என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கி அருகே அழிஞ்சி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்பலவானேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ அழிஞ்சி அய்யனார் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3 நாட்களாக 4 கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மோகன் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நெல் சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரி ஆலோசனை கூறியுள்ளார்
- அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கும் மேல் சேதம் விளைவிக்கிறது. இந்நோய் பாதிக்கப்பட்ட பயிரின் மேல் மழைநீர்பட்டு வழிந்தோடுவதாலும், பெருங்காற்று வீசும்போது பயிர்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் காயத்தாலும் பரவுகிறது.
காற்றுடன் தொடர்ந்து பெய்யும் மழைத்தூறல், மந்தமான தட்பவெப்பநிலை, அதாவது 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் நிலவுதல், காற்றினில் ஈரப்பதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக இருத்தல் ஆகியன இந்நோய் பரவுவதற்கு உகந்த சூழல்களாகும். நிழலான பகுதிகள், நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்கள் போன்றவற்றிலும் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும்.
எனவே அந்தக் களைகளை முழுவதுமாக அழித்து விட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரினைப் பறித்து அழித்து விட வேண்டும். இதனால் மற்ற பயிர்களுக்கு இந்நோய் பரவாது. நோய் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குக் கண்டிப்பாக நீர்பாய்ச்சுதல் கூடாது. மேலும் வயலில் அதிகமாக நீர்நிறுத்தவும் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீதப் பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.
இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் நீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வடிகட்டிப் பெறப்படும் தெளிந்த கரைசலுடன் 100 லிட்டர் நீரைக் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாகக் இருந்தால் காப்பர்ஆக்சிகுளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்துக் கலவையினை 200 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து இந்நோயினை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை :
ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலூர் பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த கே.வி.கோட்டையை சேர்ந்த முத்து (வயது 40), பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த நாடியான் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- மாநில அளவிலான மணிமேலை விருது பெற புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுயஉதவி க்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர் ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். இந்த விண்ணங்கள் வட்டார அளவில் ஜூன் 25ம் தேதி வரை பெறப்படும்என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
- பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
- கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
- படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.
படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
- அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கள்ளனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம், விழாவினையொட்டி திருத்தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்பாக திருத்தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை:
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நான்காவது நாளான நேற்று சத்தியமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்
புதுக்கோட்டை:
கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாரிமுத்துக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கந்தர்வகோட்டையில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
- கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும். ஒரே வீட்டுக்குள் கூட்டு குடும்பமாக குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க கோரியும், அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க கோரியும் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை தலைமையில் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் காமராஜிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினவேல், பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமையன், சங்கர், மாதர் சங்க தலைவர் சாந்தி கார்த்திகேயன் ,இளையராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.
வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த முதல்வரை பாராட்டுவது நமது கடமை என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்
- கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த தீர்ப்புக்கான விழாவை புதுக்கோட்டையில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சம்மதம் அளித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் முதலமைச்சரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வாருங்கள். விழாவிற்கு வருபவர்கள் விழா முடியும் வரை அரங்கினுள் அமர்ந்து முதலமைச்சரை பாராட்டவேண்டும்.விழாவிற்கு வருகை தரும் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும். சட்ட போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உண்ணாமல் உறங்காமல் நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் . தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த அவரை பாராட்டுவது நமது கடமை.
கோட்டை விடுவது அ.தி.மு.க., மீட்டெடுப்பது திமுக. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் முடிவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, தி.மு.க. மாவட்ட துணைச செயலாளர் ஞான.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் அருவடிவேல், ரவி மாவட்ட கவுன்சிலர் உஷாசெல்வம், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் செங்கோல், சஷ்டி முருகன், சையது இப்ராஹிம், கிருஷ்ணமூர்த்தி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.






