search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்
    X

    கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்

    • ஆவுடையார்கோவில் அருகே 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு
    • 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போராட்டம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து இன்று காலை 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புனவாசல்-கரூர் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வழியின்றி அணிவகுத்து நின்றன. போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர்.

    அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொது மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×