என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பனந்தோப்பு மங்களம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 22).
நேற்று பச்சையம்மாள் வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான கோவிந்தராஜ் என்பவர் மகன் கார்த்திக் (17) வந்தார். குடிபோதையில் இருந்த அவர் , பச்சையம்மாள் வீட்டுக்கு வந்து அவரிடம் ‘தீப்பெட்டி இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு பச்சையம்மாள் ‘தீப்பெட்டி இல்லை’ என்று மறுத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
இதை கேட்டு வாலிபர் கார்த்திக்குக்கு ஆத்திரம் வந்தது. பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிறிதுநேரம் கழித்து கார்த்திக், ஒரு நாட்டு துப்பாக்கியுடன் பச்சையம்மாள் வீட்டுக்கு சென்றார்.
அப்போது வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்த பச்சையம்மாளை நோக்கி நாட்டு துப்பாக்கியால் திடீரென ஆவேசத்துடன் சுட்டார். இதில் பச்சையம்மாளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார்.
இதை பார்த்து வாலிபர் கார்த்திக், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்,
பின்னர் காயம் அடைந்த பச்சையம்மாளை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும் கார்த்திக் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
இளம்பெண் மீது வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரங்கநாதன் (வயது 35). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். தற்போது பா.ஜனதா கட்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி கீதா(25) என்ற மனைவியும், ரிஷிகேஷ் (3), தனஞ்செயன் (1) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ரங்கநாதனின் மகன் தனஞ்செயனின் பிறந்த நாள் ஆகும். இதனால் மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ரங்கநாதன் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று கேக் வாங்கினார்.
பிறகு இரவில் ரங்கநாதன் வீடு அருகே சென்றார். அப்போது அங்கு கார், மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென ஒரு மர்ம கும்பல் வந்தனர். அவர்கள், ஆயுதங்களால் ரங்கநாதனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பின்னர் இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையுண்ட பா.ஜனதா பிரமுகர் ரங்கநாதனுக்கும், பொட்டசந்திரம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனை கொலை செய்தவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை குந்துமாரனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பா.ஜனதாவினர் திடீரென திரண்டனர். பா.ஜனதா மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, ஓசூர் கலால் டி.எஸ்.பி. சங்கர், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் ராயக்கோட்டை கமலேசன், தேன்கனிக் கோட்டை சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர், ‘ரங்கநாதனை கொன்ற கும்பலை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினரிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் பக்கமுள்ள தாசன்புரத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் மற்றும் அவருடைய மகன்களுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து அவரது சகோதரர் மற்றும் அவரது மகன்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் லட்சுமய்யா தனது நிலத்தில் உள்ள கால்நடை கொட்டகைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் தோட்டத்திற்கு சென்ற அங்கு கொட்டகையில் உடல் எரிந்த நிலையில் லட்சுமய்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமய்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உத்தனப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






