என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் நான்கு ரோட்டில் தவறவிட்ட மணி பர்ஸ் உரிய நபரிடம் ஒப்படைத்த எஸ்.ஐ.
    • மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவர் எஸ்ஐக்கு நனறி கூறினார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நான்கு ரோட்டில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் டிராபிக் எஸ்ஐ வரதராஜன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்ததை கண்டு அதனை எடுத்த அவர், அந்த மணிபர்சில் உள்ளே 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 70 குவைத் தினார், ஆதார், பேன் கார்டு மற்றும் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அதிலிருந்து செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது அந்த மணிபர்ஸ் பெரம்பலூர் அருகே உள்ள அரசலூர் கிராமத்தைசேர்ந்த கிஷோர் குமார் என்ற மாணவர் டூவிலரில் சென்றபோது தவறவிட்டுவிட்டார் என தெரியவந்தது. அவரை வரவழைத்த எஸ்ஐ வரதாராஜன் மணிபர்சை ஒப்படைத்தார். மணி பர்சை பெற்றுக் கொண்ட மாணவன் எஸ்ஐ வரதராஜன் மற்றும் ஊர்க்காவல் படை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    • பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது
    • முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் பத்திரம்- நகல் எழுதுவோர் சங்க மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் தங்கராசு, ராமராஜ், கண்ணன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    இதில் ஆவண எழுத்தர் நலநிதிக்குழுவிற்கு பத்திரம் -நகல் எழுவோர் சங்கத்தினை அங்கீகாரம் செய்தமைக்கும், சங்க நபர்களை நலநிதிய இயக்குநர்களாக தேர்வு செய்தமைக்கும் , நல நிதிய பயனாளிகளுக்கும் பலனளித்தமைக்கும் அரசுக்கும், முதல்வர், பதிவுத்துறை அமைச்சர், பதிவுத்துறை செயலாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்துவது, நலநிதியின் செயலாளர் பொறுப்பு மற்றும் நலநிதிய இயக்குநர்கள் கூடுதலாக 5 நபர்களை கோருதல், மாநில பொதுக்குழு கூட்டம் நடத்துதல் என்பது உட்படபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கமலக்கண்ணன் வரவேற்றார். முடிவில் அப்துல் அலிம் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது
    • விழாவிற்கு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட டிஜிட்டல் போட்டோ மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தலைமை சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. விழாவிற்கு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சாசன தலைவர் முகுந்தன் முன்னிலை வகித்தார். சின்னசாமி சங்க செயல் அறிக்கை குறித்து பேசினார். மாநில தலைவர் ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாநில செயலாளர் நஜிமுதீன் சங்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கும், புதிய நிர்வாகிகளுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினார். கவுர தலைவர் கருணாகரன், முன்னாள் மாவட்ட தலைவர் ரெங்கராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் புருஷேத்தமன், குமரவேல், அருண் உட்பட பலர் பேசினர்.

