என் மலர்
சேலம்
- பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
குரங்குசாவடி பகுதியில் உள்ள நகரமலையில் பெருமாள் சாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
- மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
- இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சேலம்:
மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் கோவில்களிலும் சிறப்பு பூைஜகள் நடந்தன. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
உழவர் சந்தைகள்
இதையொட்டி சேலம் மாவட்ட உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்ைட, சூரமங்கலம், தாதகாப்பட்டி உழவர் சந்தைகள் மற்றும் பால் மார்க்கெட், ஆற்றோரம மார்க்ெகட், கடை வீதி உள்பட காய்கறி மார்க்கெட்டுகளிலும் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதனால் காய்கறிகளிள் விலை சற்று அதிகரித்து காண்ப்பட்டது.
தக்காளி 10 முதல் 16 ரூபாய் வரையும், உருளை கிழங்கு 32-50, சின்ன வெங்காயம் 60-65, பெரிய வெங்காயம் 36-40, பச்சை மிளகாய் 22-26, கத்திரி 22-25, வெண்டைக்காய் 14, முருங்கைக்காய் 30-70, பீர்க்கங்காய் 32-35, சுரக்காய் 12-15, புடலங்காய் 14-18, பாகற்காய் 32-35, தேங்காய் 25-28, முள்ளங்கி20, பீன்ஸ் 75-85, அவரை40-45, கேரட் 44-48, மாங்காய் 70-80, வாழைப்பழம் 40-60, கீரைகள் 20-24, பப்பாளி 25-30, கொய்யா 50-40, ரூபாய்க்கும் விற்பனையானது.
பூ மார்க்கெட்
சேலம் பழைய பஸ் நிலைய வணிக வளாகம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.
இந்த பூ மார்க்கெட்டில் இன்று காலை முதலே அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பூக்களை வாங்கவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இதனால் பூக்கள் விலை சற்று அதிக மாக இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பூக்களை அதிக அளவில் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
- தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு, ஞானபத்மா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (44). நிதி நிறுவன உரிமையாளர். இவர் கடந்த ஜூன் 17-ந் தேதி நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வழிப்பறி
அப்போது அங்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சில நபர்கள் தினேஷை திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.5200 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (45), நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டி அரூரைச் சேர்ந்த இளங்கோவன் (48) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஈரோடு ரமேஷ், எடப்பாடி கொங்கணாபுரம் ஜனார்த்தனன், சரவணன், கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார், பழனிசாமி, துரை, சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
ஆயுள் தண்டனை கைதி
இந்த வழக்கில் தொடர்பு டைய கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி குமார் (43) என்பவரை ஏற்காடு அடிவாரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நெத்திமேடு வழிப்பறி வழக்கில் அவரை கைது செய்ய இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதையடுத்து கோவை நீதிமன்றத்தில் ஒரு நாள் அனுமதி பெற்று நேற்று அவரை காவலில் எடுத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரை கோவை சிறையில் மீண்டும் அடைக்கும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ள னர்.
- அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
- அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
சேலம்:
முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான நாளாக அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம். அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பது நம்முடைய சந்ததிகளை காக்கும். வீட்டில் உள்ள சுபகாரிய தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.
மகாளய பட்ச காலம்
செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 14 வரையிலான காலம் மகாளய பட்ச காலம் என்று அழைக்கப்படுகிறது.மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு உரிய காலமாகும்.இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.
அதன்படி மகாளய அமாவாசையான இன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சேலம் அணை மேடு பகுதியில் இன்று காலை முதலே பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
இதில் முன்னேர்களை நினைத்து ேதங்காய் பழம் உடைத்து எள், அரிசி, பூக்களை வாழை இலையில் வைத்து பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையொட்டி அணை மேடு பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.
இதே போல சுகவனேஸ்வ ரர் கோவில் நந்தவனம் பகுதியிலும் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
மேட்டூர், பூலாம்பட்டி காவிரி ஆறு உள்பட பல்வேறு நீர் நிலைகளிலும் பொது மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையொட்டி சேலம் அணைமடு, சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து படைக்கிறோம்.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரமச்சூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஓமலூர் நகரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, சேலம், தாரமங்கலம், இரும்பாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், குறுக்கே சேலம் ஓமலூர் ரெயில்வே இருப்பு பாதை செல்கிறது. இங்கு அடிக்கடி ரெயில்வே கேட் போட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இங்கே தற்போது பாலம் கட்டி போக்குவரத்து சென்று வருகிறது.
இந்தநிலையில், கீழே உள்ள பகுதி மக்கள் சென்று வருவதற்கான சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், தற்போது சர்வீஸ் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிலம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருவாய்துறை அதிகாரிகள், சாலை அமைக்கும் திட்ட அதிகாரிகள் இணைந்து, சாலைக்கான நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து பேசி ஒப்புதல் பெற்றனர். எடுக்கப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்பிற்கு மேல் ஒரு மடங்கு சேர்த்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு காலி நிலம், வீடுகள் எடுக்கப்படுகிறது. கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
சங்ககிரி:
பெங்களூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூர் கூடல் கேட்டில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இவருடன் லோடுமேனாக திண்டுக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன் (36) என்பவரும் உடன் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு சங்ககிரி அடுத்து வீராச்சிபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மகேந்திரன் ஓட்டிச் சென்ற லாரியின் முன் பகுதி முற்றிலும் சிதைந்து போனது. இதில் மகேந்திரன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சங்ககிரி சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
- தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 29-ந் தேதி திருவாரூர் மாவட்டம் வடுவூரில், தேசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்களை தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் வி.சுரேஷ்குமார், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான கபடிப் போட்டியில், தமிழக அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழக அணியில்விளையாடு வதற்கு பங்கேற்கும் மாணவர் வி.சுரேஷ்குமார் மற்றும் மாணவருக்கு பயிற்சி அளித்த வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் கோ.ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கு.கலைஞர் புகழ் மற்றும் பெற்றோர்களும், பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக அணியில் இடம் பிடித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக திறமை வெளிப்படுத்தி, எனது பள்ளிக்கும், நமது மாநிலத்திற்கு பெருமை தேடித் தருவேன் என மாணவர் வி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
- தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது.
எடப்பாடி - நெடுங்குளம் பிரதான சாலையில், வெள்ளரி வெள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பருத்தி மற்றும் தேங்காய் கொப்பரை விற்பனைக்கான பொது ஏலம் நடைபெற்றது. இப்போது ஏலத்தில்112 மூட்டை பருத்தி விற்பனையானது. பொது ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூபாய் 5,000 முதல் 7,109 வரை விற்பனையானது. இதேபோல் பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.7,631 முதல் ரூ.7900 வரையிலும், இரண்டாம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.6731 வரை விலை போனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான வணிகம் நடைபெற்றது.
- கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது.
- நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. அதே போல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்கவில்லை.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கோவில் மற்றும் கிறிஸ்துவ கோபுரங்கள் வெளியே தெரிந்தது.
அதோடு இல்லாமல் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பரப்பு வெடித்து காணப்பட்டது. மேலும் பாறைகள் மற்றும் கற்களாக காட்சியளித்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.
ஆனாலும் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரத்து 260 கனஅடியாக குறைந்தது. மேலும் கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் அணையில் தற்போது 11.38 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7.61 அடி உயர்ந்து உள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே அளவில் நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும்.
- ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார்.
- மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார்.
சேலம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா மதனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது ஷபி (38), இவர் நேற்று காட்பாடி-கோழிக்கோடு ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அப்போது ரெயில் லோகூர்-டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்த முகமது ஷபி தவறி கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொரு சம்பவம்...
இதே போல சேலம் மாவட்டம் ஆத்தூர் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள சின்னமசமுத்திரம் பஞ்சமர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வந்தார். அதே போல நேற்றும் வேலை முடிந்து சேலத்தில் இருந்து சேலம்-விருதாச்சலம் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மின்னாம்பள்ளி-ஏத்தாப்பூர் ரெயில் நிலையம் இடையே சென்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார்.
இதே போல சேலத்தை அடுத்த மேக்னசைட்-கருப்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டாகிய நிலையில் பிணமாக கிடப்பதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு போலீசாருடன் விரைந்து சென்ற அவர் விசாரணை நடத்தினார். அப்போது தலை துண்டாகிய நிலையில் இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை ரெயில் தண்டவாளப்பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நேற்றிரவு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது. மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்தும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம்
- சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம்
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அரசிரா மணி பழக்ககாரன்காடு சோழீஸ்வரர் கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜையுடன் அன்னதானம் நடைபெறும்.
மேலும் சங்கடகர சதுர்த்தி, சஷ்டி கிருத்திகை, தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் பெறும்.
இந்த நிலையில் நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் சோழீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தேவூர் சென்றாயனூர், பெரமாச்சி பாளையம், காணியாளம்பட்டி வெள்ளாள பாளையம், சுண்ணாம்புக்க ரட்டூர், ஒக்கிலிப்பட்டி, தண்ணித்தாசனூர், குள்ளம்பட்டி மயிலம்பட்டி, காணியாளம்பட்டி, எடப்பாடி, கொட்டாயூர், வட்ராம்பா ளையம், பூமணியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
- நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்
- பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் அறிவுரைப்படி சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செல்போன் எண் பதிவு மற்றும் செல்போன் எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாளை (13-ந் தேதி) ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில்
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் இருப்பின் அவற்றை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்- 2019 -ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






