என் மலர்
புதுக்கோட்டை
- மாநில அளவிலான மணிமேலை விருது பெற புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுயஉதவி க்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர் ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்ட அலுவலகத்திற்கு ஜூலை 8ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். இந்த விண்ணங்கள் வட்டார அளவில் ஜூன் 25ம் தேதி வரை பெறப்படும்என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
- பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்
- கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் கூறும்போது, 2023-2024 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 2,720 ஹெக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 153 ஹெக்டேர், பயறுவகைப் பயிர்கள் 80 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 188 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 12 ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 2 ஹெக்டேர், தென்னை 12,584 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 68.675 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 49.896 மெ.டன் பயறு விதைகளும், 24.365 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.151 மெ.டன் சிறுதானிய விதைகளும்,0.050 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 2750 மெ.டன்களுக்கு,இதுவரை 2652 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ஏப்ரல் – செப்டம்பர், ஆகஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்இராஜேந்திர பிரசாத், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மேற்பார்வை பொறியாளர் (மின்சார வாரியம்) சேகர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை தெரிவித்துள்ளார்
- படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விவசாயிகள், மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வில்லையெனில் புழுவின் தாக்குதல் தீவிரமாகிப் பயிர்ச் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்திட கேட்டுகொள்ளப்படுகிறது.
படைபுழுக்கள் இலையின் அடிப்பகுதியை சுரண்டித் தின்றுச் சேதத்தை விளைவிக்கும். வளர்ந்த புழுக்கள் இலையுறையினுள் சென்றும் தண்டுப் பகுதிகளையும், மக்காச்சோளப் பயிரின் அடிப்பகுதியையும், நுனிப்பகுதியையும் தின்று சேதம் விளைவிக்கும். ஒரே தொகுப்பாக ஒரே சமயத்தில் மக்காச்சோ ளத்தை விதைப்பதன் மூலம் படைப்புழு தாக்குதலை குறைக்கலாம். உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.ஒரு ஏக்கருக்கு 10 எண்கள் பறவை தாங்கிகள் வைப்பதன் மூலம் விதைத்தது முதல் 30 நாட்கள் வரை மக்காச்சோள படைப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
படைப்புழுவின் தாக்குதல் அதிகரிக்கும்பொழுது 15 முதல் 20 நாட்களில், அசாடிராக்டின் ஒரு சதவீத இ.சி. 400 மி.லி. அளவு அல்லது இமாமெக்டின் பென்சோயெட் 5 எஸ்.ஜி. 80 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். மக்காச்சோளப் பயிரானது 40-45 நாட்கள் வளர்ந்த நிலையில், ஸ்பெனிடோரம் 12 எஸ்.சி 100 மி.லி அல்லது நவ்லுரான் 10 இ.சி என்ற மருந்து 300 மி.லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.மேலும் இப்பூச்சியின் தாக்குதல் 60 முதல் 65 நாட்கள் வளர்ந்த பயிரில் தென்பட்டால் புளுபென்டையமைடு 480 எஸ்.சி. 80 மி.லி. அல்லது குளோரோன்டிரிபுரோல் 18.5 எஸ்.சி. 80 மி.லி. ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
- அறந்தாங்கி அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா கள்ளனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம், விழாவினையொட்டி திருத்தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு கடந்த 22-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.10 நாட்கள் நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
முன்பாக திருத்தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- கருட வாகனத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் வீதி உலா வந்தார்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை:
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நான்காவது நாளான நேற்று சத்தியமூர்த்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்
புதுக்கோட்டை:
கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாரிமுத்துக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கொடுக்கும் மருத்துவ அறிக்கைக்கு பின் மாரிமுத்துவை கைது செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- கந்தர்வகோட்டையில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
- கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும். ஒரே வீட்டுக்குள் கூட்டு குடும்பமாக குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க கோரியும், அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க கோரியும் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை தலைமையில் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் காமராஜிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினவேல், பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமையன், சங்கர், மாதர் சங்க தலைவர் சாந்தி கார்த்திகேயன் ,இளையராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.
வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.
இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த முதல்வரை பாராட்டுவது நமது கடமை என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்
- கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான ரகுபதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கமணி வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டுக்கு அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாக இருப்பதால் ஜல்லிக்கட்டுக்கு கிடைத்த தீர்ப்புக்கான விழாவை புதுக்கோட்டையில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சம்மதம் அளித்துள்ளார்.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த விழாவிற்கு வரும் முதலமைச்சரை வரவேற்க தி.மு.க.வினர் திரண்டு வாருங்கள். விழாவிற்கு வருபவர்கள் விழா முடியும் வரை அரங்கினுள் அமர்ந்து முதலமைச்சரை பாராட்டவேண்டும்.விழாவிற்கு வருகை தரும் அனைவரும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும். சட்ட போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க உண்ணாமல் உறங்காமல் நடவடிக்கை எடுத்தவர் முதல்வர் ஸ்டாலின் . தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை மீட்டெடுத்த அவரை பாராட்டுவது நமது கடமை.
கோட்டை விடுவது அ.தி.மு.க., மீட்டெடுப்பது திமுக. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் முடிவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில்தான்இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். கூட்டத்தில் திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி, தி.மு.க. மாவட்ட துணைச செயலாளர் ஞான.இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் அருவடிவேல், ரவி மாவட்ட கவுன்சிலர் உஷாசெல்வம், ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, நகரத் துணைச் செயலாளர் செங்கோல், சஷ்டி முருகன், சையது இப்ராஹிம், கிருஷ்ணமூர்த்தி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.
- புதுக்கோட்டையில் 5-ந்தேதி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன்-ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்
- ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது.
புதுக்கோட்டை,
ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உச்ச நீதிமன்றத்தில் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் முறையான சட்ட வல்லுனர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்ற தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏதும் இல்லை என்று தீர்ப்பை பெற உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு வருகின்ற 5-ந்தேதி புதுக்கோட்டை அருகே திருச்சி தஞ்சை சாலையில் இடையபட்டி அருகே சிவப்பட்டியில் பிரம்மாண்டமான முறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்தப் பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் இதில் ஜல்லிக்கட்டு பேரவையினர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளை வளர்ப்பவர்கள் ஜல்லிக்கட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்க உள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாலையீடு அருகே ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவது தொடர்பான பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மெய்யநாதன் ஆகியோரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, ஜல்லிக்கட்டு பேரவை ராஜசேகரன், திருச்சி ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு மக்களின் உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்துள்ள ஜல்லிக்கட்டை முறையான சட்ட போராட்டம் நடத்தி இனிமேல் தடை ஏதும் வாங்க முடியாத அளவிற்கு தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக பாராட்டு விழா நடத்த வேண்டும் என பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ஜல்லிக்கட்டை மீட்டதாக யார், யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் சரியான நேரத்தில் சரியான முறையில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பை பெற்று இனி ஜல்லிக்கட்டிற்கு எந்த ஒரு காலத்திலும் தடை வாங்க முடியாத அளவிற்கு வழிவகை செய்துள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
- டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.
- தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும்.
புதுக்கோட்டை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ரூ.5 கோடி நிதியை குறைக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.
செங்கோல் விவகாரத்தில் நிறைய புனைக்கதைகள் வருகிறது. புனைக்கதைகளை நம்ப வேண்டாம். தமிழக கவர்னர் புனைகதைக்கு மேலும் ஜோடித்து ஒரு கதை சொல்கிறார். உண்மையில் நடந்தது என்ன என்பதை நேரு, ராஜாஜியின் வரலாற்றில் வரலாற்று ஆசிரியா்கள் எழுதியிருக்கின்றனர்.
வரலாற்று ஆசிரியர்கள் சொன்னதில் திருவாவடுதுறை ஆதீனம் இங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி மாலையில் ஜவஹர்லால் நேருவின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேருவும் வந்து பார்த்துள்ளார். வந்த இடத்தில் இந்த செங்கோலை கொடுத்து உங்களுக்கு நினைவு பரிசாக தருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதனை நேருவும் வாங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நேருவுக்கு பல நூறு நினைவு பொருட்கள் வந்தன.
அந்த நினைவு பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி பத்திரமாக அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைத்தார். ஆகஸ்டு 14-ந் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லியிலேயே இல்லை. அவர் பாகிஸ்தான் சென்றிருந்தார். அன்று பாகிஸ்தான் நாட்டின் சுதந்திரதின நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு டெல்லி வந்தார். அதன்பின் வீட்டிற்கு சென்று விட்டு இந்திய சுதந்திர தின நிகழ்ச்சிக்கு இரவு 11 மணிக்கு மேல் வருகிறார். 12 மணிக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அதன்பின் நேரு உரையாற்றினார். நடந்தது அவ்வளவு தான்.
அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேழையில் `நேருவுக்கு அளிக்கப்பட்ட தங்க கோல்' என எழுதப்பட்டிருந்தது. அதில் ஒன்றும் `வாக்கிங் ஸ்டிக்' என எழுதப்படவில்லை. வரலாற்று ஆசிரியர்கள் எழுதினால் அது வரலாறு. மற்றவர்கள் எழுதுவது எல்லாம் புனைகதைகள். அந்த செங்கோல் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான்.
மணிப்பூர் கலவரங்களை நிறுத்துவதற்கு அமித்ஷா சென்றிருப்பது மகிழ்ச்சி. பிரதமர் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மவுனம் காப்பது வருத்தத்தை தருகிறது. டெல்லியில் மல்யுத்த வீரர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது. பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பாதது ஏன்?.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை இன்னும் முழுமையாக ஒடுக்க வேண்டும். வருமான வரித்துறை சோதனைகள் பெரும்பகுதி ஜோடிக்கப்பட்டவை. சில சோதனைகள் உண்மையாக இருக்கலாம். அது சோதனை முடிந்த பின் தெரியவரும். மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சத்துணவு திட்டத்தில் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை கண்டித்து புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியா்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அன்பு தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.






