என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.
    • கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா என்றும் பார்வையிட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா தீ தடுப்பு சாதனங்கள் முறையாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா என்றும் பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    • நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.
    • கிராமங்களில் வசிக்கும் 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது.

    இந்த ஆதீனத்தின் சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு ஆதீன கிராமங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த மக்களுக்கு உடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

    அவ்வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆதீனத்துக்கு உள்பட்ட திருவாவடுதுறை, திருவாலங்காடு, கரைகண்டம், துகிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நலிவடைந்த 3700 பேருக்கு உடைகள் வழங்கப்பட்டது.

    இதனை, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கி தொடக்கி வைத்து அருளாசி கூறினார்.

    இதனை தொடர்ந்து ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட கட்டளை தம்பிரான்கள் கோயில் கண்காணிப்பாளர் சண்முகம், பொது மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஆதீன நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    உடைகளை பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.

    • மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் உள்ளனர்.
    • வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் பொருட்கள் வாங்க குவிந்த வண்ணம் உள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் பலர் ஹெல்மெட் அணியாமல் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செல்கின்றனர். இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மயிலாடுதுறை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், முருகன் மற்றும் போலீசார் கிட்டப்பா அங்காடி பகுதியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர்.

    அப்போது விளம்பர வாகனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களையும் போக்குவரத்து போலீசார் வழங்கி கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    • மாணவிகள் பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி செல்ல வேண்டும்.
    • மாணவர்கள் அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளு க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயகிருபா, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா பங்கேற்று பேசுகையில், மாணவிகள் எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கு, தேர்ந்தெடுப்பதற்கு, தற்பொழுதிலிருந்து பாதை மாறாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். உயர் கல்வியில் எந்த இலக்கை அடைய முயற்சி செய்கிறோமோ, அதை நோக்கி ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டும்.

    அதற்கென நேரம் ஒதுக்கி குறிக்கோளோடு செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமாக புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதோடு, நமக்குள்ளே, கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாமே தெளிவுபடுத்திக் கொள்ள முடியும் என்றார். இதில் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • சீர்காழியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற நடைபெற்றது.
    • கவுன்சிலர்களுக்கும் ரெயின் கோட் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, வருவாய் ஆய்வாளர்சா ர்லஸ், நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கணக்கர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    ரமாமணி (அதிமுக):

    எனது வார்டில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும்.

    சாமிநாதன் (திமுக): நகராட்சியில் வரி வசூல் முறையாக நடக்கிறதா? எனது வார்டில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    பாலமுருகன் (அதிமுக):

    எனது வார்டில் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்களை அழிக்கக்கூடிய கொசு மருந்து களை அடிக்க வேண்டும்.

    சூரியகலா(அதிமுக):

    10-வது வார்டில் கொசு மருந்து அடிக்கவேண்டும்.

    ராமு(திமுக):

    மீன் மார்க்கெட் அருகே கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜேஷ்(அதிமுக):

    எனது வார்டில் பன்றிகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன சில சமயங்களில் வீடுகளில் புகுந்து உணவை சாப்பிட்டு விட்டு சென்று விடுகின்றன இதனால் மக்கள் அவதி ப்படுகின்றனர். உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயந்தி பாபு(சுயே.):

    பேசுகையில் எனது வார்டின் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு வரும் சாலை சேரும், சகதியுமாக இருக்கு இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    முபாரக் அலி(திமுக):

    தேர் வடக்கு வீதி மற்றும் காமராஜர் வீதிகளில்மக்கள் கூட்டம் அதிகளவு சென்று வருவதால் நாள்தோறும் மூன்று முறை கொசு மருந்து, பிளிசிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

    ராஜசேகர்(தேமுதிக):

    அனைத்து கவுன்சிலர்களுக்கும் மழைக்காலம் என்பதால் ரெயின் கோட் வழங்க வேண்டும் என்றார்.

    நகராட்சிக்கு வருமானத்தை பெருக்கும் வகையில் கடைகளுக்கு வரி விதிக்கவேண்டும்.

    வேல்முருகன்(பாமக):

    எனது வார்டில் மினி மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும்.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் (திமுக):

    சீர்காழி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பன்றிகள் அதிக அளவில் பிடிக்கப்பட்டுள்ளன மேலும் தொடர்ந்து பன்றிகள் சுற்றி திரியும் இடங்கள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்தால் உடனடியாக பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் அந்த பகுதிகளில் விடப்பட்டு வருகிறது.

    சீர்காழி நகரில் சுற்றித்திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் எச்சரித்து விடுவிக்க ப்பட்டுள்ளது.

    மேலும் சில மாடுகள் கோசாலையில் விடப்பட்டுள்ளன.

    நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருப்ப வர் தொடர்பாக கணக்கெடு க்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா:

    சீர்காழி நகராட்சி யில் வரி செலுத்தாமல் சென்றவர்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மீண்டும் வரி கட்ட தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் பகுதியில் கண்காணிப்பு மையம் திறக்க பட்டது.
    • போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டது.

    சீர்காழி:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயில் மூன்று சாலை சந்திப்பில் பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் ஓலிப்பெருக்கியுடன் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    விழாவிற்கு போக்குவரத்து காவல் சப்-இன்ஸ்பெக்டர் பிறைசந்திரன் தலைமை வகித்தார்.

    சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பங்கேற்று கண்காணிப்பு மையத்தினை திறந்து வைத்தார்.

