என் மலர்
புதுக்கோட்டை
- மயிலாடுதுறையில் கபடி தேசிய சிறப்பு மையம் அமைக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்
- கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர்விடம் பிரிவு பாஜக மாநில விளையாட்டு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
கந்தர்வகோட்டை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சார்பாக தமிழகத்தில் மயிலாடுதுறையில் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி தேசிய சிறப்பு மையத்தை அமைத்து தருமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் விடம் தமிழ்நாடு விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, விளையாட்டு பிரிவு மாநில பார்வையாளர் சுமதி வெங்கடேசன், விளையாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன். மாநில செயலாளர் கார்த்திக் மற்றும் அமைச்சர் கபடி கழக உறுப்பினர்களுடனும் பாஜக மாநில விளையாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடு துறையில் கபடி தேசிய சிறப்பு மையத்தை மத்திய அரசு அமைத்து தரும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உறுதியளித்தார்.இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கபடி தேசிய சிறப்பு மையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகள் கூடுதல் லாபம் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்தலாம் என ேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை கூறினார்
- உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான பயிர்கள் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி நஞ்சுள்ள உணவு உற்பத்தியை மட்டும் தான் பெருக்க முடிகிறது.மேலும் சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் கிடைக்கவும் வாய்ப்பளிக்கிறது.
திரவ உயிர் உரங்கள் பல்வேறு அளவுகளில் பிரத்யேகமான கொள்கலன்களில் விநியோகம் செய்யப்படுகிறது. திரவ உயிர் உரங்களின் ஆயுட்காலம் 12 மாதங்கள் ஆகும்.அகில இந்திய அளவில் தமிழகத்தில்தான் முதன் முறையாக பாக்டீரியவை பிரித்தெடுக்கும் இணை ஒட்ட திரவ வடிப்பான் என்ற தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உயிர் உரங்கள் தயாரிக்கப்படுகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்க கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும்.
விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்த பின்தான் கடைசியாக உயிர் உரங்கள் விதை நேர்த்தி செய்ய வேண்டும். எனவே விவசாயிகள் ரசாயன உரங்களை குறைத்து உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து நிகர லாபம் பெறலாம் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
- புதுக்கோட்டையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று ஆட்டுசந்தை களைகட்டியது
- ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை
புதுக்கோட்டை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை கலைக்கட்டி வருகிறது, 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது, விலை அதிகரித்த போதும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
புதுக்கோட்டை சந்தை ப்பேட்டையில் வார ம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறு வது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோ ட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்ட ங்களிலிருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகின்றனர்.இந்நிலையில் நாளைய தினம் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் கொண்டா டப்பட உள்ள நிலையில் இந்த ஆட்டு சந்தையில் விற்பனை களைகட்டி வருகிறது. வழக்கத்தை விட ஆடுகளின் வரத்து அதிகரித்துள்ளது.
செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் இந்த ஆட்டுச் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு ஒன்றுக்கு 3000 ரூபாய் முதல் 25000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. விலை அதிகரித்துள்ள போதும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று நடைபெறும் ஆட்டு சந்தையில் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அறந்தாங்கி மார்க்கெட்டில் முத்திரையிடா 21 மின்னனு தராசுகள் பறிமுதல் செய்தனர்
- தொழிலாளர்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தினசரி சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை முறையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. காய்கறிகளை எடை அளவீடு செய்வதற்கு எடைக்கற்கள், தராசு மற்றும் மின்னனு தராசுகள் பயன்படுதப்படுகின்றன.எடை போடும் தராசுகள் போலியானதோ, தேய்மானம் ஏற்பட்டோ, எடைகற்கள் உடைந்தோ காணப்பட்டால் நுகர்வோர் பாதிக்கக் கூடும் என்பதற்காக தொழிலாளர் துறை சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை எடை தராசுகள் சரிபார்க்கப்பட்டு முத்திரை பதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தினசரி காய்கறி சந்தை மற்றும் தினசரி மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முத்திரையிடப்படாத 21 மின்னனு தராசுகள் மற்றும் எடை கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடை கற்கள் அறந்தாங்கி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சோதனையில் மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர்கள் குணசீலன், லெட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறித்த 3 வாலிபர்கள் அதிரடி கைது
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கிடங்கிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் ஆவுடையார் கோவிலில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளாதேவி (வயது 40). இவர்கள், குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் வீ்ட்டிற்குள் புகுந்து மஞ்சுளாதேவி கழுத்தில் கிடந்த 20 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.இதையடுத்து மஞ்சுளாதேவியின் சத்தத்தை கேட்டு கண்விழித்த ஆறுமுகம், மர்ம ஆசாமிகளை பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.அப்போது ஆறுமுகமும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் தப்பியோடிய மர்ம ஆசாமிகளை விரட்டி பிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து ஆவுடையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மனோஜ்பட்டியை சேர்ந்த ரவி மகன் பிரபாகரன் (30), ராமசாமி மகன் ரமேஷ் (33), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபாகரன் (25) என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம ஆசாமிகளிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலியை போலீசார் கைப்பற்றினர்.
- ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
- பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்
ஆலங்குடி:
புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் புதுக்கோட்டை இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) டாக்டர் ராமு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை பார்வையிட்டு அவர் கூறுகையில், மொத்தம் 6 மருத்துவர்கள் இங்கு பணியாற்ற வேண்டும் , அதில் 5 மருத்துவர்கள் தற்போது உள்ளார்கள். ஒரு மருத்துவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவர். இந்த மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் தரதேர்வு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு அதிக அளவில் தொகைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடற்கூறு செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக நியமனம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆய்வின் போது புதுக்கோட்டை தேசிய நலவாழ்வு குழும ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சரவணன் மற்றும் ஆலங்குடி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- அறந்தாங்கி பகுதிகளில் தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் பாகநிலை முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணமேல்குடியில் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார். அப்போது புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இரட்டை பதிவு மற்றும் இறந்த வாக்காளர்களை கண்டறிந்து நீக்குவது, கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட பணிகளை பாகநிலை முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதே போன்று ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வடக்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர்கள் உதயம் சண்முகம், பொன்துரை ஆகியோர் ஏற்பாட்டிலும், அறந்தாங்கி நகரத்தில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஏற்பாட்டிலும் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைமணி, நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகர்மன்றத் துணை தலைவர் முத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஹரி விமலாதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
- சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது.
புதுக்கோட்டை:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் நடைபெற்று வரும் வெள்ளிக்கிழமை ஆட்டு சந்தை களை கட்டியது. 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு இருந்த நிலையில் ஒரு ஆட்டிற்கு வழக்கத்தை விட ரூ.500 முதல் ஆயிரம் வரை விலை அதிகரித்து இருந்தது.
விலை அதிகரித்த போதிலும் ஆடுகளை வியாபாரிகளும் பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி வருவதால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கவும், விற்கவும், வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.
இந்த சந்தையில் செம்மறியாடு, வரையாடு, வெள்ளாடு என மூன்று வகையான சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுக விற்பனையானது. ஆடு ஒன்று ரூ.3000 முதல் ரூ.25000 வரை விற்கப்பட்டது. ரம்ஜானையொட்டி இன்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நேரில் ஆஜரானார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த ஒரு அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மர்ம நபர்கள் மனித கழிவுகளை கலந்து விட்டு சென்றனர். இதனை பருகிய பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன.
சம்பவம் நடந்த 20 நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்த தமிழக போலீசார் சுமார் 120 நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆனாலும் தற்போது வரை இந்த இழிவு செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் கைது செய்யப்படாததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினர்.
இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைக்கவும் உத்தரவிட்டார். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதற்கிடையே குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுக்க தொடங்கினர்.
அதேபோல் போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தின் நுழைவு பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் டெண்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குடிநீரில் மனித கழிவு கலந்த தொட்டியில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட ஆய்வில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனித கழிவானது 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணுடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் இன்னும் ஒருசில நாட்களில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து, அதில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு, அரசு ராணியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் தலைமையில் இந்த டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே வேங்கைவயல் பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை காவலர் உள்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்வதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டுள்ளனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்ற தகவல் வெளியாகும் என்றும், அதன் மூலம் இந்த பிரச்சினையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் உண்மை குற்றவாளிகளும் கைதாவார்கள்.
இந்நிலையில் சென்னை தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி சோதனைக்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த முரளி ராஜா, கண்ணதாசன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரிடமும் குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
- வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த டி.என்.ஏ. சோதனை வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், கீழமுத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
- அவர்களிடமிருந்து 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்
புதுக்கோட்ட:
புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரெகுநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நரங்கியப்பட்டு பகுதியை சேர்ந்த பாரிவள்ளல் (வயது 41), வெட்டிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (39), இலுப்பவிடுதி கோவில் தெருவை சேர்ந்த ஞானம் (41) ஆகிய 3 பேர் எரிசாராயத்தை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- புதுக்கோட்டை பா.ஜ.க. பூத்கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடபட்டுள்ளது
- பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
பாஜக நிர்வாகிகள் ஒவ்வொருவரும், அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஐந்து வாக்குச்சாவடிகளை கண்காணிக்க "சக்தி கேந்திர பொறுப்பாளர்" என்ற பெயரில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு தலைவர், பார்வையாளர், செயலாளர், முகவர் மற்றும் 9 செயற்குழு உறுப்பினர்கள் என்ற வீதத்தில் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. பூத் கமிட்டியில் உள்ளவர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் எண், கைபேசி எண் ஆகியன பூத் வாரியாக கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி புதுக்கோட்டை நகரில் திலகர் திடல், வடக்கு ராஜ வீதி, அம்பாள்புரம் அக்கச்சியாவயல், பல்லவன் குளம் சந்து, சீதாபதி பிள்ளையார் கோவில் தெரு, மேல 2, மேல3, தெற்கு 2 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 87 முதல் 91 வரையிலான ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு, 65 உறுப்பினர்கள் கொண்ட புகைப்படத்துடன் கூடிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்த புதுக்கோட்டை மேற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன், தமிழ்நாடு பாஜக இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பட்டியலை வழங்கினார். இதனை மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆலோசனையுடன், புதுக்கோட்டை நகர பாஜக தலைவர் லெட்சுமணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.






