என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்-ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்
- ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.
புதுக்கோட்டை,
ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் முறையான சட்ட வல்லுனர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பை பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வருகின்ற 5-ந்தேதி புதுக்கோட்டை அருகே திருச்சி தஞ்சை சாலையில் இடையபட்டி அருகே சிவப்பட்டியில் பிரம்மாண்டமான முறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்தப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் இதில் ஜல்லிக்கட்டு பேரவையினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு அருகே ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பான பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகரன், திருச்சி ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு மக்களின் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்துள்ள ஜல்லிக்கட்டை முறையான சட்ட போராட்டம் நடத்தி இனிமேல் தடை ஏதும் வாங்க முடியாத அளவிற்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக பாராட்டு விழா நடத்த வேண்டும் என பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ஜல்லிக்கட்டை மீட்டதாக யார், யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சரியான நேரத்தில் சரியான முறையில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பை பெற்று இனி ஜல்லிக்கட்டிற்கு எந்த ஒரு காலத்திலும் தடை வாங்க முடியாத அளவிற்கு வழிவகை செய்துள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
- டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
- தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.
செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.
வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.
அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.
அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைகதைகள். அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அன்பு தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
- 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது
- குளத்தின் நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டும் என தகவல் பதிவு பொறிக்கப்பட்டுள்ளது
கந்தர்வக்கோட்டை,
கந்தர்வக்கோட்டை அருகே கலலுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சம்பட்டிப்பட்டியில் கல் பலகை நட்டிருப்பதாக குரும்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கல்வெட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது,
சம்பட்டிப்பட்டி கல்வெட்டில் 7 அடி உயரத்துடன் ஒன்றே கால் அடி அகலத்துடன் உள்ள பலகைக் கல்லின் இருபுறமும் 80 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. ராசராச வளநாடு, ராசேந்திர சோழ வள நாடு, அன்பில் எனப்படும் அம்புக் கோவில் தெற்கிலூரில் காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார் என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் இவ்வூரில் இருக்கும் பகவாந்ராயர் மற்றும் ராசிவராயர் ஆகியோருக்கு சம்பட்டிப்பட்டியில் அமைந்துள்ள பிரமன் வயலை மானியமாக வழங்கிய மன்னின் உத்தரவு, தாமிரத்தில் எழுதி சாசன மாக்கப்பட்டதையும், நிலத்தின் 4 எல்லைகளும் வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட எல்லைகல் நடப்பட்டதையும் பொது ஆண்டு 1758-ல் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரம்ம குளத்தின் நீரை பயிருக்காக மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்றும்,
இதற்கு இடையூறு செய்வோர் தோஷத்துக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் அந்த கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்திற்கு முயன்றவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்
- சுப முத்துக்குமரன் பாசறையை சேர்ந்தவர்கள்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே சுப முத்துக்குமரன் பாசறை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பழைய பஸ் நிலையத்திலிருந்து நடை பயணமாக புறப்பட்ட நபர்களை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு மறித்து போலீசார் கைது செய்தனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு சுப முத்துக்குமரன் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலீபன் தலைமை தாங்கினார்.
- புதுக்கோட்டையில் தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது
- புது பேருந்து நிலையத்திற்குள் வராததால் பொதுமக்கள் ஆத்திரம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு செல்லும் பஸ்கள் அனைத்தும் விராலிமலை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்லும். ஆனால் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் விராலிமலை சோதனைச்சாவடி வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் அவ்வப்போது பயணிகளுக்கும், பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளில் ஒருவர் புதிய பஸ் நிலையத்திற்கு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த பயணியிடம் கண்டக்டர் புதிய பஸ் நிலையம் செல்லாது, வேண்டுமென்றால் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பஸ்சானது விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தை வந்தடைந்தது. இதனையடுத்து அங்கு இறங்கிய அவர், டிரைவரிடம் சென்று ஏன் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டிரைவர் சரிவர பதில் கூறாமல் பஸ்சை இயக்கியதை கண்ட சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் இனிமேல் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்கிறோம் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த தனியார் பஸ் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு மணப்பாறைக்கு சென்றது.
- கோவில்பட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது
- 12 காளைகள், 108 வீரர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை,
அறந்தாங்கி அருகே கோவில்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 காளைகள் வந்திருந்தன. 108 வீரர்கள் கலந்து கொண்டனர். மஞ்சுவிரட்டில் கயிற்றில் ஒரு காளையை கட்டிவிட்டு அதை அடக்க 9 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களையும் களத்தில் இறக்கவிட்டு 25 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் வீரர்கள் காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்க உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.
- சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
- 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை:
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 30-ந் தேதி திருமஞ்சனம் நடைபெற்று கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கல்லாக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்
- தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லாக்கோட்டை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயப்பகுதியாகும். பம்பு செட்டை பயன்படுத்தி விவசாயம் ெசய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீருக்காக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பம்பு செட்டுகள் இயங்காதால் பயிர்கள் காய்ந்து விடுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தங்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது
- இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
புதுக்கோட்டை,
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்று தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிகட்டு ஆர்வலர்களால் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டையில் வருகிற 5-ந்தேதி பாராட்டு விழா நடைப்பெறுகிறது.இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இதையொட்டி இன்று மாலை கற்பக விநாயகர் மகாலில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் உட்பட ஜல்லிகட்டு பேரவையினர், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.
- தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
- தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
- கறம்பக்குடியில் 51 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டது
- கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை தொடர்ந்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜானகிராமன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கரை முகமது அப்பாஸ் (வயது 39), வாணிப தெரு சேக் தாவூத் ஆகியோரிடமிருந்து 51 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






