என் மலர்
பெரம்பலூர்
- பிரத்யேக வசதியுடன் கால்நடைகளுக்கு அவசர கால ஊர்தி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது
- கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள நமையூர் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை அமைச்சர் சிவசங்கர், மற்றும் பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நடைபெற்ற விழாவில், கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின் நிறுவனம், பால்வளத்துறை மற்றும் கிருஷி கால்நடை தீவன நிறுவனம் மூலம் 100 விவசாயிகளுக்கு இலவசமாக இடுபொருட்கள், பால் வளத்துறை சார்பில் முருக்கன்குடி பால் உற்பத்தியாளர்கள் கடன் சங்கத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் 15 பேருக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகள், கூத்தூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய சங்கத்திற்கு பதிவு சான்றிதழையும் வழங்கினார்.
பின்னர் விழாவில் அமைச்சர் பேசுகையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 100 மாடுகளுக்கு ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பரிசோதனையின் அடிப்படையில் சினையூட்டும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு என்று பிரத்யேக வசதியுடன் கூடிய அவசர கால ஊர்தி இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாகனம் என 4 எண்ணிக்கையிலான கால்நடைகளுக்கான அவசர ஊர்தி வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார். முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் செல்வராணி வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன்,ஒகளூர் பால்பண்ணை செயலாளர் சக்திவேல், நமையூர் பால்பண்ணை செயலாளர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பெரு கருப்பையா, ஆண்டாள் குடியரசு, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
- வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
- இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). விவசாயியான இவர் ஆட்டுக்குட்டிகளுக்கு தழை வெட்டுவதற்காக வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார். மரத்தில் தழை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் செல்லும் மின்கம்பி மீது மரம் உரசியது. இதில் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார்
- குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை மதியழகனிடம் போலீசார் வழங்கினர்.
பெரம்பலூர் :
தஞ்சை மாவட்டம், வல்லம்புதூர் அருகே கருவாடிப்பட்டி கிராமத்தில் உள்ள மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மதி என்ற மதியழகன்(வயது 38). இவர் மீது பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து மதியழகனை, மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மதியழகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட கலெக்டர் கற்பகத்திற்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள மதியழகனிடம் மங்களமேடு போலீசார் நேற்று வழங்கினர்.
- கர்ப்பிணி திடீரென உயிரிழந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மகன் அஜித்(வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அஜித், பெரம்பலூர் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது தன்னுடன் கூலி வேலை செய்த குரும்பலூரை சேர்ந்த பழனிமுத்துவின் மகளான சாந்தியை காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து குரும்பலூரிலேயே அஜித்-சாந்தி தம்பதியினர் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சாந்தி கர்ப்பமானார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அதிகாலை சாந்தி ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதையடுத்து அவரை அஜித் மற்றும் சாந்தியின் உறவினர்கள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சாந்தி உயிரிழந்தார். இதுகுறித்து அஜித் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மனைவி சாவில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- பெரம்பலூரில் 2 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.
- விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட விளாமுத்தூர் சாலையில் உள்ள இளங்கோநகர் மற்றும் வடக்குமாதவி சாலையில் உள்ள கிரசண்ட் நகர் ஆகிய பகுதிகளில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் இயங்கும் வகையில், 1,728 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிதாக முழு நேரமும் இயங்கும் வகையில் 2 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டன. இந்த கடைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையற்கண்ணி தலைமை தாங்கினார். புதிய ரேஷன் கடைகளை பிரபாகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பெரம்பலூருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீர் வழங்கும் பிரத்யேக திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். நகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளிலும் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.1 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, சாலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் சாலை மேம்பாடு செய்வதற்கு ரூ.2 கோடி கூடுதலாக நிதி கேட்கப்பட்டுள்ளது, என்றார். விழாவில் நகர்மன்ற தலைவர் அம்பிகாராஜேந்திரன், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், வார்டு கவுன்சிலர் சஹர்பானு, கூட்டுறவு துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) அரப்பலி, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டில் பதுக்கி வைத்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் மாயகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பசும்பலூர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டை தேவராஜ் (வயது 45) என்பவர் வாடகைக்கு எடுத்து, அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அந்த குழுவினர், அவற்றை பெரம்பலூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள தேவராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
- புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவரது மனைவி ஜோதி. இவர்கள், தங்களது மகன் பரமேஸ்வரன், மருமகள் ராணி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காைல ராஜேந்திரனும், அவரது மனைவி ஜோதியும் பாண்டகப்பாடியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். மேலும் வீட்டை பூட்டிவிட்டு பரமேஸ்வரன் வெளியூருக்கு வேலைக்கும், ராணி ஆடு மேய்க்கவும் சென்றுள்ளனர்.
பின்னர் மாலையில் பரமேஸ்வரன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் பட்டறையில் ேமாட்டார்-கருவிகள் திருட்டு போனது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பால் பண்ணை தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மோகன் (வயது 34). இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மோகன் பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அவர் பட்டறையை திறக்க வந்தபோது, பட்டறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது பட்டறையில் இருந்த வாட்டர் சர்வீஸ் செய்யும் கம்பிரசர் மோட்டாரும், இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கருவிகள், வாகன ஆயில் ஆகியவையும் திருட்டு போயிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக மோகன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- தி.மு.க. பேரூராட்சி தலைவரை திட்டிய 3 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது
- மேலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அரும்பாவூர்,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள பூலாம்பாடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த பாக்யலட்சுமி (வயது 40). இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆவார். பாக்யலட்சுமியின் கணவர் செங்குட்டுவன் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் கடம்பூரை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் தேனூரை சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி வீட்டிற்கே சென்று வீட்டுமனைப்பிரிவிற்கு அனுமதி வழங்க கோரி தகராறில்ஈடுபட்டதாகவும், அப்போது சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாக்யலட்சுமி அரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அரும்பாவூர் போலிசார் விசாரணை செய்தனர். புகாரில் முகாந்திரம் இருப்பதை அறிந்த அரும்பாவூர் போலீசார் கடம்பூரை சேர்ந்த ராமதாஸ் மகன் சதீஸ்குமார், சின்னசாமி மகன் ரெங்கநாதன் மற்றும் தேனூர் கந்தன் மகன் கிருஷ்ணண் ஆகிய மூன்று பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஆளுங்கட்சி பேரூராட்சி தலைவர் வீட்டிற்கே சென்று சாதியை சொல்லி திட்டியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவம் பூலாம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டது
- இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்தியது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சீரங்கன் முன்னிலை வகித்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் பதின்ம பருவத்திற்கான மனவெழுச்சி நலன் மற்றும் ஆசிரியர் மாணவர் மனவெழுச்சி நலன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இந்திராகாந்தி, பரமசிவம், ஜான்ராபிசன், விர்ஜின்சோபியா, ரேவதி, ரவீந்திரன், கோவிந்தராஜூ மற்றும் ரஞ்சித்குமார் ஆகியர் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளித்தனர். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 113 முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்காக ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.
- மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா நடைபெற்றது
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில், மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம நிர்வாகி காமராஜ் தலைமை வகித்தார். இயக்குநர்கள் நந்தேஸ்வரன், சக்திஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சி ஓங்கார குடில் பாம்பாட்டி சித்தரின் சீடர் வேலுதேவர் கலந்துகொண்டு யாக வேள்வியை தொடங்கி வைத்தார். கோமாதா பூஜை , 210 மகா சித்தர்கள் யாகமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவயோகி மருதவேல் தேவர், எல்ஐசி முகவர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
- கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக் குளத்தில் பிரசித்தி பெற்ற பழமையான ஏகாம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
செட்டிக்குளம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் இந்த கோவிலில் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கோவில் நடை அடைத்து பூட்டப்பட்டது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமி இரும்பு கேட்டின் ஒரு பகுதியை வளைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்குள்ள வாகன மண்டபத்திற்கு சென்ற அவர்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
அந்த மண்டபத்தில் விநாயகர், முருகன், பைரவர் கல் சிலைகளும், கருடாழ்வார், சிற்ப மரத்தினாலான வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில் மர்ம நபர் 3 அடி உயர முருகன் கற்சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளார். மேலும், பைரவர் சிலையை கீழே தள்ளிவிட்டதோடு கருடாழ்வார் மர வாகனத்தையும் உடைத்துள்ளார். பின்னர் அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய கோவில் பதிவேடுகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இன்று காலை கோவிலை திறந்த பார்த்தபோது சாமி சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி மற்றும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் சிலைகளை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகி இருந்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்தது செட்டிக்குளம் அருகேயுள்ள மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி மகன் செல்வராஜ் (வயது 36) என்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கோவிலுக்குள் புகுந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது. அவர் தானாக கோவிலுக்குள் புகுந்தாரா அல்லது யாராவது தூண்டுதலின் பேரில் வந்தாரா என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.






