என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்டம் உதகையில், தனியார் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உதகை:

    நீலகிரி மாவட்டம் உதகை கூட்செட் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த விடுதிக்குள் நுழைந்த போலீசார், சோதனை நடத்தினர். இதில், உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நபர்கள், அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது.

    பின்னர், தங்கும் விடுதி உரிமையாளர் உட்பட 32 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1,50,000 ரூபாய் மற்றும் சூதாட்டத்திறக்கு பயன்படுத்தபட்ட பொருட்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர். உதகையில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைவாக உள்ளதால், பல விடுதிகள் சூதாட்ட விடுதிகளாக மாறியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 683 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

    1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. 1.1.2021-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்த, அதாவது 1.1.2003-ந் தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் பெயர் உள்ளதா என்றும் அதில் திருத்தம் உள்ளதா என்றும் பார்வையிட்டனர். அத்துடன் திருத்தம், பெயர் சேர்த்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பித்தனர்.

    ஊட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தாலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. ஊட்டியில் அரசு உதவி பெறும் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் நபர்களுக்கு படிவங்களை வழங்கினார்.

    தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் வசிக்கும் இடத்துக்கே வீடு, வீடாக சென்று மீண்டும் ஒரு முறை வாக்காளர்களின் நீக்கம் தொடர்பான விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறுவது குறித்து வாகனங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 360 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 683 வாக்குச்சாவடிகளிலும் இன்றும் (நேற்று) நாளையும் (இன்று) சிறப்பு முகாம் நடக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்றார்.

    ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, தாசில்தார் குப்புராஜ், நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    நீர் பனியால் பூச்செடிகள் கருகாமல் இருக்க ஊட்டி தேயிலை பூங்கா, ரோஜா பூங்காவில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வந்தது. ஊட்டியில் கடந்த வாரம் திடீரென உறைபனி தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நீர் பனி மற்றும் உறைபனி இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலையில் நீர் பனி தாக்கம் உள்ளது. இதனால் பசுமையான புல்வெளிகளில் நீர் துளிகள் இருப்பதை காண முடிகிறது. வருகிற நாட்களில் உறைபனி தாக்கம் அதிகரிக்கக்கூடும். இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறி செடிகளுக்கு காலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

    இதன் மூலம் பனி தாக்கத்தால் செடிகள் கருகுவதை தடுக்க முடியும். ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை பூங்காவில் நீர் பனி அதிகளவில் இருக்கிறது. அதன் காரணமாக மலர் மற்றும் அலங்கார செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க பணியாளர்கள் பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

    மேலும் இரவு நேரங்களில் நீர் பனி தாக்கத்தால் பாதிக்காமல் இருக்க செடிகள் மீது நிழல் வலைகள் போடப்பட்டு உள்ளது. தேயிலை பூங்காவில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள கோடை சீசனையொட்டி பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர் நாற்றுகள் நர்சரியில் நடவு செய்யப்பட்டு இருக்கிறது.

    நீர் பனி தாக்கத்தால் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்கவும், கருகுவதை தடுக்கவும் சுற்றிலும் நிழல் வலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பகலில் வெயில் அதிகமாகும்போது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் நடைபாதை ஓரங்களில் உள்ள அலங்கார செடிகள் மீது நிழலுக்காக கோத்தாரி மிலார் செடிகள் போடப்பட்டு இருக்கிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகளை கொண்டு அமைக்கப்பட்ட அலங்காரம், இந்திய வரைபடம், தமிழ்நாடு எம்பலம் உள்ளிட்ட இடங்கள் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கொண்டு மூடப்படுகிறது. மேலும் நீர் பனியால் பூஞ்செடிகள் கருகாமல் இருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
    கொடைக்கானல்:

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அதிலும் கடந்த வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்களில் அவர்கள் வந்ததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிப்பதால், அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் தங்களது கேமரா, செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பில்லர் ராக், பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் குவிந்தனர். இதற்கிடையே ஏரிச்சாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் கொடைக்கானல் நகரில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    இறந்து கிடந்த பெண் புலியின் உடல் அருகே சோகத்துடன் சுற்றிய 2 புலிக்குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) சிங்காரா வனச்சரக பகுதியில் கடந்த 19-ம் தேதி மாலை 5 மணிக்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருள் சூழ தொடங்கியதால் உடனடியாக இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்துக்கு மீண்டும் சென்றனர். அப்போது இறந்த புலியின் உடல் கிடந்த இடத்தின் அருகே 2 புலிக்குட்டிகள் சோகத்துடன் சுற்றின.

    தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாயின் உடலை அவை சுற்றி வந்ததும், பிறந்து 3 வாரங்களே ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குட்டிகள் முதுமலை காப்பக முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு அந்த குட்டிகள் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, இறந்த புலியின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு அந்த புலியின் உடல் அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி இறந்தது எப்படி என்பது தெரியவில்லை. அதற்கான காரணங்களை கண்டறிய அதன் உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட 2 குட்டிகளை இங்கு வைத்து பராமரிப்பதா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகள் நெல், மரவள்ளிகிழங்கு பயிர்களையும் சேதப்படுத்தின.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே கைமா கொல்லி பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 2 காட்டு யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இந்த யானைகள் அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தின. தொடர்ந்து அந்தப்பகுதியிலேயே முகாமிட்டு உள்ளது. பகல் நேரத்திலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அச்சத்துடன் இருக்கக் கூடிய நிலை நீடித்து உள்ளது.

    காட்டுயானைகள் ஊருக்குள் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எங்கள் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இதுதொடர்பாக புகார் தெரிவித்தாலும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்ட எந்த நடவடிக்கை எடுப்பதில்லை.

    இதனால் தினமும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. மேலும் அதற்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினாலும், எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே காட்டு யானைகளை நிரந்தரமாக வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதுடன் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது.

    தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் நீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நீலகிரிக்கு வர இ-பாஸ் பெறும் நடைமுறையும் எளிதாக்கப்பட்டு உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்குள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது அது கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. மேலும் யானை சவாரி, வனத்துக்குள் சென்று வனவிலங்குகளை பார்வையிடுதல் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள் நடைபெறவில்லை. அவை அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, புலிகள் காப்பகம் பல மாதங்களாக மூடி கிடப்பதால் அடர்ந்த வனம் மற்றும் வனவிலங்குகளை காண்பதற்காகவும், வளர்ப்பு யானைகளை கண்டு ரசிக்கவும் முடியாமல் உள்ளது. எனவே புலிகள் காப்பகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, புலிகள் காப்பகத்தை திறப்பது குறித்து அரசு உத்தரவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அதற்கான உத்தரவு வரவில்லை என்றனர்.
    சர்வரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இ-பாஸ் பெற முடியாமல் பயணிகள் தவித்தனர். அவர்கள் விடிய விடிய எல்லையில் காத்திருந்தனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் மலைபிரதேசமான நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு வர இ-பாஸ் பெற நடைமுறை தளர்த்தப்பட்டு உள்ளதால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக இ-பாஸ் பெறப்பட்டு வருகிறது.

    தற்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், மாவட்ட எல்லையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை.

    இந்த நிலையில் கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கார்களில் வந்த சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு இ-பாஸ் பெற விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விண்ணப்பித்தபோதும் எந்த பலனும் இல்லை. இதனால் அவர்கள் கூடலூர்-கேரள எல்லையான நாடுகாணி சோதனை சாவடி வழியாக நீலகிரிக்குள் வர முயன்றனர்.

    அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் இ-பாஸ் பெறவில்லை என்பதால் உள்ளே அனுமதிக்க வில்லை. உடனே அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அப்போதுதான் இரவு 12 மணி முதல் சர்வரில் திடீர் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இருந்தபோதிலும் இ-பாஸ் பெறாத பயணிகள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் மாநில எல்லையில் சுற்றுலா பயணிகள் தங்கள் காருக்குள்ளேயே விடிய விடிய காத்திருந்தனர். பின்னர் காலை 8 மணிக்கு சர்வர் சரியானது. அதன் பிறகு அனைவருக்கும் இ-பாஸ் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அதை காண்பித்துவிட்டு நீலகிரிக்குள் வந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் இ-பாஸ் கிடைத்ததும் வர வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுவிட்டு நீலகிரி அருகே வரும்போது இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். சர்வரில் திடீர் கோளாறு ஏற்படும்போது அனுமதி கிடைக்காததால் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும். தற்போது சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது என்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிக்கு வளம் சார்ந்த வங்கி கடனாக ரூ.4 ஆயிரத்து 46 வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வங்கியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி 2021-2022-ம் ஆண்டிற்கான நபார்டு வங்கி தயாரித்த ரூ.4,046.63 கோடி வளம் சார்ந்த வங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர் தூனேரி ஊராட்சி கூட்டமைப்பு குழுவுக்கு ரூ.24.5 லட்சம் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வங்கி (நபார்டு) 2021-22-ம் ஆண்டிற்கான நீலகிரி மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன் ரூ.4, 046.63 கோடி வழங்க நபார்டு வங்கி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இது நடப்பாண்டிற்கான கடன் திட்டத்தை காட்டிலும் 11.44 சதவீதம் அதிகம். விவசாயத்துக்கான வங்கிக்கடன் ரூ.2,773.99 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    விவசாயத்தில் மூலதனம் உருவாக்கும் விதமாக வங்கி கடன் அளிக்க வேண்டும் என்றும், இதற்கான அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களை அமல்படுத்துவது அவசியமாகிறது. விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் நீண்ட கால விவசாய கடன் வழங்க வேண்டும்.

