search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் விஜய்
    X
    தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் விஜய்

    போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை

    புதுவை கொம்பாக்கத்தில் போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை கொம்பாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜய் (வயது 35) இவர் புதுவை காவல் துறையில் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். 

    இவருக்கு அலேஷ் என்ற மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.  விஜய்யும் அலேஷ்சும் கடந்த 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைக்கு பிறந்த நாள் விழாவை விமர்சையாக கொண்டாடினர். 

    இந்த நிலையில் வழக்கம் போல் விஜய் பணிக்கு சென்றார். இரவு 10 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பினார். மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றிருந்ததால் விஜய் தனது தாயிடம் மாடியில் தூங்கச் செல்வதாக கூறிச்சென்றார்.

    ஆனால் வெகு நேரம் ஆகியும் விஜய் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது விஜய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து விஜயை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.விஜய் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்பப் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.

    போலீஸ்காரர் விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பணிபுரியும் மற்ற போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டனர்.

    விஜயுடன் பணி புரிபவர்கள் கூறும்-போது விஜய் வழக்கம் போலவே இயல்பாகவே எல்லோரிடமும் சிரித்து பேசி வேலை-பார்த்தாகவும் அவரது முகத்தில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை என்று தெரிவித்தனர். 

    எனவே விஜய் குடும்பப் பிரச்சனையில் தான் தற்கொலை முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ்காரர் விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×