என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொன்னமராவதி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள இந்திரா நகர் பாண்டிமான் கோவில் வீதியை சேர்ந்தவர் மலையாண்டி (வயது 45). இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் மாடியின் தடுப்புச் சுவரில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். 

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    குளத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே தென்னதி ரயன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது70).

    இவரை அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது சின்னப்பொண்ணு மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சின்னப்பொண்ணு மகன் செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஆலங்குடி சந்தைபேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி நாவலர் தெருவில் தனியார் கட்டிடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டிடம் பழுது ஆனதால் காலிசெய்யும்படி அதன் உரிமையாளர் வலியுறுத்திவருகிறார். இந்தநிலையில் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இயங்கி வந்த வேளாண்மை விதைப்பண்ணை வம்பன் நாலு ரோட்டில் உள்ள அரசு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது, சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடம் காலியாக உள்ளது. எனவே சந்தைப்பேட்டையில் உள்ள கட்டிடத்துக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    *பொன்னமராவதி பேரூராட்சி வலையப்பட்டி கைலாசபதி வீதியில் குடியிருப்பு பகுதிகளில் மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. குடியிருப்புகளில் கூரையை தொட்டுவிடும் வகையிலும், மரங்களுக்கு இடையேயும் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளை உயர்த்தி கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பொன்னமராவதி நாட்டுக்கல் வீதி பெருமாள் கோவில் வீதியில் ஒரு மின்கம்பத்தின் அடிபகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்போதுவேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

    *வடகாடு தெற்கு கடைவீதியில் வாடகை கட்டிடத்தில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பொதுமக்கள் வரிசையாக நின்று பொருட்கள் வாங்க போதிய இடவசதியில்லை. வரிசையில் நிற்கும் பொதுமக்கள் பக்கத்து கடைவரை நிற்பதால், அவர்கள் தங்கள் கடை அருகே நிற்ககூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்தரேஷன் கடையை அரசு கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது இடவசதியுள்ள பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    *ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மன், கல்லாலங்குடி மாரியம்மன், கோவிலூர் முத்துமாரியம்மன், ஆலங்குடி நாடியம்மன் உள்ளிட்ட கோவில்கள் கொரோனாஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பூட்டப்பட்டுள்ளது. தற்போது, திருமணம் உள்பட சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்லமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கோவிலை விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    *அறந்தாங்கி எழில் நகர் 8-வது வீதி மெயின் ரோடு அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எப்போதுவேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் அதனை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு கிலோ வாவல் மீன் ரூ.1,100-க்கு விற்பனையானது.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கிருந்து தினமும் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடலில் பெரிய அளவில் மீன்கள் சிக்கவில்லை. கிடைத்த மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். இந்த மீன்களை அவர்கள் விற்றபோது டீசல் மற்றும் ஐஸ்கட்டிகள் வாங்கியதற்கு கூட தேறவில்லை. இதனால், மீனவர்கள் நஷ்டம் அடைந்து வந்தனர்.

    இந்தநிலையில், இங்கிருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கி இருந்தன.

    பிடிக்கப்பட்ட மீன்கள் துறைமுகத்திலேயே குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கோவை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி, போட்டு வாங்கி சென்றனர்.

    அந்தவகையில் வாவல் மீன் ஒரு கிலோ ரூ.1,100-க்கும், பாறை ரூ.400-க்கும், கிழங்கன் ரூ.350-க்கும், நகரை ரூ.200-க்கும், வஞ்சிரம் ரூ.500-க்கும், காரல் ரூ.100-க்கும், நெத்தில் ரூ.80-க்கும், திருக்கை ரூ.150-க்கும் விற்பனையானது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு திருக்கை மீன் மட்டும் 80 கிலோ எடை இருந்தது குறிப்பிடத்தக்கது.
    பா.ஜ.க. இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க. எழுச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கட்ட மைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் அந்த தகிடு தத்தங்களை புரிந்து கொண்டு விட்டனர்.

    விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலமாக நேரடியாக உதவிகளை வழங்கி வரும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வேதனைக்குரியது. இதில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    தி.மு.க. பொய் பித்தலாட்டத்தை கட்டமைத்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மொழி ரீதியான பன்முகத்தன்மையை எதற்காக தி.மு.க. எதிர்க்கிறது. மொழி ரீதியாக பிளவுப்படுத்துவது தேச துரோகம். அதை தி.மு.க. செய்கிறது. தி.மு.க. தமிழ் விரோதி. தமிழனுக்கு விரோதி. தேசியம்தான் பாஜவின் இலக்கு.

    மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக பா.ஜ.க. உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க. இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

    தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வை புறக்கணிப்பது என்பது மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பாரதி, சுந்தர், கருப்பையா ஆகியோர் தலைமை தாங்கினர். தனியார் பஸ்சை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட விடுப்பு மற்றும் சம்பளத்தை திரும்ப தர வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பயனை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது. இதில் எல்.பி.எப், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, டி.டி.எஸ்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப். ஆகிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் இலுப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கிளை செயலாளர் சேதுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மத்திய சங்க தலைவர் அடைக்கலம் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி வருவாய் கோட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று சம்பந்தமான தகவல்கள் மற்றும் புகார்களை அறந்தாங்கி உதவி கலெக்டர் அலுவலகம் 04371 220589, தாசில்தார் அலுவலகங்கள் 93619 73878 (அறந்தாங்கி), 04371 233325 (ஆவுடையார் கோவில்), 04371 250569 (மணமேல்குடி) உள்ளிட்ட கட்டுப்பாடு அறை எண்களை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை அறந்தாங்கி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டையில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,510 ஆக அதிகரித்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

    வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 998 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உயர்ந்துள்ளது.

    மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,510 ஆக அதிகரித்துள்ளது.

    புதுக்கோட்டை அருகே ஓய்வுபெற்ற அரசு பெண் அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை மாயமானது. மேலும் அடுத்தடுத்த வீடுகளிலும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கட்டியவயல் அருகே பாரதிநகரை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவர் கடந்த 20-ந் தேதி தனது தம்பியின் மகள் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டு மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள், பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகைகளும் திருடப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக முத்து திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதில் முத்து வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு போனதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே மற்றொரு வீட்டிலும் திருட்டு முயற்சி நடந்திருந்தது. அதில் நகை, பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

    இந்த சம்பவங்களுக்கிடையே புதுக்கோட்டை அபிராமி நகர் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பெண் அதிகாரி ஒருவரது வீட்டில் 50 பவுன் நகைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கணவர் இறந்த பிறகு தனிமையில் வசித்து வரும் அந்த பெண் அதிகாரியின் வீட்டிற்கு உறவினர்கள் அவ்வப்போது சென்று வந்துள்ளனர். பீரோவில் லாக்கர் மற்றும் ஆங்காங்கே வைத்திருந்த நகைகள் மாயமானதாக தெரிவித்தார். அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த உறவினர்கள் தான் கைவரிசையை காட்டியிருக்கலாம் என தெரிகிறது. அவர்களும் தாங்களாகவே பேசி முடிவெடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். நகைகள் மாயமானது தொடர்பாக அவர்கள் இதுவரைக்கும் புகார் அளிக்க போலீஸ் நிலையத்திற்கு வரவில்லை”என்றனர். 
    ஸ்மார்ட் வகுப்பு, வாட்ஸ்-அப் குழு என மாணவர்களை கவரும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் அரிமளம் ஒன்றியத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்படுகிறது.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளயான்வயல் ஊராட்சி கரையப்பட்டியில் அரசு ஆரம்ப பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி கடந்த 2 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால்பாண்டியன், உதவி ஆசிரியர் விஜயராஜ் ஆகியோரின் முயற்சியே ஆகும். மேலும் கரையப்பட்டி, அம்புராணி, கப்பத்தான்பட்டி ஆகிய 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். இதனால், இந்த பள்ளி தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் கூடுதல் வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    கரையப்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் செயல்படும் இப்பள்ளியை சீரமைக்க நிதி திரட்டப்பட்டது. அந்தவகையில் முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் மூலம் ரூ.4 லட்சத்து 21 ஆயிரம் சேர்ந்தது. அதில், பள்ளியின் 2 கட்டிடங்கள் மராமத்து செய்யப்பட்டு 49 இன்ஞ் எல்.இ.டி. டி.வி., புரோஜெக்டர், லேப்-டாப், இன்வெட்டர், யு.பி.எஸ், ஆடியோ சிஸ்டம் போன்ற நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

    மேலும், மாணவர்களை கவரும் பொருட்டு பள்ளி கட்டிட சுவர்களில் பலவகை கலர்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தரைத்தளங்களிலும் பெயிண்டு அடிக்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள் அமர பெஞ்சுகள் மற்றும் கழிப்பிட வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 2019-20-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 25 மாணவ-மாணவிகளுடன் செயல்பட்டு வந்த இந்த பள்ளி, 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்தது. அதற்காக எடுக்கப்பட்ட தீவிர முயற்சியின் காரணமாக மேற்கண்ட 3 கிராமங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளில் படித்து வந்த 15 மாணவர்கள் மற்றும் 2 புதிய மாணவர்கள் என 17 பேர் சேர்ந்துள்ளனர். அதன்படி, ஏற்கனவே உள்ள மாணவர்களையும் சேர்த்து தற்போது 36 பேர் உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்கு இங்குள்ள பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இங்கு ஆங்கில வழி கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை போன்று பெல்ட், அடையாள அட்டை, ஷீ, டை மற்றும் சீருடைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளியில் பெரிய திரை மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் அரசு வழங்கி உள்ள பல்வேறு கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு செய்முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. 49 இன்ச் எல்.இ.டி. டி.வி. மூலம் நேரலை வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி கம்ப்யூட்டர் வகுப்பு, பாடல், நடன வகுப்புகள், யோகா, ஆங்கிலத்தில் எழுத, பேச பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் குழு ஆரம்பிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் பள்ளி செயல்பட்டு வந்தாலும், சாலையின் ஓரத்தில் குளத்திற்கு அருகாமையில் செயல்படும் இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பள்ளிக்குள் ஆடு, மாடுகள் நுழைந்து அசுத்தம் செய்து விடுகின்றன. ஆகவே, மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதி அல்லது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
    அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 40). இவரும், இவரது சகோதரர் ராமராஜ் உள்பட நண்பர்கள் சிலர் முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள வாதியார் கிணற்றின் கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக செல்வராஜ் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

    கிணற்றில், தண்ணீர் அதிகமாக இருந்ததால் நண்பர்களால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். அவர்களுக்கு உள்ளூர் இளைஞர்களும் உதவி புரிந்தனர்.

    சுமார் ஒரு மணி நேர போராடியும் செல்வராஜை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பின்னர், அன்னவாசல் போலீசார் செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்வராஜிற்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    அரிமளம் அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 60). விவசாயியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை மடத்துபட்டி கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அரிமளம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசப்பன், என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×