என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில், ஓசூர் தாலுகா அலுவலகம் அருகே நேற்று கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மாரேகவுடு தலைமை தாங்கினார்.
இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா, விரைவில் வருவது நல்ல செய்தியாகும். கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்ற உறுதியுடன் அ.ம.மு.க.வினர் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
சசிகலாவை தமிழகமே திரண்டு வந்து வரவேற்க காத்திருக்கிறது. இந்த 2021-ஆம் ஆண்டு அ.ம.மு.க.விற்கும், தமிழக மக்களுக்கும் நிச்சயம் நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். சசிகலா, எந்த நேரத்தில் விடுதலை செய்யப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை,
எனவே, அவர் விடுதலை ஆனவுடன் ஓசூரில் தங்குகிறாரா? அல்லது வேறெங்கு தங்குவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அப்போதைய கால, சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யப்படும். சசிகலா, அ.தி.மு.க.வில் சேருவாரா அல்லது அ.ம.மு.க.வில் தொடர்வாரா? என்பது அவர் வரும்போது தான் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நேரலகிரி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.
இந்த எருது விடும் விழாவை காண வேப்பனஹள்ளி, சூளகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் திரண்டு வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் உமாசேகர் என்பவரின் வீட்டு சுவரில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று எருது விடும் விழாவை பார்த்தனர். மேலும் கீழ்பகுதியிலும் சுமார் 20 பேர் நின்று வேடிக்கை பார்த்தனர்.
அந்த வீட்டின் சுவர் மீது இளைஞர்களும், பொதுமக்களும் ஏறி நின்றதால் திடீரென கட்டிடம் அதிக பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது.
அப்போது கட்டிடத்தின் மேற் கூரையில் இருந்த 15-க்கும் மேற்பட்டோர் அப்படியே கீழே விழுந்தனர். மேலும் கட்டிடத்தின் கீழே நின்றிருந்த சிலரும் காயம் அடைந்தனர்.
இதில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நின்ற 9 வயது சிறுமி மேகாஸ்ரீ மற்றும் முனிபாலா (62) ஆகிய 2 பேரும் இடி பாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதில் கீதா (35), லாவண்யா (24), ஷோபா, ராமமூர்த்தி (20), நாகம்மா(35), அக்ஷயா (7), அருண் (24), நந்தினி (10), லோகேஷ் (10), அஸ்வதம்மா(60), ஜீவா (6), கலைவாணி (13), ராமரத்தினம் (38), லதா (35), நதியா (8) உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர்,டி.எஸ்.பி. சரவணன், வேப்பனஹள்ளி இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, மற்றும் வேப்பனஹள்ளி தொகுதி முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் எருதுவிடும் விழாவை முறையான அனுமதி பெறாமல் நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த பத்மநாதன் (50), அம்மாசியப்பன் (65), திம்மராயப்பன் (50), முனிராஜ் (67), நாகராஜ் (51) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் 5 பேரும் கிருஷ்ணகிரி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் எருது விடும் விழாவை நடத்திய ஊர் தலைவர்கள் நாகராஜ், மற்றும் சிவா ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
ஒசூர் அரசு மருத்துவமனை கடந்த சில நாட்களாக சர்ச்சையில் சிக்கி வருகிறது. கடந்த மாதம் 30- ந் தேதி அன்று ஒசபுரத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 26) என்பவர் பிரசவத்துக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள், குழந்தையின் தலையை துண்டித்து வெளியே எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரசவத்தில் தாய் இறந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஓசூர் அடுத்த தொடுதேப் பள்ளியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பவித்ரா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 3-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பவித்ராவுக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் டாக்டர்கள் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை பவித்ராவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பிறகு இரவு 7 மணியில் பவித்ராவின் உடல்நிலை மோசமானது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதை கேள்விப்பட்ட பவித்ராவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டாக்டர்களின் அலட்சியப் போக்கு காரணமாக பவித்ரா இறந்து விட்டதாக குற்றம்சாட்டி, திடீரென ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களிடம் மருத்துவமனை முதன்மை அலுவலர் பூபதி, டி.எஸ்.பி. முரளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பவித்ராவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்,






