என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    மயிலாடுதுறை:

    மின்வாரிய மயிலாடுதுறை செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும். மேமாத்தூர், கீழ்மாத்தூர், நல்லுச்சேரி, மேலகட்டளை, கடலி, நரசிங்கநத்தம், ஆறுபாதி மற்றும் பரசலூரில் ஒரு பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோவில் மின் உதவி செயற் பொறியாளர் அப்துல் வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி:

    மின்சார சட்டத்திருத்த மசோதா 2021 ஐ திரும்பப் பெற வேண்டும், 3 வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தின் மூலம் திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும்.

    வங்கி, இன்சூரன்ஸ், மின்வாரியம், போக்குவரத்து, நிலக்கரி, ரெயில்வே, விமானம், பெல் மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குதாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொ.மு.ச. திட்ட செயலாளர் தியாகராஜன், ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டசெயலாளர் செல்வராஜ், பொறியாளர் கழக மண்டல செயலாளர் விக்ரமன், இன்ஜினியர் சங்க ராஜேஷ், எம்ப்ளாய்ஸ் பெடரே‌ஷன் திட்டசெயலாளர் சிவசெல்வன் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறையில் உள்ள வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு 4-ம் நம்பர் புதுத்தெரு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருக்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளும் கழிவு நீரை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து பாதாளசாக்கடை கழிவுநீர் வழிந்தோடி பாசன வாய்க்கால் மற்றும் மாவட்ட கலெக்டர் வாயிலில் செல்லும் மழைநீர் வடிகாலில் கலந்து ஓடுகிறது. மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறையில் உள்ள வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்றி நோய் பரவுவதை தடுக்க வேண்டும். மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
    திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.
    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 2 வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்து உள்ளன. பல இடங்களில் ஏழை-எளிய மக்கள் தங்கள் குடிசை வீடுகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள்.

    பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர மத்திய அரசு உரிய நிவாரண தொகையை தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.

    மயிலாடுதுறையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பஸ்சின் படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு பொறையாறுக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சில் 90-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மேலும் பஸ்சின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். மயிலாடுதுறை கொத்தத்தெரு பெரிய மாரியம்மன் கோவில் அருகே தரங்கம்பாடி சாலையில் சென்றபோது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது சுதாரித்து கொண்ட மாணவர்கள் படியில் இருந்து மேலே ஏறிக்கொண்டனர். இதனால் எந்தவித காயமும் இன்றி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    படிக்கட்டு உடைந்தது தெரியாமல் பஸ்சை டிரைவர் ஓட்டி சென்றார். மாணவர்கள் சத்தம் போட்டதும் சத்தம் கேட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதனைத்தொடர்ந்து பஸ்சில் இருந்து கண்டக்டர் கீழே இறங்கி உடைந்து கீழே கிடந்த படிக்கட்டை எடுத்து வந்தார். பின்னர் அங்்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது.

    பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்சில் இருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தினமும் காலை நேரத்தில் மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பஸ்சில் இருந்து மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் அதிகளவில் நடந்துள்ளன.

    எனவே காலை, மாலை என இரு வேளைகளிலும் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மேகாலயா கவர்னர் கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மேகாலயா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் கூறுகையில் ‘‘விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை அவர்களின் அடிப்படை கோரிக்கை. அரசு அதை ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்த கமிட்டி அமைக்க வேண்டும். இதை அரசு செய்தால், விவசாயிகள் அவர்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறுவார்கள்.

    குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, அவர்களுடைய பிரச்சினையை ஆராய, அவர்கள் வீட்டிற்குச் செல்ல கமிட்டி அமைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். தேவையில்லாமல் போராட்டத்தை நீட்டிக்க வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்துகிறேன். எம்.எஸ்.பி.  அவர்களுடைய கோரிக்கை. நான் அந்த விசயத்தில் அவர்களோடு இருக்கிறேன்.

