என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பச்சிளம் குழந்தை திடீரென இறந்ததால், உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அடுக்கம்பாறை:

    வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் அயாத் (வயது 26). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி தஸ்லீம் (24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 26-ந்தேதி சேர்ந்தார்.

    மகப்பேறு பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும், கழிவறை சுத்தமாக இல்லை என்றும் கூறி, அவர் மகப்பேறு வார்டுக்கு வெளியே உள்ள கட்டண கழிவறைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்று வந்தபோது, அவருக்கு எதிர்பாராத விதமாக கழிவறை வாசலிலேயே அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

    இதையறிந்த உறவினர்கள் தஸ்லீமை மீட்டு மகப்பேறு வார்டுக்குள் அழைத்துச் சென்றனர். குழந்தையை தூக்கி சென்று, டாக்டர்களிடம் ஒப்படைத்தனர். டாக்டர்கள், அந்தக் குழந்தையை 2 நாட்களாக இங்குபேட்டரில் வைத்துள்ளதாகக் கூறினர். 28-ந்தேதி மாலை 4 மணியளவில் அக்குழந்தை திடீரென இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆத்திரம் அடைந்த அவர்கள், தஸ்லீமுக்கு உரிய படுக்கை வசதி, குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி குற்றம் சாட்டினர். குழந்தை இறந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தஸ்லீம்-அயாத் தம்பதியருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மகப்பேறு கட்டிடம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலூர் தாலுகா போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அவர்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தத் தம்பதியினரை அழைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அல்லேரிமலையில் சோதனைக்கு சென்ற போலீஸ்காரர்களை வழிமறித்து சாராய கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அல்லேரிமலை கிராமத்துக்கு சென்று அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட போலீசார் சாராயம் காய்ச்சுவதில் இருந்து விடுபட்டு சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாராய கும்பலை பிடிக்க நெல்லிமரத்து கொல்லை பகுதிக்கு போலீசார் பைக்கில் சென்றனர். அவர்கள் சென்ற பாதையில் மரங்கள் வெட்டி போடப்பட்டு இருந்தது.

    இதனால் பைக்குகளை நிறுத்தி விட்டு போலீசார் அந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த சாராய வியாபாரி கணேசன் உள்ளிட்ட 20 பேர் கொண்ட சாராய கும்பல் திடீரென போலீசார் முன்வந்து நின்றனர்.

    அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் சாராய கும்பல் போலீசாருடன் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர்.

    போலீசார் செல்போனில் சாராய கும்பலை படம் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய கும்பல் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டனர்.

    பின்னர் அங்கிருந்த கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளை எடுத்து போலீசாரை பயங்கரமாக தாக்கினர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

    பின்னர் சாராய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். கும்பல் தாக்கியதில் ஏட்டு அன்பழகன் (வயது35), போலீஸ்காரர் ராகேஷ்(29) ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த 2 போலீசாரும் உடனடியாக வேலூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் மலையில் இருந்து கீழே இறங்கிய சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். அவரை போலீசார் மீட்டு அருகே உள்ள அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 120 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், தலைமையிலான போலீஸ் படை இன்று காலை அல்லேரி மலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பறக்கும் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சாராய கும்பலை கூண்டோடு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அணைக்கட்டு பகுதியில் உள்ள சாராய வியாபாரிகள் பலர் தலைமறைவாகி உள்ளனர்.

    அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி நிரந்தரமாக சாலை வசதியுடன் மயானம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் செட்டிகுப்பம் ஊராட்சி சாமுண்டிபுரம், ஓட்டேரிகோடி, உள்ளி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இக்கிராமங்களில் இறப்பவர்களை நீண்டகாலமாக நிரந்தர மயானம் இல்லாத காரணத்தால் ஓட்டேரி மதகு தண்ணீர் செல்லும் கால்வாய் ஓரம் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்துள்ளனர்.

