என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே கல்லிகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 29), செல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35), மாரிமுத்து (28), பிலிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கறம்பக்குடியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறித்தனர்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் காத்தான் மனைவி ராமாமிர்தம் (வயது63). இவர் கறம்பக்குடி கடைவீதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது நெய்வேலி விளக்கு சாலையில் நடந்து வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் நிலை தடு மாறிய மூதாட்டி சுதாரித்து சத்தம் போட்டார்.

    அதற்குள் அந்த மர்ம நபர் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி சென்று விட்டார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தங்க சங்கிலி பறித்த நபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மூதாட்டி ராமாமிர்தம் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்தர்வகோட்டையில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
    • பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார்

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டையில் தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் நிதியளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ்.ரஜினி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நாகமுத்து, பொருளாளர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார். இதில் துணைப் பொதுச் செயலாளர் குணசேகரன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவராஜ், மகளிர் அணி தேன்மொழி, தஞ்சை மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் முத்துக்காடு, வேங்கைவயலில் ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணா கள ஆய்வு மேற்கொண்டார்
    • விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்றையதினம் வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், இது மனித தன்மையற்ற செயல் எனவும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை விரைவில் அரசுக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    பின்னர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வுபெற்ற எம்.சத்தியநாராயணன் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, முன்னிலையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் வேங்கைவயலில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் எம்.சத்தியநாராயணன் கலந்தாலோசனை செய்தார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்),உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மனித நேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்
    • 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு

    கறம்பக்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது சுலைமான் தலைமையில் சமீபத்தில் கேரளாவில் வெளியாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பை மீறி இந்த படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விடும் என்றும், ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.

    • தடுப்பூசி, குடற்புழு நீக்குதல், சினை ஊசி மாடுகளுக்கு போடப்பட்டது
    • 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி ரெகுநாத பட்டியில் கால்நடை மருத்துவத்துறையின் சார்பாக கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்குதல், மாடுகளுக்கு சினை ஊசி போடுதல் போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 மாடுகளுக்கு மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கால்நடைத்துறை சார்பில் சிறந்த மாடு, கன்றுகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முகாமிற்கு சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்று பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கால்நடை மருத்துவர் புவனேஸ்வரி, உதவியாளர் சாந்தி மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அரசு ஓழுங்குமுறை விற்பனைகூடத்தில் கொப்பறை தேங்காய் கொள்முதல்
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரவை கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து முதல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

    • கால்நடை, கோழிகள் பலி
    • அதிகபட்சமாக பெருங்களூரில் மழை பதிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த கோடை மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-30, பெருங்களூர்-86, புதுக்கோட்டை-12, ஆலங்குடி-5, கந்தர்வகோட்டை-10, மழையூர்-2.60, கீழணை-57.80, திருமயம்-63, அரிமளம்-61.20, அறந்தாங்கி-9.40, ஆயிங்குடி-4, மீமிசல்21.20, ஆவுடையார்கோவில்-8, மணமேல்குடி-11, இலுப்பூர்-8.40, குடுமியான்மலை-15, அன்னவாசல்-4, விராலிமலை-6, உடையாளிப்பட்டி-41, கீரனூர்-19, பொன்னமராவதி-8.20, காரையூர்-30.60. இந்த மழையில் 3 வீடுகள் சேதமடைந்தது. மேலும் 7 கோழிகள், 1 மாடு, 3 கன்றுக்குட்டிகள் செத்தன.

    • ரூ.21.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு
    • மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உரியவர்களிடம் ஒப்படைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடா்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த செல்போன்களை மீட்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.21½ லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை மீட்ட போலீசாரை பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.

    • உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
    • அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 5 மாத காலமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதில் 139 நபர்களின் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நபர்களில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஒப்பு கொண்டனர். மீண்டும் புதிதாக 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததில் வரும் திங்கட்கிழமை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை என்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.

    அந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணா தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா ஆய்வு செய்து வருகிறார். அவர் வேங்கைவயல் கிராமத்தில் மலம் கழித்த பழைய நீர் தொக்க தொட்டியை ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


    • முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வரும் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் . விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.இணையதளம் மூலம் வரும் 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


    ×