தோலை புதுவையில் புனித இருதயஆண்டவர் பசிலிக்கா, ஜென்மராகினி மாதா ஆலயம், கப்ஸ் கோவில், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா கோவில், ஆந்திரேயர் ஆலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் கிறஸ்துவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி ஓசன்னா பாடல்-களுடன் ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை புனித வியாழன் அனுசரிக்கப்பட உள்ளது, இதில் வியாழன் வழிபாடுகளும், இயேசு மரணத்தை தழுவும் முன்பு தனது சீடர்களுடன் கடைசி இரவு உணவை உண்ணும் சடங்கும், சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்கும் நடைபெற உள்ளது. 

    இதனைடுத்து புனித வெள்ளியன்று ஏசு சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியும்ஞாயிற்றுக்கிழமை ஏசுவின் உயிர்ப்பை கொண்டாடும், புனித ஞாயிறு என்னும் ஈஸ்டர் பெருவிழாவும் கொண்டாடப்பட உள்ளன.
    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இன்று நடந்தது.

    தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரெஞ்சு தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

    புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதகரம், பிரெஞ்சு பள்ளி என 2 ஓட்டுப்பதிவு மையங்களும், காரைக்காலில் ஒரு ஓட்டுப்பதிவு மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது. இரவு 7 மணி வரை ஓட்டளிக்கலாம். பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்தனர்.

    வாக்குபதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    முத்திரையார் பாளையத்தில் கணவன்மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக உறவினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை அருகே ஆரோவில் குயிலாப்பாளையும் புதுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி செல்வி (வயது 28) இவரது சகோதரிகள் முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூர் மேற்கு வீதியில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வி தனது கணவர் ஆனந்துடன் தனது மூத்த சகோதரி மகாலட்சுமி மகன் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக முத்திரையர் பாளையத்துக்கு வந்திருந்தனர்.

    அப்போது செல்வி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை மற்றொரு சகோதரியின் கணவரான வேல்முருகன் என்பவர் குறுக்கே நிறுத்தி நிகழ்ச்சிக்கு செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை செல்வி தட்டிக்கேட்ட போது அவரை வேல்முருகன் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் தாக்கினார். மேலும் செல்வியை கீழே பிடித்து தள்ளினார். அப்போது செல்வியின் கணவர் இதனை கண்டித்த போது அவரையும் வேல்முருகன் தாக்கி கையில் வைத்திருந்த கத்தியை காட்டி 2 பேரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார். 

    இந்த தாக்குதலில் காயமடைந்த செல்வி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை பிள்ளைத் தோட்டம் பகுதியில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைத்தோட்டம் திருவள்ளுவர் சாலையில் ஒரு மதுக்கடை அருகே 2 பேர் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து வீச்சரிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லித்தோப்பு அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்த குணசீலன் மற்றும் குயவர் பாளையம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இது போல் மேட்டுப்பாளையத்தில் பொது இடத்தில் நின்று ரகளை செய்த குருமாம் பேட் அமைதி நகரை சேர்ந்த தயாளன் (47) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசாரும் மேரி உழவர்கரை குண்டுசாலை ரோட்டில் ஒரு மதுக்கடை அருகே ரகளையில் ஈடுபட்ட கோலியனூரைச் சேர்ந்த மலர் மண்ணன் (47) மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (52) ஆகிய 2 பேரை ரெட்டியார் பாளையம் போலீசாரும் பாக்கமுடையான் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பெண்களை கிண்டல் செய்த நெல்லித் தோப்பு பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் (20) என்பவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். 

    மேலும் திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றில் நின்று கொண்டு பொது மக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்த வீடுரை சேர்ந்த காமராஜன் (30) என்பவரை திருக்கனூர் போலீசாரும் காட்டேரி குப்பம் எல்.ஆர். பாளையத்தில் ஒரு மதுக்கடை அருகே நின்று குடிபோதையில் ரகளை செய்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த தேவதாஸ் (35) என்பவரை காட்டேரி குப்பம் போலீசார் கைது செய்தனர்.
    லாஸ்பேட்டையில் சவ ஊர்வலத்தில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை ஏர்போர்ட் பின்புறம் உள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார். (வயது 27) இவரது மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்மனைவி இருவரும் ஊசி பாசி மணி விற்று பிழைப்பு நடத்திவந்தனர். 

    இதற்கிடையே அப்பகுதியில் அம்பிகா என்ற பெண் பாம்பு கடித்து இறந்து போனார். அவரது இறுதி ஊர்வலம்  நடைபெற்றது. இந்த சவ ஊர்வலத்தில் பங்கேற்ற  விஜயகுமார் துக்கம் தாங்காமல் அளவுக்கு அதிகமாக மது குடித்தார்.

    பின்னர் வீட்டுக்கு வந்த பிறகும் விஜயகுமார் மீண்டும் மது அருந்தி விட்டு தூங்கினார். சிறிது நேரம் கழித்து அவரது மனைவி பானுப்பிரியா பார்த்த போது கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் சுய நினைவின்றி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜயகுமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது மனைவி பானுப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொது இடங்களில் பேனர், கட்-அவுட் சட்ட விதிகளை மீறும் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதுவையில் பொது சொத்துக்களில், அரசு இடங்களில், சாலையோரங்களில்  சுவரொட்டிகள் ஒட்டுவதும், கட்-அவுட்டுகள் வைப்பதும், கொடிகள் கட்டுவதும், பேனர் வைப்பதும் பா.ஜனதா வினாலும், அந்த கட்சி சார்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

    பா. ஜனதாவின் இத்தகைய செயல்கள் புதுவை திறந்தவெளி அழகியல் சீர்கேடு தடுப்பு சட்டம் 2000-ன் படி குற்றங்களாகும்.

    இந்த குற்றச்செயல்களை பா.ஜ.க.வினர் மீண்டும் மீண்டும் செய்து வருவதும், அவை குறித்து அவ்வப்போது புகார் சொல்லியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதிருப்பது சட்ட விரோதமாகும்.

    எனவே, விளம்பரங்களை நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், பொதுப்பணித்துறை, அரசு துறைகள், நிறுவனங்கள் உடனே தாமே முன் வந்து உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பா.ஜ.க.வினர் மீது  சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    ×