    இதில் போக்குவரத்து காவலர்கள் பங்கேற்றனர்.

    • அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் அறிவுறுத்தலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சீர்காழி நகரில் அனைத்து வர்த்தக, வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுத்திடவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திடவும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இன்றியமையாததாக இருப்பதால் அனைத்து வர்த்தக வணிக கடைகளில் உள்புறம் வெளிப்புறம் சாலையை நோக்கியவாறு சிசிடிவி அமைத்திடவும் வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடிடவும் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடித்து பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது.

    • சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை தாலுக்கா வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆத்மா திட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் தொழில்நுட்ப குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஆத்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் இளையபெருமாள் கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்.

    அதற்கான சந்தை வாய்ப்புகளை எளிமைப் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் வடவீரபா ண்டியன் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை இயற்கை சாகுபடியிலும் பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறவும் உற்பத்தி செய்த பொருட்களை அரசு கூட்டுறவு விற்பனை பண்டகசாலை மூலம் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வேளாண்மை உதவி இயக்குனர் புதிய தொழில்நுட்பங்களையும் வேளாண்மை துறை சார்ந்த மானியங்களையும் விவசாயிகள் இடத்திலே கொண்டு சேர்ப்பதற்கு சுணக்கம் இல்லாமல் களப்பணியாற்றுவதற்கு அலுவலர்களுக்கு புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    பின்னர் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் மழைக்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் ஆலோசனை வழங்குவதற்கு வேளாண்மை துறை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    முதலில் ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகமணி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் நன்றி கூறினர்.

    • ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
    • அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஆதி ராகுஸ்தலமான நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அமிர்த ராகு பகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    ராகு பரிகார தோஷ நிவர்த்திக்காக இக்கோவிலுக்கு பல்வேறு பக்தர்கள் வருகை புரிந்து பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவி லுக்கு திரைப்பட நடிகை வடிவுக்கரசி தனது மகள் மற்றும் பேத்தியுடன் வருகை புரிந்தார்.

    கோவில் சிவாச்சாரியார் முத்துக்கு ருக்கள், கணக்கர் ராஜி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து நாகேஸ்வ ரமுடையார் சுவாமி, பொன்னாகவல்லி அம்மன் ஆகிய சாமி சந்திகளில் தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் அமிர்த ராகு பகவானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தார்.

    கோயில் முத்துக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் அவர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.

    • அந்தியோதயா ரெயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் ஜெக.சண்முகம் தலைமையில் சீர்காழியில் நடந்தது.

    மாவட்ட தலைவர் சுந்தரராசன், சிறப்பு தலைவர் ஜெயசந்திரன், வட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.

    வட்ட பொருளர் தவகுமார் வரவேற்றார் .

    வாழ்வியலை நோக்கி என்ற தலைப்பில் தியாகராஜன், திருக்குறளும் மனித வாழ்வும் என்ற தலைப்பில் சக்ரபாணியும், சிந்திக்க சில நிமிடங்கள் என்ற தலைப்பில் வீரபாண்டியும், குண்டலகேசி என்ற தலைப்பில் சாமிதுரையும் சொற்பொழிவாற்றினர்.

    வைத்தினாசாமி, சக்கரவர்த்தி, மணிவாசகம், சிவபெருமான், ராஜா,ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் உரிய காலத்தில் டி.ஏ நிலுவையுடன் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,

    மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் நகரில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்திட நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, அந்தியோதயா ரயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயலர் சாம்சன் கில்பர்ட் நன்றி கூறினார்.

    • கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
    • அந்த கட்டத்தின் அருகில் ஒரு பாம்பு இருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.

    இதில் மகளிர் திட்ட வாழ்வாதார இயக்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் பின்பகுதியில் சுவரையொட்டி ஒரு பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அங்குள்ள அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்ததன் பேரில், சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பாம்பு ஓடிவிட்டது.

    அந்த பாம்பை பாண்டியன் சுமார் 2 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதனை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் பிடிபட்ட பாம்பு கண்ணாடி விரியன் பாம்பு என்று அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பிடிபட்ட பாம்பு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியி டம் ஒப்படைக்கப்பட்டு, சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடைமேடைக்கு வந்தது.
    • மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    தரங்கம்பாடி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் முக்கிய ரெயில் நிலையமாக மயிலாடுதுறை ரெயில் நிலையம் உள்ளது.

    பல ரெயில்களின் முக்கிய வழித்தடமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது.

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்

    1-வது நடைமேடையில் வரும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் பயணிகள் அனைவரும் முதலாவது நடை மேடையில் தங்கள் பொருட்களுடன் கூடி இருந்தனர்.

    ஆனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2-வது நடைமேடைக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்தி றனாளி பயணிகள் என அனைவரும் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரெயில் நிலைய நடை மேம்பால படிகளில் ஏறி மிகுந்த சிரமத்துடன் 2-வது நடைமேடைக்கு சென்றனர்.

    சிலர் ரெயில்வே தண்டவா ளத்தில் இறங்கி கடந்து 2-வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

    இதன் பின் 2-வது நடைமேடையில் இருந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்த 1-வது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது 2-வது நடைமேடைக்கு சிரமத்துடன் தங்கள் உடைமைகளை சுமந்து வந்த பயணிகள் ரெயிலில் ஏற முடியாமல் மீண்டும் 1-வது நடைமேடைக்கு தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்.

    இதனால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    இது குறித்து ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சுபம் குமாரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    ×