என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்
    • கூடுதல் பணியிடங்களை வழங்கக்கோரி அடையாள போராட்டம்

    பெரம்பலூர்,

    ஊழியர் விரோத நடவடிக்கைகளை... பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுாிந்தனர். அந்த கோரிக்கை அட்டையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக கூடுதல் பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், என்று இடம் பெற்றிருந்தது.

    இன்றும் கோரிக்கை அட்டை அணியவுள்ளனர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் 60 பெண் அலுவலா்கள் உள்பட 140 வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அவர்கள் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியவுள்ளனர்.

    • பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்
    • 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிந்துமதி(வயது 29). இவரிடம் 2 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமசாமி, அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோரை மங்களமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 27). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மதுபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று மதுபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் குண்டர் சட்டத்தில் மதுபாலனை கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.

    • ஒகளுர் கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் விழிப்புணர்வு முகாம்
    • இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற அறிவுரை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளுர் கிரா மத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்கள் இடையே லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.வேப்பூர் வட்டார மருத்து வ அலுவலர் மருத்துவர் சேசு தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் தாசன் சுகாதார ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர்ஒகளுர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று பாத்தி ரங்கள். தண்ணீர் தொட்டி கள், டயர், உரல் ஆகியவற்றி ல் தேங்கி உள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சல் வர கார ணமாக உள்ள லார்வாக்கள் மற்றும் ஏடிஎஸ் கொசுக்க ளை மருந்துகள் ஊற்றி அழி த்தனர்.மேலும் பொது மக்களி டையே தண்ணீர் தேங்கி நிற்கும் பாத்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்யவும், டெங்கு கொசு க்கள் புழுக்கள் வளராமல் இருக்க சுற்றுப்புற பகுதி களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது குறித்தும் விரிவாக எடுத்து கூறினார்கள்.மேலும் இரண்டு தினங்க ளுக்கு மேல் காய்ச்சல் அடித்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற கேட்டுக்கொ ண்டனர்.இதேபோல் அத்தியூர் ,கழனிவாசல் ,திருமாந்துறை ,உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று பொது மக்களி டையே டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னார்கள்.

    • கோனேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்து கிடந்த நபர் டீசர்ட்டும், கைலியும் அணிந்திருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவா் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவன்
    • வழக்கு பதிந்து போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனால் அந்த கோவில் நேற்று மதியமும் திறந்திருந்தது. அப்போது மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கோவிலில் ஆட்கள் யாரும் இல்லாத போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கோவிலுக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்து காாட்சிகளை பார்வையிட்டனர். அதில் கோவிலுக்குள் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து உண்டிலைய உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றிருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூர் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்
    • இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்றமுறையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ சமைக்கப்பட்ட உணவு, அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக பெரம்பலுரில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனைத்து பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    • பெரம்பலூரில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
    • குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலவச தொலைபேசி எண் 1800 599 5950 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாப், ரேசன்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில்படும் படி இலவச எண் கொண்ட போஸ்டர், பேனர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
    • டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மங்களமேடு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி 4 -யூனிட் கிராவல் மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை மங்களமேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் டிப்பர் லாரி ஓட்டுனரான பிரம்மதேசம் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்(49)என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக டிப்பர்லாரிகளை வழிமறித்து போலிஸார் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் நகராட்சி சார்பில் குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 - வை முன்னிட்டு குப்பை இல்லாத நகரமாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆணையர் ராமர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலம் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் துரை காமராஜ், தங்க சண்முக சுந்தரம், சித்ரா, சவுமியா, ரஹ்மத்துல்லா, நல்லுசாமி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு, வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் நடந்த பாவை விழாவில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டார்
    • வெற்றிப்பெற்ற மாணவிக்கு நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மையத்தின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடந்தது.விழாவிற்கு ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் கற்பகம், எஸ்பி ஷ்யாம்ளாதேவி, உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அருட்செல்வி என்கிற பட்டத்துடன் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும், சிறப்புப் பரிசு ரூ. ஒரு ஆயிரமும் என ரொக்க பரிசுத் தொகையை நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் வழங்கி பாராட்டினார். உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் அருள்செல்வன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.விழாவில் கல்லூரி முதல்வர்கள் சுபலெட்சுமி, மாரிமுத்து, பிரபாகரன், பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, கோமதி, சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ருமாந்துறை ஈஸ்வரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஆடுதுறை, திருமாந்துறை நோவா நகர்மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்திருந்தனர்.

    ×