என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால் பருவமழை தொடங்கும் முன்பே புதுவையில் டெங்கு, மலேரியா வேகமாக பரவி வருகிறது.

    புதுவை மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இது அதிகம் ஆகும். எனவே, இதனை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதுடன் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் புதுவை தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி (வயது 28), குருமாம் பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதனால் புதுவை மக்களிடையே டெங்கு பீதி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    • தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
    • காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.

    காரைக்கால்:

    சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் தீபிகா (வயது19). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நிரவி பகுதியைச் சேர்ந்த கவுதம் (22). டிப்ளமோ படித்துள்ள இவர் அம்பத்தூரில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார். அப்போது, தீபிகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது.

    இவர்களது காதல் விவரம் தெரியவந்ததையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தீபிகா வீட்டை விட்டு வெளியேறி காதலன் கவுதமுடன் காரைக்காலில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து தமிழக பகுதியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் மகளை கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் சென்னை அம்பத்தூர் போலீசில் பெற்றோர் தரப்பில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை போலீசார் நேற்று மாணவியை தேடி காரைக்கால் சென்றனர்.

    இதையறிந்த காதல் ஜோடி, காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் பாதுகாப்பு கேட்டு நேற்று தஞ்சம் அடைந்தது. அவர்களை துரத்தி பிடிக்க வந்த போலீசாரை கோர்ட்டு வக்கீல்கள் தடுத்தனர்.

    அப்போது திருக்குவளையில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறி அதற்கான சான்றுகளை காதல் ஜோடியினர் காட்டினர். மாணவியின் பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினர்.

    அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோர்ட்டு வாசலில் வைத்து தனது உறவினர்களிடம் நகைகளை தீபிகா கழற்றி கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றார். இச்சம்பவம் காரைக்கால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முல்லை நகர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் (வயது 28). பெயிண்டர் வேலை செய்கிறார். இவர் அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்த தாக கூறப்படுகிறது. அந்த ப்பெண் மைனர் என்பதால், பெண்ணுடன் பேசுவதை அவர் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் தந்தை, அவரது உறவினர்கள் அரவிந்த்ராஜை பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த் ராஜ் தனது நண்பர் நந்தகோபால் மற்றும் சிலருடன் அங்குள்ள சுடுகாடு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மேற்கண்ட 4 பேர், அரவிந்த்ராஜ்ஜை ஆபாசமாக திட்டி அடித்து உதைத்துள்ளனர். தடுக்க வந்த நண்பரையும் தாக்கியுள்ளனர்.

    அங்கிருந்து வீட்டுக்கு சென்ற அரவிந்த்ராஜை விரட்டி சென்று அடித்த பொழுது, அவரது தாய் மீனா தடுத்த பொழுது அவரையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அரவிந்த் ராஜ், அவரது தாய் ஆகியோர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
    • தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுகாதாரத்துறை, ரோட்டரி கிளப் பிரைடு அமைப்பு இணைந்து புற்றுநோயை கண்டறிய 3 நாள் முகாம் நடத்துகிறது.

    முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கேன்சருக்காக புரோட்டான் என உயர் ரக சிகிச்சை தரப்படுகிறது. இதன் மூலம் ஆரம்பத்தி–லேயே சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை சரி செய்யலாம். புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். கேரளா–வில் பரவும் நிபா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது.

    மாகியில் தடுப்பு நடவடிக்கை எடுத்துள் ளோம். முககவசம் அணிய கோரிக்கை வைத்துள்ளோம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளோம். கொரோனா அளவுக்கு பரவக்கூடாது. பஸ்கள், விமானம், ரெயில் பயணிகளிடம் அறிகுறி இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறோம்.

    டெங்கு ஒழிப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 2 பேர் உயிரிழக்குப் பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.

