

பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 27). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மதுபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று மதுபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் குண்டர் சட்டத்தில் மதுபாலனை கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.