    தற்போது அந்த கால்வாயின் ஒருபுறம் ரோடு போடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இறந்தவர்களின் உடல்களை குறுகிய இடத்தில் அடக்கம் செய்யும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    அந்த பகுதியில் அரசு நிலத்தையோ அல்லது புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி நிரந்தரமாக சாலை வசதியுடன் மயானம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்தது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் யுவராஜ் (வயது22). கட்டிட மேஸ்திரி. இவருக்கும், இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    புதுப்பெண்ணான சுப்புலட்சுமி கணவர் வீட்டில் அதிகமான வீட்டு வேலைகள் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை யுவராஜ் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார். வேலை முடிந்து மாலை 6.45 மணியளவில் பசியோடு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் மனைவி சுப்புலட்சுமி அடுப்பில் தண்ணீர் சுடவைத்துக் கொண்டிருந்தார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி கணவனை அடித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பசியோடு வீட்டுக்குள் வந்த யுவராஜூக்கு மனைவி தன்னை அடித்ததால் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதனால் அங்கிருந்த ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுப்புலட்சுமி மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் சுப்புலட்சுமி இறந்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்தனர்.
    வேலூரில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,436 ஆக அதிகரித்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 03 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 870 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 43  ஆயிரத்தைக் கடந்தது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் வேலூரில் இன்று மேலும் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,436 ஆக அதிகரித்துள்ளது.



    வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வியாபாரியை கைது செய்த போலீசார் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை கொணவட்டம் சர்வீஸ் சாலையை ஒட்டியுள்ள திருமண மண்டபம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த கருகம்புத்தூர் ஹாஜிபுராவை சேர்ந்த மஸ்தான் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான மஸ்தான் ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர் மீண்டும் அவர் கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    வேலூர் லாட்ஜில் கர்ப்பிணி மனைவியை கொன்று ராணுவவீரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (35). ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுல் (26). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அமுல் தற்போது கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த வாரம் குழந்தை பிறக்க இருந்தது. ஜம்மு காஷ்மீரில் இருந்து புருஷோத்தமன் ஒரு மாதம் விடுப்பில் கடந்த 25-ந்தேதி ஊருக்கு வந்தார்.

    புருஷோத்தமனின் தந்தை ஆறுமுகம் (75) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு நேற்று முன்தினம் இரவு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் புருஷோத்தமன், அமுல் ஆகியோர் மருத்துவ மனையில் உடனிருந்தனர்.

    இரவு நேரமானதால் ஊருக்கு செல்லாமல் சி.எம்.சி. மருத்துவமனைக்கு எதிரே உள்ள விடுதியில் இருவரும் தங்கினர்.

    இந்நிலையில், ஆறுமுகத்தின் மூத்த மகன் ராஜ்குமார் (38) என்பவர் விடுதியில் தங்கியுள்ள தம்பி புருஷோத்தமனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், எதிர்முனையில் அவர் பேசாததால் விடுதிக்கு சென்று அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரம் கதவை திறக்கவில்லை என்பதால் மருத்துவமனைக்கு திரும்பிவிட்டார்.

    பகல் 1 மணியளவிலும் அவர் வராததால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார், விடுதி மேலாளர் கனி மற்றும் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையில் அமுல் பிணமாகவும் புருஷோத்தமன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தனர்.

    வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு புருஷோத்தமன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    உதவி கலெக்டர் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே இருவரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி களப்பணியாளர்களுக்கு துணிமணிகள், கையுறைகள் முககவசம் வழங்கப்பட்டது.
    குடியாத்தம்:

    கொரோனா காலங்களில் குடியாத்தம் நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நகராட்சி களப்பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் கையுறைகள், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது, நகராட்சி வளாகத்தில் சங்கத் தலைவர் (தேர்வு) ஏ.மேகராஜ் குடும்பத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக செயலாளர் என்.சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் (தேர்வு) ஜே.கே. என்.பழனி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிசில் தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டு 200 களப் பணியாளர்களுக்கு துணிமணிகள், கையுறைகள் முககவசம் ஆகியவற்றை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க செயலாளர் ஜெ.தமிழ்செல்வன், சமுதாயப் பணி இயக்குனர் வி.என்.அண்ணாமலை, நிர்வாகிகள் மதியழகன், அன்பரசு, சேட்டு ,சந்திரன் உள்பட நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    பள்ளிகொண்டா பேரூராட்சியில் பணிபுரியம் ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட 60 பேருக்கு கேரள மூலிகை சாறு வழங்கப்பட்டது.
    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆய்வு செய்தார். அப்போது பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் உள்பட 60பேருக்கு தலா 4 பாட்டில்கள் அடங்கிய கேரள மூலிகை சாறு வழங்கினார். இதில் செயல் அலுவலர் மலர்மாறன் மற்றும் அலுவலக பதிவுத்துறை அலுவலர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் ஒடுகத்துார் பேரூராட்சியில் பணிபுரியம் ஊழியர்கள் மற்றும் டெங்கு ஓழிப்பு பணியாளர்கள் உள்பட 60 பேருக்கு கேரள மூலிகை சாறு வழங்கப்பட்டது. இதனை ஒடுகத்தூர் பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத் இளநிலை உதவியாளர் ரமேஷ் ஆகியோர் வழங்கினர்.
    கே.வி.குப்பத்தை அடுத்த மகமதுபுரம் கிராம மக்களுக்கு ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த மகமதுபுரம் கிராம மக்களுக்கு ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வைரஸ் காய்ச்சலைத்தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அறிவியல் இயக்க ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    குடியாத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. தனியார் மருத்துவமனையில் காவலாளியாக உள்ளார். இவரது மகன் ஜெயமோகன் (வயது 23) மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டு அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அப்போது அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயமோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சிங்காரம் உள்ளிட்டோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூருவில் இருந்து வேலூருக்கு 2 மினிவேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    பெங்களூருவில் இருந்து வேலூருக்கு 2 மினிவேன்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இரவில் சோதனைச்சாவடி, சுங்கச்சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடும் படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா பாக்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் வடக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியிலும், விரிஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் அருகிலும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை கிரீன் சர்க்கிள் வழியாக வந்த ஒரு மினிவேனை நிறுத்தி போலீசார் சோதனைச் செய்தனர். அதில் குட்கா பாக்குகள் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து மினிவேனில் இருந்த டிரைவர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பன்வர்லால் (வயது 26), ரமேஷ்குமார் (24), வாணியம்பாடி செட்டியப்பனூரைச் சேர்ந்த ராஜ்குமார் (33) எனத் தெரிய வந்தது. பன்வர்லால், ரமேஷ்குமார் ஆகியோர் சுண்ணாம்புக்காரத் தெருவில் தங்கியிருந்து ஒருகடையில் வேலை செய்து வந்ததும், 3 பேரும் சேர்ந்து பெங்களூருவில் இருந்து குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை வேலூரில் உள்ள கடைகளில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    அதில் பெங்களூருவைச் சேர்ந்த பீமாராவ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுலால் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பன்வர்லால் உள்பட 3 பேரை கைது செய்தனர். மினிவேனில் 25 அட்டை பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் விரிஞ்சிபுரம் வழியாக ஒரு மினிவேனை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லத்தின்கான் (24), விஜயராம்சுதேசி (33) எனத் தெரிய வந்தது. அந்த மினிவேனில் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா பாக்குகளை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். மினிவேனில் கடத்தி வந்த 750 கிலோ எடையிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் எனப் போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள், மினிவேன்கள் ஆகியவற்றை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைதான 5 பேரும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து, குடியாத்தம் கிளை சிறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்குகள், பான்மசாலா பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குட்கா பாக்குகள் கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் பீமாராவ், மஞ்சுலால் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் கடைகள், குடோன்களில் குட்கா பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? எனக் கண்காணித்து வருகிறோம். வேலூர் வழியாக குட்கா பாக்குகள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    ×