என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்டசமாாக பொன்னேரியில் 7.6 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீர் வெளியேற முடியாததால் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி அடுத்த கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின் மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், அங்காள பரமேஸ்வரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோர் மழைபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தடப்பரம்பாக்கம் ஊராட்சி ஏ.ஏ.எம் நகர், துரைசாமி நகர் தட பெரும்பாக்கம் காலனி, பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிநிற்கிறது

    மேலும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலையான மீஞ்சூர்-வல்லூர்சாலை, வல்லூர்-திருவொற்றியூர்- மணலி சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 தீயணைப்பு வாகனங்கள், 6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

     

    இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் நிலைய போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மற்றும் தீயணைப்பு குழுவினர் மழைவெள்ளம் பாதித்தபகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் போது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன எந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் ஆபத்துக் காலங்களில் 101,112 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது.
    • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த மழை இல்லாததால் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 189 கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை தாண்டி உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் தற்போது 3,112 மில்லியன் கன தண்ணீர் உள்ளது. 166 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதேபோல் புழல் ஏரிக்கும் நீர்வரத்து 258 கனஅடியாக சரிந்து உள்ளது. புழல் ஏரியின் மொத்த உயரம் 3300 மி.கனஅடி. இதில் 2751 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3231 மி.கனஅடி. இதில் 1867 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 120 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 642 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 81 கனஅடி தண்ணீர் வருகிறது. 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 434 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் உள்பட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 8806 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி இருப்பதால் தொடர்ந்து கனமழை பெய்தால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • போரூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போரூர், குன்றத்தூர் சாலையில் உள்ள ஏரியில் நேற்று காலை இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பிணமாக மீட்கப்பட்டது பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த கலாவதி (வயது37) என்பது தெரிந்தது.

    திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கலாவதியின் கணவர் சண்முகம் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது கலாவதியும் தற்கொலை செய்து உள்ளார்.

    • சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது.
    • அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது.

    பூந்தமல்லி:

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் உள்ள மழை நீர் அவ்வப்போது சென்னை மக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து பைப்புகள் அமைக்கப்பட்டு செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையத்திற்கு செல்கிறது. இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை கொல்லசேரி அருகே கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் வெளியில் பீய்ச்சி அடித்து அருவி போல் மேல் நோக்கி பாய்ந்து கொட்டுகிறது. இதனால் தண்ணீர் வீணாக ஆறாக தரையில் ஓடுகிறது.

    இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல் தண்ணீர் வீணாக தொடர்ந்து செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைந்த குழாயை உடனடியாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    பொன்னேரி:

    வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழைபெய்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது. பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், பழவேற்காடு, பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முடியாததால் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து செல்கிறார்கள். பொன்னேரி ரெயில் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் முடிக்கப்படாததால் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போல் காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவேங்கடபுரம் சாஸ்திரி தெரு சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி தண்ணீர் தேங்கி நிற்கிறது. துரைசாமி நகர் பகுதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மழைகால முன்எச்சரிக்கையாக மின்மோட்டார், நீர் மூழ்கி மோட்டார், 500 மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், ஜே.சி.பி. எந்திரங்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக நகராட்சி ஆணையர் கோபிநாத் தெரிவித்து உள்ளார். இன்று காலையும் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    • வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை ரேகா கடக்க முயன்றார்.
    • திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பலியானவர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா (வயது22) என்பது தெரிய வந்தது.

    இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். ரேகாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த விரைவு ரெயில் மோதி ரேகா பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
    • சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    திருவள்ளூர்:

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் கூறுகையில்,

    24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது. தற்போது நீர்வரத்து 301 கனஅடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 162 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், உபரி நீர் திறப்பு அதிகரிக்கும்.

    உபரிநீர் திறப்பு அதிகரிக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

    21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.67 அடியை எட்டி உள்ளது.

    சோழவரம் ஏரி நீர்மட்டம் மொத்த உயரமான 18.86 அடியில் தற்போது 14.37 அடியை எட்டி உள்ளது.

    பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் மொத்த உயரமான 35 அடியில் 30.52 அடியை எட்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    • கனமழையால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.

    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் திருவள்ளூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனமழை எதிரொலியால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8 ஆயிரத்து 744 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 74 சதவீதம் ஆகும்.

    வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து எதிர்பாத்த அளவு இல்லை. இந்த 3 மாவட்டங்களிலும் மொத்தம் 930 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 570 ஏரிகள் 50 முதல் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. 200 ஏரிகள் 75 சதவீதத்திற்கும் மேல் கொள்ளளவை எட்டி உள்ளது. 

    சென்னையை சுற்றி உள்ள 12 ஏரிகள் பாதி அளவு மட்டுமே நிரம்பி உள்ளது. இதே நிலைதான் மாமல்லபுரம், மீஞ்சூர், பொன்னேரி, ஆரணி பகுதியில் உள்ள ஏரிகளிலும் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம், பருத்திப்பட்டு, அத்திப்பட்டு, திருத்தணி மற்றும் ராமாபுரம் பெரிய ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விடும். தற்போது தொடர்ந்து பலத்த மழை இல்லாததால் ஏரி, குளங்களுக்கு போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லை. வரும் நாட்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏரி, குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் என்றார்.

    • ராஜி தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜி (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் எர்ணாவூர் ராமகிருஷ்ணாநகர் அருகே தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.
    • பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காக்களூர் ஊராட்சிக்கு திருவள்ளூர் ஹம்சா நகர் ஏரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதற்காக தனி பைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயின் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக சேதம் அடைந்த குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வருகிறது.

    இதுகுறித்து காக்களூர் பொதுமக்கள் ஊராட்சி மற்றும் அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை குடிநீர் குழாய் இணைப்பு மாற்றப்படவில்லை.

    இதனால் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது கூனிபாளையம் காலனி. இங்கு சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 4 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் நீர்வற்றி விட்டதால் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியினருக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சீதஞ்சேரி -பெண்ணாலூர்பேட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மற்றும் தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், பூண்டி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ரகு ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் வழங்கவும், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் விநியோகம் செய்யவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×