என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அறந்தாங்கி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது
    • பொதுமக்கள் போராட்டத்தால் அதிகாரிகள் நடவடிக்கை

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதியின் மையப்பகுதியில் அமைக்கப்படும் இந்த செல்போன் கோபுரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறி அப்பகுதி பொதுமக்கள் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் திடீர் சாலை மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியதில் சிறிது காலம் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பணிகளை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் பிரேம்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


    • கிராம நிர்வாக அலுவலர் படுகொலையை கண்டித்து கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூறியும், பணி பாதுகாப்பு கோரியும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க வீரபாண்டியன் அறிவுறுத்தலின்படி கந்தர்வகோட்டை வட்ட கிளை தலைவர் கருப்பையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் பவுல் வின்சென்ட், முரளி, அன்பரசன், வருவாய் அலுவலர் செல்வ சத்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்காக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 பேர், காவேரி நகர் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் கீழமுத்துக்குடிக்காடு பகுதியை சேர்ந்த ஒருவர் என 11 பேருக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

    இதையடுத்து நேற்று புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த மாதிரி சேகரிப்புக்கு 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 8 பேரும் ரத்த மாதிரி தர மறுத்துவிட்டனர். அவர்கள் தங்களை குற்றவாளிகளாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தனர். எனவே சேகரிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரி மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டுமின்றி நேற்று ரத்த மாதிரி தர மறுத்த 8 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார்

    புதுக்கோட்டை

    ஆதனக்கோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 16-ந் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ேதரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் பழைய ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையும், ஆதனக்கோட்டை கிராமமக்களும் செய்திருந்தனர்.

    மாவட்ட விளையாட்டரங்கத்தில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள பெரிய விளையாட்டுகளும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல், மெட்ரிக், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.

    • 3 குழந்தைகளின் தாய் தற்கொலை கொண்டார்.
    • எலி மருந்து தின்றார்

    புதுக்கோட்டை

    விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஆசாரி தெருவை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பவித்ராவிற்கு மூலநோய் இருந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரி ஆகாததால் விரக்தி அடைந்த பவித்ரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பவித்ராவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்

    புதுக்கோட்டை:

    ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளில் பேயாடிக்கோட்டை, செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 6 மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் கூறினர்.

    ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறினர். இதையடுத்து அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் திருப்புனவாசல்-ஆவுடையார்கோவில் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அங்கன்வாடியில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்ததால் இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

    • ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
    • 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 11 பேருக்கு இன்று காலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த மாதிரி சேகரிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆயுதப்படை காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரியை அளித்துள்ளனர். மற்ற 8 பேர் ரத்தம் தர வரவில்லை. அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் இதுபோன்ற சோதனை என்ற பெயரில் எங்களை குற்றவாளிகளாக ஆக்குவதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ரத்த மாதிரி அளிக்க மறுத்த 8 பேரும் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    இந்த 8 பேரும் ரத்த மாதிரி அளிக்க ஒத்துழைப்பு அளிக்காதது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    ரத்த மாதிரி கொடுத்தவர்களின் பரிசோதனை முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவிலில் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.முன்னதாக போட்டியை முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தம் எட்டு குழுக்களாக வீரர்கள் பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கி வருகின்றனர். முதலில் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், டிரஸ்சிங் டேபிள், சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கண்டு களித்து வருகின்றனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் அடைபவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். விபத்து ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    பாதுகாப்பு பணியில் இலுப்பூர் டி.எஸ்.பி. காயத்ரி தலைமையில் 132 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • புதுக்கோட்டை வடகாட்டில் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் அப்பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான வைரத்தேரோட்டம் வான வேடிக்கையுடன் நடைபெற்றது. தேரோட்ட விழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    • அன்னவாசலில் வேதனை சம்பவம்
    • 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், புதுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புதுறை வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் தீயணைப்பு பணிக்கு உதவி செய்தனர். பெரும்பாலானவர்கள் தீ பற்றி எரிவதையும் அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க போராடுவதையும் தங்களது செல்போன்களில் படம் எடுப்பத்திலேயே குறியாக இருந்தனர். தீப்பற்றி எரியும் வேலையில் அதனை அணைக்க முயற்சிக்காமல் செல்போனில் படம் எடுக்கும் மனநிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டது வேதனைக்குரியதாக இருந்தது.இயற்கையை காக்கும் போராட்டத்தில் மனித சமுதாயம் இதுபோன்ற நிலைக்கு சென்றது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    ×