    புதிய தலைவராக செல்வம், செயலாளராக சுப்ரமணியன், பொருளாளராக துரை, கௌரவதலைவராக கருணாகரன், துணை தலைவர்களாக அப்துல்லா, சுந்தரம், துணை செயலாளராக சிவராஜ், இணை செயலாளராக பாஸ்கரன், செய்தி தொடர்பாளராக நடராஜ், ஆலோசகர்களாக ரெங்கராஜ், குமரவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முன்னாள் செயலாளர் விக்னேஷ்வர், பொருளாளர் சின்னசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சுப்ரமணியன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் துரை நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் முன்னாள் படைவீரர்கள் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் படை வீரர்கள் மற்றும் வீரமங்கையர் அமைப்பின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கேசவராஜன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர்கள் பொய்யாமொழி, ஆலயம் திலக், மாநில பொருளாளர் நவநீதகிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் வில்வலிங்கம், மாநில மகளிர் அணி தலைவி சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் படைவீரர்கள் நலன் குறித்தும், அரசின் திட்டப்பலன்கள் பெறுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட முன்னாள் முப்படை சங்கங்களை ஒருங்கிணைப்பது, அமைப்புக்கு தேவையான உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் சிஎஸ்டி கேண்டீன், இசிஹெச்எஸ் மருத்துவமனை, உதவி இயக்குனர் முன்னாள் படைவீரர் அலுவலகம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், 8 மண்டல தலைவர்கள், 38 மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சுப்புராஜ் வரவேற்றார், முடிவில் துணை பொதுசெயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • 70 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
    • அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டத்தில் வேண்டுகோள்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-வது மாவட்ட பிரதிநிதிகள் பேரவை பெரம்பலூரில் நடந்தது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ராஜேந்திரன் சங்கத்தின் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் சங்கத்தின் மாநில செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 21 மாத ஓய்வூதிய தொகையினை வழங்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீட்டிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை மீண்டும் 58 வயதாக நிர்ணயம் செய்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசு துறைகளில் தற்காலிக பணி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கென்று அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியினை விரைவில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
    • தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் தலைமையிலான போலீசார் தீரன் நகர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன ஓட்டிகளிடம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதால் விபத்துகள் பெரிதும் குறைக்கப்படும் என்றும், சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்கினால் விபத்துகளை தவிர்த்து விடலாம், என்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் சுப்பையன் வாகன ஓட்டிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற தங்களது பிள்ளைகளிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து தெரிவிக்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    • அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் சேவைப்பணி ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை காவலர்களுடன் இணைந்து தூய்மைப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை காவலர்கள், ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் நேரு யுவகேந்திராவில் உள்ள தன்னார்வ இளைஞர்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியை கலெக்டர் வாசித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் கலெக்டர் கூறுகையில், உறுதிமொழி எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் நமது சுற்றுப்புற பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள், பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்தெடுக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ராமர், மகளிர் திட்ட இயக்குனர் அருணாச்சலம், நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, தூய்மை இந்தியா இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 24 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • இருவரிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்யப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மனைவி கலைச்செல்வி(வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபட்டில் சென்றபோது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கலைச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசில் கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேசன்(22), அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜித்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டத்தில் நடந்த குற்ற வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை கை.களத்தூர் போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரிடமிருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு கொளக்காநத்தத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    • ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது

    குன்னம்,

    குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பில் மறைந்த தமிழக முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க .சார்பில் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் தியேட்டரில் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, குன்னம் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன், கொளக்காநத்தம் கிளை செயலாளர் துரைராஜ், வக்கீல் பெரியசாமி, ஒன்றிய ஐடி விங் செயலாளர் கதிர்வேல், கொளக்காநத்தம் கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான என்.ஆர்.சிவபதி, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான அருணாசலம், முன்னாள் எம்பி சந்திரகாசி, மாவட்ட பொருளாளர் பூவை செழியன், முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர் நேமம் அன்பு முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வேப்பந்தட்டை சிவப்பிரகாசம் ரவிச்சந்திரன், பெரம்பலூர் செல்வகுமார் , எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராஜாராம், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜ பூபதி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செந்தில்குமார், ஆலத்தூர் ஒன்றிய துணை சேர்மன் சுசீலா முருகேசன், முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர் லட்சுமி , மகளிர் அணி ராஜேஸ்வரி, வக்கீல்கள் வெள்ளைச்சாமி பால்ராஜ், புதுக்குறிச்சி தங்கவேல், இளைஞர் அணி நாகராஜன், இன்ஜினியர் பிரபாகரன், காரை ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன், குறும்பாபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் வரவேற்றார். முடிவில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கர்ணன் ஏற்பாடு செய்திருந்தார். 

    • பெரம்பலூரில் புதை படிவங்களை பாதுகாக்க புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை
    • கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 -ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார். அந்த இடம் சாத்தனூர் ஆகும்.

    மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,

    இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப் படவில்லை. இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார். விக்ரம் என்பவர் கூறும் போது,

    வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார். மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.

    • பொதுப்பாதையை தனிநபர் அடைப்பதாக கூறி அகரம்சிகூர் அருகே குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
    • சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் காலனி தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் இளையராஜா(வயது 30). இவர் தனதுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் பக்கத்தில் உள்ள காலி இடத்தின் வழியாக இவரது வீட்டின் பின் பகுதியில் சுமார் 8 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வீட்டிற்கு சென்றுவர பொதுபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இளையராஜா வசிக்கும் வீடு அவருக்கு போதிய அளவில் இல்லை என்பதால் வீட்டை விரிவு படுத்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.வீட்டை விரிவுபடுத்தினால் 8 குடும்பத்தினர் வசித்து வரும் வீடுகளுக்கு சென்ற வர பாதை வசதி இருக்காது. இதன் காரணமாக அவர்கள் வடக்கலூர்-வேப்பூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×