என் மலர்
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தநேரியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு அங்கு தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் தாழி குளத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜன் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் கருப்பையாவுக்கு சொந்தமான வீடுகள் சேதமடைந்தன. எனவே அந்த வீடுகளில் மராமத்து பணி மேற்கொள்ள திட்டமிட்டார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை தொகுப்பு வீடுகள் இடிந்தது.
இதில் பூபதிராஜன் மகன் அஜித் குமார் (வயது 23) இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஹரிகரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 சிறுவர்களும் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் ஜூனைத் அகமது உள்பட 4 பேருக்கும் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மே 2-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்கள் 4 பேருக்கும் விருதுநகரில் உள்ள சிறுவர்களுக்கான கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த 15 வயது சிறுவன் ஒருவன், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மதுரை சரக டி.ஐ.ஜி., தென்மண்டல ஐ.ஜி., ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைவர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட சட்ட உதவி மையம் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடிதத்தில் சிறுவன் கூறியிருப்பதாவது:-
எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் இளம்பெண் பழக்கம் ஆனார். எங்கள் 4 பேரையும் அந்த பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிடங்கிக்கு வர சொன்னார். அப்போது அவரது கைபேசியில் இருந்த ஆபாச படங்களை காட்டினார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறாக வழி நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
போலீசாரின் நடவடிக்கையில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தவறாக வழிநடத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்? என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்.
இவ்வாறு தனது கடிதத்தில் அந்த சிறுவன் கூறியிருக்கிறார்.
பாலையம்பட்டி:
தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் ஓமலூரை சேர்ந்த சித்தையன் (வயது 64) ஓட்டி வந்தார்.
அந்த லாரி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டியில் உள்ள மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து லாரியை ரோட்டின் ஓரமாக டிரைவர் நிறுத்தி பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே சாலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்து. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. அப்போது ஆம்னி பஸ்சுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கார், ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது.
இதில் பஞ்சரான பயரை கழற்றி வேறு டயரை மாட்டிக்கொண்டிருந்த லாரியின் டிரைவர் சித்தையன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ஆம்னி பஸ் மற்றும் காரின் முன்பகுதி நொறுங்கியது. ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்துவந்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் 40) என்பவர் இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆம்னி பஸ் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த உதயகனி, பஸ் பயணி தங்கமாரியப்பன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஆம்னி பஸ் மற்றும் காரில் வந்த முத்துக்குமார், பத்மாவதி, ராஜா, சுயம்பு லிங்கம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த வெள்ளை சாமி என்பவரிடம் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), விக்னேஷ் (25) என்ற இரு சகோதரர்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாத்தூர் அருகில் உள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைபோட்டு மேய்ச்சல் செய்து வந்தனர். அங்கிருந்து ஏழாயிரம் பண்ணை செல்வதற்காக நேற்று நள்ளிரவில் ஆடுகளை ஓட்டிச்சென்றனர்.
உப்பத்தூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 38 ஆடுகள் பலியானது. 12 ஆடுகள் படுகாயம் அடைந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.