    உடலுக்குள் ரத்தகசிவு டெங்கு பாதிப்பால் ஏற்படும். நோய் அறிகுறி வந்தவுடன் மக்கள் முன் எச்சரிக்கையுடன் மருத்துவ மனைக்கு வரவேண்டும். முன்னர் நடந்த உயிரிழப்பு கள் கவலை தரக்கூடியது தான். இனிமேல் யாருக்கும் பாதிக்கப்படக்கூடாது. டெங்கு பொருத்தவரை காலதாமதம் செய்வது காலனை வரவழைக்கும்.

    தமிழகத்தில் ஆயிரம் குடமுழுக்கு செய்ததாக சொல்லியுள்ளார்கள். அதில் எத்தனை குட முழுக்கில் முதல்-அமைச்சர் சென்று கலந்து கொண்டார்? என கேட்கிறேன். இப்படி கேட்டால், தமிழகத்தை பற்றி பேச தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்கிறார்கள். தமிழகத்தின் சார்பாக இரு மாநில கவர்னராக இருக்கும் எனக்கு உரிமை இல்லா விட்டால், வேறு யாருக்கு உரிமை உள்ளது. உரிமை என்பதில் என்ன அளவுகோல் வைத்துள்ள னர்?

    புதுவை சுகா தாரத்துறை உயர் பொறுப் பில் உள்ள டாக்டர்கள் தனியார் மருத்துவமனை யிலும், தனியாகவும் சிகிச்சை அளிக்கின்றனர். அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வருவது, ஆபரேஷனை தனக்கு தெரிந்த இடத்தில் மாற்று வது உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியு ள்ளோம். தனியார் மருத்துவ மனை யில் கவனம் செலுத்த விரும்பினால் அங்கு சென்று சிகிச்சை தரட்டும். மக்கள் பாதிக்கப்பட்டால், அரசு டாக்டர்கள் தனியார் மருத்து வமனையிலோ, தனியாகவோ சிகிச்சை செய்வதை தடை செய்ய தயங்க மாட்டோம். இதை தொலை நோக்கு திட்டமாக வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
    • மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மிஷன் வீதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நிதியுதவி வழங்கி பேசியதாவது:-

    நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 9 மாத நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும். புதுவையில் 312 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச சைக்கிகள், புத்தகம் வழங்கியுள்ளோம். ரொட்டி பால் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்.

    லேப்டாப் வழங்கும் திட்டம் 40 நாளில் தொடங்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே எண்ணம் கொண்ட ஆட்சி உள்ளதால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடிகிறது. கல்வித்துறைக்கு கடந்த ஆண்டைவிட ரூ.100 கோடி அதிகமாக ஒதுக்கப் பட்டுள்ளது. கல்விதான் மிகச்சிறந்த ஆயுதம், அதை கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும். சந்திராயன் திட்டத்தில் தமிழர்கள் இடம்பெற்றனர். அதைப்போல நீங்களும் விஞ்ஞானியாக உருவாகலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அருட்தந்தை ரொசாரியோ, தலைமை ஆசிரியர் வின்சென்ட், துணை தலைமை ஆசிரியர் அகஸ்டின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சபாநாயகர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முடிவு
    • கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தவளகுப்பம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தின் போது தற்போது கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்கி வருவதால் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றை தனித்தனி வளாகமாக மாற்றும் வகையில் புதிய மதில் சுவர் அமைக்க வேண்டும். கல்லூரியின் மேம்பாட்டுக்காக தேவைப்படும் அனைத்தையும் விரைந்து செய்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக விரைந்து ஆலோசித்து புதிய மதில் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்த ஆய்வு கூட்டத்தின் போது மேல்நிலைக் கல்வி இயக்குனர் அமன் சர்மா, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, லட்சுமி, காந்தன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, ஞானசேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    • அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    தென்னாப்பிரிக்கா நாட்டில் 5-வது சர்வதேச வலைப்பந்து போட்டி வருகின்ற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    தற்பொழுது இந்திய அணி வருகிற 28-ந் தேதி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் புதுச்சேரியில் இருந்து பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கமலநாதன் மகள் கமலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அவரை கவுரவித்து அவருக்கு சங்கத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நலச் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.

    மேலும் சங்க செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.

    • சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
    • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் ஈஸ்ட்கோஸ்ட் மருத்து வமனையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பல ஆண்டாக சிறுநீரக செயலிழப்புடன் போராடி வந்த 36 வயது இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடத்தப் பட்டுள்ளது. அவருக்கு தன்னலம் பாராமல் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் தனது சிறுநீரகத்தை ஒருவர் தானம் கொடுத்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முருகேசன் தலைமையில் டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் டாக்டர்கள் வெற்றிகரமாக இந்த அறுவை சி கிச்சையை செய்தனர். சிறுநீரகம் தானம் பெற்றவர், தானம் கொடுத்தவர் இருவரும் நலமுடன் உள்ளனர்.

    இதுகுறித்து தலைமை சிறுநீரகவியல் நிபுணர் முருகேசன் கூறியதாவது:-

    தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பட்ட ஆராய்ச்சியின் உதவியோடு பல நோயாளிகளின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை இந்த தருணம் உணர்த்துகிறது.

    புதுவை, அண்டை மாவட்டங்களில் உள்ள சிறுநீரக பாதிப்பு நோயாளிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்த எங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    அதன் ஒரு பகுதியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர், இறந்தவர்கள் தானம் செய்யும் சிறுநீரகத்தை பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எங்கள் இலக்கை அடைய பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

    கடந்த ஆண்டு எங்கள் மருத்துவமனைக்கும், சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    பெருநகரங்களுக்கு இணையான தரத்தில், அதைவிட குறைவான கட்டணத்தில் புதுவையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து புதுவை முழுவதும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் நோணாங்குப்பம் பகுதியில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    மாடிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை மூட வேண்டும், வீடுகளில் பயன்படுத்தாத பொருட் களில் தண்ணீர் தேங்கி–யுள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    கொசு–வின் மூலம் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுவதாக அறிவுறுத்தி னர். மேலும் மைக் மூலம் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    • மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    • குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் டெங்கு பாதித்து 2 பெண்கள் பலியாகியுள்ளது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு டெங்கு பாதிப்பை முன்னெச்சரிக்கையாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. குப்பைகள் மற்றும் இதர கழிவுகளின் நகரமாகவே புதுவை காட்சியளிக்கிறது.

    புதுவை அரசு டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம், உள்ளாட்சி, பொதுப்பணி துறைகள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    கொசு ஒழிக்க மருந்து தெளிக்க வேண்டும். உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருபுவனை பகுதியில் மேம்பாலங்கள் மற்றும் 3 வழி சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் நேற்று முன்தினம் அதிகாலையில் திருபுவனையில் இருந்து கடலூர் வழியாக முக்கிய கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்ப ட்டுள்ளன.

    இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    அதிகப்படியான தொழிற்சாலைகளும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த பகுதியில் தற்போது வாகனங்கள் 3 பக்கமும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தற்போது விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் வழியாக கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.6 ஆயிரம் விலையிலும் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து 16 அடி விநாயகர் சிலை ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
    • விலை அதிகரித்ததன் காரணமாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திருக்கனூரை அடுத்த தமிழக பகுதியான தி.புதுக்குப்பத்தில் பல்வேறு உயரங்களிலும் பல வண்ணங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    3 அடி முதல் 16 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 3 அடி விநாயகர் சிலை ரூ.6 ஆயிரம் விலையிலும் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து 16 அடி விநாயகர் சிலை ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மரவள்ளி கிழங்கு கூழ், பேப்பர் மாவு, கலர் மாவு, சிமெண்டு பேப்பர் பை உள்ளிட்ட பொருட்களால் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வகையில் விநாயகர் சிலைகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

    மூல பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் சிமெண்டு பை விலை அதிகரிப்பால் விநாயகர் சிலை தயாரிப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவுக்கு முன்பு ரூ.1500-க்கு விற்கப்பட்ட 3 அடி விநாயகர் சிலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    விலை அதிகரித்ததன் காரணமாக வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்திக்கு குறைந்த நாட்களே இருப்பதால் இனி வரும் காலங்களில் விற்பனை சூடு பிடிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ×