என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • இடி, மின்னலுடன் பலத்த மழை
    • ஆடு மேய்ந்தபோது பரிதாபம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த குன்னம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு(வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் நேற்று மாலை தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையில் நனையாமல் இருப்பதற்காக அலமேலு, அருகில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அலமேலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பெண்கள் காயம்
    • கிரேன் உதவியுடன் கார் மீட்பு

    பெரம்பலூர்

    கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளியை சேர்ந்த தங்கராஜ். இவரது மகன் மிலன் (வயது 27). இவர் தனது உறவினர்களுடன் காரில் சென்னை சென்று விட்டு மீண்டும் குமுளிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மிலன் காரை ஓட்டினார். நேற்று மாலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் 3 ரோடு மேம்பாலத்தில் வந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது மேம்பாலத்தை கடந்த போது மிலனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி நிற்காமல் சினிமா பாணியில் பள்ளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சார வயர்கள் நாசம்
    • பல லட்சம் சேதம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.மேலும் குறிப்பாக ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர், பாடாலூர், செட்டிகுளம், காரை, கொளக்காநத்தம், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மாலை 3 மணி அளவில் ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் மின்னல் தாக்கியது அதில் அந்த அறையில் உள்ள மின்சார வயர்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மின்னல் தாக்கி பழுதடைந்தது.பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் நேற்று மாலை சுமார் 5 -மணி அளவில் திடிரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக சாரல் மழை இடைவிடாது இந்த பகுதியில் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் அரியலூர் செல்லும் சாலையில் திடீரென மின்கம்பி அறுந்து விழுந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் மின்கம்பி அருகே யாரும் வராமல் பார்த்துக் கொண்டதால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த லப்பைக்குடிக்காடு மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சப்ளையை நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 8 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
    • 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், நிலமோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் பெரம்பலூர் வட்டார வருவாய் துறையினருடன் இணைந்து தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு மனு விசாரணை முகாமினை நேற்று நடத்தினா். இதில் பெரம்பலூர் வருவாய் தாசில்தார் சுகுணா, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர், குணாவதி ராமர், ஏட்டு ரவிசாந்தகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பான 8 கோரிக்கை மனுக்களை பெற்று, அதில் 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டனர்."

    • மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார்.
    • அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அயன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கலைச்செல்வி கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. கலைச்செல்வியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று அயன் பேரையூர் ஏரியில் கலைச்செல்வி பிணமாக மிதந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனத்திலிருந்து விழுந்த முதியவர் உயிரிழந்தார்
    • மது போதையில் வந்த போது சம்பவம்

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட வைத்தியநாதபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராசு (வயது 65). இவர் நேற்று மாலை வீமது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பெருமத்தூரில் வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏகாம்பரேஸ்வரர் - பிரியாவிடை அம்மன், காமாட்சியம்மனுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • தனிப்படை போலீசார் நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் மாக்காய்குளம் கிராமம் தெற்கு தெருவில் வசித்து வந்த ராமச்சந்திரன் என்பவரை முன்விரோதம் காரணமாக அதே தெருவில் வசிக்கும் செல்லதுரை மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அரியலூர் சாலை, ராமலிங்கபுரம் பாரத் காஸ் கிடங்கு அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொலை செய்தனர். இது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரை உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராமனை விரைந்து கைது செய்ய, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாம்ளா தேவி, மங்களமேடு காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று குன்னம் காவல்நிலையம் அருகே ராமனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது
    • 50க்கும் மேற்பட்ட மூலிகைகள் இடம் பெற்றன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் து.களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூலிகை கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் நொச்சி, வில்வம், கல்தும்பட்டு இலை, சிறியா நங்கை, தூதுவளை, சிறுநெருஞ்சில், துத்தி, முடக்கறுத்தான், ஓமவள்ளி, கல்யாணமுருங்கை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மூலிகைகள், பல்வேறு பாரம்பரிய தாவரங்கள், கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நமது பாரம்பரிய நாட்டு மருத்துவம், இயற்கை மருத்துவ குணம் மிகுந்த தாவரங்கள் குறித்து அறிந்து கொள்ள இக்கண்காட்சி உதவியாக இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    • மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
    • போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல் (மாவட்ட குற்றப்பிரிவு), வளவன் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), ஜனனி பிரியா (மங்களமேடு சரகம்) ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 31 மனுக்களில், 9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    • தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்
    • கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 2.84 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) பிரகாசம் முன்னிலையில் குன்னம் ஆய்வாளர் சுசிலா, கீழப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மேற்கண்ட கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, அந்த இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களின் நிலங்களை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ×