என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
    • இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.

    • விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
    • தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சாணார்பாளையத்தை சேர்ந்த விவசாயி நடராஜ் (69) என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தின் மையத்தில் கரும்பு காட்டில் 11 அடி உயரத்தில் சிவலிங்கம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந்தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

    வழிபாடு

    நிலத்துக்கு மேல் 8 அடி உயரமும், அதன் அடியில் 3 அடி உயரமும் கொண்டு அமைந்துள்ளது. பிரம்ம சூத்திரக் குறியீட்டுடன் காவிரி கரையை பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. தினமும் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் நில உரிமையாளர் அனுமதி யுடன் சிவலிங்கத்தை எடுத்து வேறு இடத்தில் வைக்க முற்பட்டனர். வருவாய் துறையினர் சிவலிங்கத்தை வேறொரு இடத்துக்கு மாற்ற தடை போட்டுள்ளனர்.

    தற்போது இந்த சிவலிங்கத்தை தினசரி பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் வந்து பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர். பிரதோஷ நாட்களிலும் முக்கிய விசேஷ தினங்களிலும் அங்கு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    6-ம் நூற்றாண்டு

    இது குறித்து சிவனடியார்கள் கூறியதாவது:-

    முற்காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிரம்ம சூத்திர குறியீடை வைத்து பார்க்கும்போது, 6-ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இந்த சிவலிங்கம் ஆந்திர மாநிலம் குடிமல்லம் பழமையான லிங்கத்தை போன்றே உள்ளது. லிங்கத்தின் மேற்பகுதி தட்டையாக உள்ளது. அதனால் இது பல்லவர் காலத்து சிவலிங்கமாக இருக்க வாய்ப்புள்ளது. கரும்பு காட்டிற்குள் இருப்பதால் விளக்கு ஏற்றி வழிபடும்போது தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பாதுகாப்பான வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

    கடந்த ஒரு வருடமாக வருவாய்த் துறையினர் அனுமதி தரவில்லை. எனவே சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய அனுமதி தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ரேவதி தெரிவிக்கையில் சிவலிங்கத்தை இடமாற்றம் செய்வதற்கு பக்தர்களின் கோரிக்கையை பரிசீலித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை இடமாற்றம் செய்ய இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி பெற்ற பிறகு தான் மாற்ற முடியும் என்றார்.

    • சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.
    • சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் புகழேந்திரன் (23). இவர் கடந்த 1 1/2 ஆண்டாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மன்னா வீதியில் தங்கி கட்டிடம் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வருகிறார். புகழேந்திரனின் உறவினரின் 15 வயது மகள் ஊட்டியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமியின் தாயார் குமாரபாளையம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி குமாரபாளையம் அழைத்து வந்து புகழேந்திரன் கட்டாய திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதற்கு சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை செய்து புகழேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியின் தந்தை மற்றும் புகழேந்திரனின் தாய் சரஸ்வதி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.89 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த நவம்பர் 5-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.25-ல் இருந்து 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.30 ஆனது. 6-ந் தேதி மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.35 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.89 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.98 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், சேளூர், கொந்தளம், பெரிய மருதூர், சின்ன மருதூர், சின்ன சோளிபாளையம், ஆனங்கூர், கள்ளிப்பாளையம், கொத்த மங்கலம், கபிலக்குறிச்சி, கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லி கோவில், ஜேடர்பாளையம், சோழ சிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்தி வேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெட்டி செல்வ தற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை ஒன்றிய பகுதிக ளில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    சந்தை

    ஆலைகளில் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி பிலிக்கல்பா ளையத்தில் உள்ள வெள்ள ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3000 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது.

    வெல்லம் சிப்பம் ரூ.1,400

    சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரம் உருண்டை வெல்ல சிப்பங்களும், 3 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது.

    இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,350 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை உயர்வடைந்துள்ளதால் வெல்ல உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரசால் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தால் அறிவிக்கப்பட்ட 3,359 பணிக்காலியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதன் அடிப்படையில், இத்தேர்விற்கான மாதிரித் தேர்வு இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை பாடவாரியாவும், முழு மாதிரித் தேர்வாகவும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

    விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலா கவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம்.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த நாமக்கல் மாவட்ட விண்ணப்ப தாரர்கள் அனைவரும் இம்மாதிரித் தேர்வினில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
    • வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

     பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

    ஒரு கிலோ ரூ.500

    வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.

    இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.

    நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.
    • செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). லாரி டிரைவர். இவரது மனைவி ராஜாமணி (45). இவர்களுக்கு கார்த்திக் (26) என்ற மகனும் கார்த்திகா (25) என்ற மகளும் உள்ளனர்.