    மூன்று சட்டங்களை திரும்பப்பெறுவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய முன்னெடுத்து செல்ல, பெரிய இதயம் என்பதை காட்டியதற்காகவும் நடவடிக்கை எடுத்த பிரதமரை பாராட்டுகிறேன். என்னை நியமனம் செய்தவர்களிடம் இருந்து இது தொடர்பாக ஏதாவது அறிகுறி வந்தால், இந்த நிமிடத்திலேயே தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பொதுவாக கவர்னர்கள் அரசு கொள்கை முடிவு குறித்து கருத்து கூறுவது கிடையாது. இதனால் மேகாலயா கவர்னர் மீது மத்திய அரசு அதிருப்தி அடைய வாய்ப்புள்ளது.
    திருவாலி பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதை வனத்துறையினர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாளர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுற்றித்திரியும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து, ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி திருமாறனை சந்தித்து குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சீர்காழியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    பெரம்பலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலை ஒடச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 56). கட்டிட மேஸ்திரியான இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 ஆடுகளுடன் சிக்கி தவித்த கணவன்-மனைவி 4 படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டுப்பகுதி உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவருடைய மனைவி காந்திமதி (50). இவர்கள் 150 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் பட்டி அமைத்து, அங்கு அடைத்து வைத்திருந்தனர். இவர்கள் பகலில் பட்டியில் இருந்து ஆடுகளை மேய்ச்சலுக்காக திறந்து விடுவார்கள். மாலையில் மீண்டும் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு தங்களுக்கு சொந்தமான படகின் மூலம் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மற்றும் காந்திமதியும் படகில் கொள்ளிடம் திட்டில் பட்டியில் உள்ள தங்களது ஆடுகளை பார்க்க சென்றனர்.

    அப்போது தொடர் மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கணேசன், காந்திமதியும் 150 ஆடுகளுடன் கொள்ளிடம் ஆற்று திட்டில் சிக்கி கொண்டு கரைக்கு வரமுடியாமல் தவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படகுகளில் அங்கு சென்றனர்.

    பின்னர் கொள்ளிடம் ஆற்று திட்டில் சிக்கி தவித்த கணேசன், காந்திமதி மற்றும் 150 ஆடுகளையும் 4 மணி நேரம் போராடி 4 பைபர் படகுகள் மூலம் கரைக்கு மீட்டு வந்தனர்.

    மேலும் அதே கொள்ளிடம் ஆற்று திட்டு பகுதியில் சிக்கி தவித்த 3 பசுமாடுகளையும் படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    அதே திட்டு பகுதியில் 12 புள்ளிமான்கள் சிக்கி தவிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் ஒரு படகில் கொள்ளிடம் ஆற்று திட்டு பகுதிக்கு சென்று 12 மான்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும்.
    புதுடெல்லி :

    குழந்தைகள் உரிமைகள் குறித்த தேசிய பயிற்சி முகாம், டெல்லியில் நடந்தது. அதில், மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    ஏழை குடும்பங்களில் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக துன்புறுத்தல்கள் நடப்பதாக பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அது உண்மையல்ல.

    பணக்கார குடும்பங்களிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பலம்வாய்ந்த அமைப்புகள், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றிலும் நடக்கின்றன. இதற்கு நிர்வாகிகளாக அல்லாமல், குடிமக்களாக நாம் தீர்வு காண வேண்டும். பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நாதல்படுகை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை வயல் பகுதிக்கு சென்று ஆட்டிற்கு மரக்கிளைகளில் இருந்து பசுந்தழைகளை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கு மேலே சென்ற மின் கம்பியில் மரக்கிளை விழுந்து மரக்குச்சி வழியாக மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கும்பகோணம் அருகே வீட்டு பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சோழபுரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் சாதிக் அலி. இவரது மனைவி ஹாஜா நாச்சியார். இவர்களின் இரண்டு மகள்களுக்கும் திருமணமானதால் இருவர் மட்டும் சோழபுரத்தில் வசிக்கின்றனர். சம்பவத்தன்று சிக்கல் நாயக்கன் பேட்டை மற்றும் பந்தநல்லூரில் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்ட நிலையில் நிலை கதவு திறந்து இருப்பதை பார்த்த அதே தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் நிஜாம் அகமது இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சாதிக் அலி அங்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு மற்றும் உள்ளே உள்ள பீரோக்களை மர்ம நபர்கள் உடைத்து பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்த தகவலின்பேரில் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×