    விவசாயத்தில் இழப்புகளை ஈடு செய்வதற்காக வங்கிகள் கடன் பெறுகின்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகள் பயிர் கடன் திட்டத்தின் கீழ் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகள் குறு, சிறு விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கான கடன்களுக்கு முன்னுரிமை தரவேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கி அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) திருமலை ராவ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர் மழை காரணமாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் செடிகளிலேயே காய்கறிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தொடர் மழையால் காய்கறிகள் சேதம் அடையும் என்பதால் விவசாயிகள் பலர் தங்களது தோட்டங்களில் பயிரிட்ட காய்கறிகளை முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை சற்று குறைந்து உள்ளது. இருப்பினும் கேரட், உருளைக்கிழங்கு, அவரை விலை குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது.

    ஒரு கிலோ கேரட் ரூ.60 முதல் ரூ.100 வரை, பீட்ரூட் ரூ.35 முதல் ரூ.40 வரை, பீன்ஸ் ரூ.20, முள்ளங்கி ரூ.5 முதல் ரூ.10 வரை, காளிப்ளவர் ரூ.25 முதல் ரூ.30, நூல்கோல், டர்னீப் ரூ.15 முதல் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக அவரை விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரு கிலோ அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனை ஆனது. கேரட், உருளைக்கிழங்கு, அவரை போன்ற காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார்.
    ஊட்டி:

    பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, கல்லார் பூங்கா போன்ற பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக நீலகிரியில் உள்ள அனைத்து பூங்காக்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டு செப்டம்பர் 9-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு இந்த பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் அரசு அறிவித்த செயல்பாட்டு நடைமுறைகளின் படி அனைத்து பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி முன்னேற்பாடு நடவடிக்கையாக நுழைவு வாயிலில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்ப பரிசோதனை செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது மற்ற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்று பரவாமல் இருக்க பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சமூக இடை வெளியை கடைபிடிக்கவும், கட்டாயம் முககவசம் அணியவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். இதை கண்காணிக்க பூங்காக்களில் ஊழியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் பூங்காக்களுக்கு வருகை தரும்போது மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் உத்தரவின் படி சுகாதார அலுவலர்கள், ஊழியர்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஊட்டி கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பூங்கா சாலையில் பொதுவெளியில் புகைப்பிடித்ததாக சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறியதாக ரூ.4, 000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு நடத்தி அரசின் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் ஊட்டி கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது பூங்கா சாலையில் பொதுவெளியில் புகைப்பிடித்ததாக சுற்றுலா பயணி ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் ரேஷன் கடையில் இருந்து பொருட்கள் வாங்க தகுதியான நபரை நியமித்து கொள்ளலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் நடமாட இயலாத நிலையில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நல குறைபாடு அல்லது வயது மூப்பு காரணமாக ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற தகுதியான ஒருவரை ரேஷன் கடையில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ள உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ரேஷன் கடை பணியாளரிடம் ஒப்படைத்து பொருட்களை பெற்று செல்லலாம்.பொருட்கள் பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் விவரம் தவறாது பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    வட்ட வழங்கல் அதிகாரி அந்த மனுவின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு கோரிக்கையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தகுதி இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் வாயிலாக அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு அனுமதி வழங்குவார். அங்கீகரிக்கப்பட்ட நபர் அத்தியாவசிய பொருள் பெறுவதற்கு யாருக்காக பொருள் பெற உள்ளாரோ அவர்களது ரேஷன் அட்டையை எடுத்து செல்ல வேண்டும்.கடை பணியாளர் ரேஷன் அட்டை எண் அடிப்படையில் விற்பனை உள்ளீடு செய்து அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு பொருட்களை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×