என் மலர்
புதுக்கோட்டை
- அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
அறந்தாங்கி,
ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா மே மாதம் 28-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் முத்துமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். வழிநெடுகிலும் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி படைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் பால்குடம், வேல்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில் சுற்று வட்டார பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- ஆலங்குடி பகுதிகளில் பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது
- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட வன்னியன் விடுதி, பாத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மரக்கன்றுகளை நட்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பாத்தான் குளம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நடப்பட்ட மரக்கன்றுகளை பார்வையிட்டார்.அப்போது ஒவ்வொரு மரக்கன்றுகளும் முறையாக வளர்ச்சி அடைந்துள்ளதா, ஏதேனும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் கூறும்போது, இந்த ஆண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மா, பலா, நாவல், கொய்யா போன்ற பழம் தரக்கூடிய 50 ஆயிரம் மரக்கன்றுகளை நட உள்ளோம். ஏற்கனவே 14 இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அது நல்ல பலனை தந்துள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் நடவு செய்ய உள்ள அனைத்து மரக்கன்றுகளும் பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளாகவே நடப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
- சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.
இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.
சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது
- அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து உள்ளார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- மக்கள் குறைதீர் கூட்டத்திடில் 323 மனுக்கள் பெறப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவி த்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 323 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாற்று த்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவித் தொகையாக ரூ.1,00,000 ஒரு பயனாளிக்கும் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவித் தொகையாக தலா ரூ.17,000 வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.3,40,000 -க்கான காசோலைகளையும், ரூ.7,500 மதிப்பிலான உதவி உபகரணங்கள் 2 பயனாளிகளுக்கும் என ஆகமொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.4,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை பயனாளிகளுக்கு ரூ.8.03 லட்சத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது
- கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தாட்கோ மற்றும் கூட்டுறவு த்துறையின் சார்பில், ரூ.8.03 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு, கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.தாட்கோ மூலம் தொழில் முனைவோராக்கும் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், நிலம் வாங்கும் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், விரைவு மின்இணைப்புத் திட்டம், பால்பண்ணை அமைக்கும் திட்டம், சிமெண்ட் விற்பனை முனையம், ஆவின் பாலகம், தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், 2 பயனாளிகளின் குழந்தைகளுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.3,000 -ம், தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இலுப்பூர் கிளையின் மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்கு ழுவினர்களுக்கு தாட்கோ மானியமாக ரூ.2,25,000 உட்பட ரூ.8,00,000 மதிப்பிலான வங்கிக் கடன்களுக்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.மேலும் கல்வி உதவித்தொகை பெற்றுள்ள மாணவிகள் அனைவரும் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்யவும், வங்கி கடன் உதவித் தொகை பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக்கு ழுவினர்கள் அனைவரும் தங்களது தொழிலில் சிறப்பாக செயல்பட்டு, தங்களது வாழ்வா தாரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்புக் கோவில் முக்கம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பாலசுப்பிரமணியன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் தேன்கனியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (55), பெருமாள் (46), விராலிமலை ஈஸ்வரி நகரை சேர்ந்த சண்முகம் (61), தெற்கு தெருவை சேர்ந்த இளையராஜா (31), கல்குடியை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
- திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது
புதுக்கோட்டை:
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் வைகாசி திருவிழா வாஸ்து சாந்தி பூஜையுடன் 26-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 27-ந் தேதி கொடியேற்றத்துடன் யாக சாலை பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நேற்று சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி புஷ்ப ஊரணியில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் பகுதிகளில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் உள்ளிட்ட போலீசார் சித்தன்னவாசல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 45), பழனி (26), செல்வம் (26), கார்த்திகேயன் (30), அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன் (42), தச்சம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- புதுக்கோட்டை அருகே 1000 ஆண்டுக்கு முந்தைய நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதார கல்வெட்டு கண்டுபிடிக்கபட்டது
- புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் (திருப்பெருந்துறை)குளத்து குடியிருப்பு கிராமத்தில் பழமையான பாலம் இருப்பது குறித்து முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் பூமி. ஞானசிவம் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன், தலைவர் கரு.ராசேந்திரன் ஆகியோர் அங்கு கள ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தில் இருந்த கல்வெட்டை படியெடுத்தனர். இதில் திருவாடுதுறை ஆதீனத்தின் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிான் என்பாரின் உத்தரவுபடிக்கு பாலம் கட்டப்பட்டது என அதில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது, திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தலமாகும். ஆதீனத்தின் பதினேழாவது பட்டமாக இருந்த அம்பலவான தேசிகர் காலத்தில் காறுபாறாக இருந்த கண்ணப்ப தம்பிரான் 1889 வருடம் ஆகஸ்டு மாதம் மக்களின் விவசாய பயன்பாட்டிற்காக, வெள்ளாற்றிலிருந்து வாத்தலையை(சிறு கால்வாய்) வெட்டி ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய்க்கு நீரைக்கொண்டு வந்துள்ளார்.
குளத்துகுடியிருப்பு கிராம மக்கள் திருப்பெருந்துறை சென்று வருவதற்கு பாலத்தையும், பாலத்திலேயே சிறப்பான பலகை அடைப்பு முறையில் நீரின் போக்கைகட்டு ப்படுத்துவதற்கு கலிங்கு அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார், போக்குவரத்து மற்றும் நீர் மேலாண்மை ஆகிய இரு தேவைகளையும் உணர்ந்து ஒரே கட்டுமானத்தில் இதனை நிறைவேற்றி உதவியுள்ளார். இது முழுக்க கருங்கல், செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டுமானமாக உள்ளது.
மூன்றரை அடி உயரம் , ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள பலகைக்கல்லில், 14 வரிகளில் "சிவமயம் 1889 வருசம் ஆகஸ்டு மீ . விரோதி வருசம் ஆவணி மீம் இந்த வாத்தலையும் வெட்டி யிந்த கலுங்கு வேலையும் ட்றஸ்ட்டி கண்ணப்ப தம்பிறான் உத்திரவுபடி கட்டி முடித்தது" என்று பாலத்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கல்வெட்டில் தகவலாக பொறிக்கப்பட்டுள்ளது.ஆதீனம் கல்வி , சமூக ஒற்றுமை , பொதுப்பணி , தமிழ் மொழி வளர்ச்சி என பல்வேறு பணிகளில் ஈடுபடுத் திக்கொண்டுள்ளதையும் , ஆன்மீகப்பணியோடு அறப்பணிகளையும் செய்துள்ளதை இப்புதிய கல்வெட்டு சான்று உறுதி செய்கிறது என்றார். ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் ந.ரமேஷ் குமார் உடனிருந்தார்,
- மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
கீரனூர் அருகே களமாவூர் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் சிங்கராயர் (வயது 44). இவரது மகள் 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு சென்றதால் மனமடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிங்கராயர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிங்கராயர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் நடைபெற்றது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெற்று வந்தது. இதையடுத்து திருவிழாவின் 10-வது நாள் அன்று சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து சுவாமி-அம்பாளுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சுவாமி-அம்பாள் தேரோடும் வீதிகளில் வீதி உலா வந்து கோவில் தெப்பக்குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் 3 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திருவரங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.