    மனைவி கொலை-கணவன் தற்கொலை

    இந்த நிலையில் நேற்று செல்வராஜ் திடீரென தனது மனைவி ராஜாமணியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் போது அவர்களது மகன், மகள் வீட்டில் இல்லை என்று தெரியவந்தது.

    இது பற்றி அக்கம் பக்கத்தி னர் மங்களபுரம் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜேஷ், மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உருக்கமான தகவல்கள்

    இதையடுத்து வழக்குப்பதிவு செய்து மனைவியை செல்வராஜ் எதற்காக கொலை செய்தார்? என விசாரணை நடத்தியதில் உருக்கமான தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

    கொலையுண்ட ராஜாமணியின் மகன் கார்த்திக் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜாமணியின் அண்ணன் தேவேந்திரன் என்பவரின் மகள் மகேஸ்வரிக்கும், கார்த்திக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ராஜாமணி முன்னின்று நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் செல்வ ராஜுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் மனைவி ராஜாமணி யிடம் எனது மகனுக்கு ஏன் உன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்தாய்? என்று அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து செல்வராஜ் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    வழக்கம்போல் நேற்றும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வராஜ் அவரது மனைவி ராஜாமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இதில் கடும் கோபம் அடைந்த செல்வராஜ் மனைவி என்றும் பார்க்காமல் ராஜாமணியின் கழுத்தை சேலையால் இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து செல்வராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்தது.

    சோகம்

    தொடர்ந்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது.
    • மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காவேரி, ஆவாரங்காடு, வெப்படை, ஆலாம்பாளையம், அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரைசுமார் 4 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது.

    வழக்கமாக பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தால் அந்த மழை தண்ணீர் பள்ளிபாளையத்தில் உள்ள வடிகால்கள் மூலம் காவிரி ஆற்றில் கலக்கும். தற்போது பள்ளிபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வடிகால்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தண்ணீர் செல்ல குழாய் மட்டும் பதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக இன்று அதிகாலை 3 மணி முதல் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மழை வெள்ளம் புகுந்தது.

    அதிகாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் பள்ளிபாளையம் பகுதிக்கு வந்தது. பஸ்சில் சுமார் 20 பயணிகள் இருந்தனர். பள்ளிபாளையம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. தொடர்ந்து பஸ் செல்ல முடியவில்லை. இதையடுத்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாகதீயைணப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் இருந்த பயணிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    இதற்கிடையே தொடர்ந்து மழை வெள்ளம் ஆறாக ஓடிக் கொண்டு இருப்பதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. காலை 10 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறியது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தட்டு தடுமாறி சென்றனர். மழை வெள்ளம் காரணமாக பள்ளி பாளையம் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    எருமப்பட்டி-10, குமாரபாளையம்-74, நாமக்கல்-6, புதுச்சத்திரம்-2.30, ராசிபுரம்-23, சேந்தமங்கலம்-20, திருச்செங்கோடு-80, கொல்லிமலை செம்மேடு-21.

    • காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் ஊராட்சி, காட்டுப்பாளையத்தில் கலெக்டர் உமா தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி திட்டம் 4 வது சுற்று தடுப்பு பணி 26.11.2023 வரை 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,67,796 மாட்டினங்களுக்கும் 63,328 எருமையினங்களுக்கு என மொத்தம் 3,31,124 கால்நடைகளுக்கும் 100 சதவீதம் முழுமையாக இத்தடுப்பூசி பணி 15 ஊராட்சி ஒன்றியங்களில் 105 குழுக்கள் ஏற்படுத்தி நாமக்கல் மாவட்டம் முழுவதிலும் தடுப்பூசிப் பணியினை மேற்கொள்ள உள்ளது.

    இந்த வகையில் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இளநகர் கிராமம், காட்டுப்பாளையத்தில் இன்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இளநகர் ஊராட்சியில் நடைபெறும் முகாமில் 7 கிராமங்களை சேர்ந்த 348 பசுக்கள், 173 எருமைகள் என மொத்தம் 521 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

    விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருமை ஆகிய கால்நடைகள் இன்று முதல் 21 நாட்களுக்கு அந்தந்த கிராமங்களில் நடைபெறும். பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்பிடப்படும் தேதியில் குறிப்பிட்ட இடங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து தெரிவிக்கப்படும்.

    எனவே கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசியினை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.

    இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு டாக்டர் நடராஜன், துணை இயக்குநர் டாக்டர் அருண்பாலாஜி, உதவி இயக்குநர் டாக்டர் மருதுபாண்டி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது.
    • குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தாள பேட்டை பகுதியில் வசிப்பவர் விமலா, மாதேஸ்வரன் தம்பதி. இவர்களது 2 வயது மகள் ஹரிணி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியை முகத்தில் கடித்தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் நேற்று இரவு சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சாலையில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியிருப்பதாவது:-

    வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார்.
    • இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி விஜயகுமார் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×