என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கெலமங்கலம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள ரத்தனகிரி கொத்தூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகள் காவ்யா (வயது 21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ரவிக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரவி கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் தறி வேலை செய்து வந்தார். இதனால் காவியா தனது பெற்றோர் வீட்டிலே இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காவியா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை லட்சுமணன் கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமாணமான 2½ ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா விசாரணை நடத்தி வருகிறார்.
    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீசார் இருதுகோட்டை பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காவேரி (வயது 40), சுரேஷ் (37) சரவணன் (40), மாதேஷ் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    தடுப்பு கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பேரண்டப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திகிரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    கர்நாடக மாநிலம் கல்புருக்கி மாவட்டம் சித்தபூர் தாலுகா மலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யகாந்த் (வயது 45). இவர் மத்திகிரி அருகே தாசரப்பள்ளியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சூர்யகாந்த் பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் நலம் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அஞ்செட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த நவாஸ் (40) என்பவர் மது விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குலாலர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் தேர்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று காலை எழுந்து கதவை திறந்த போது வெளிப்புறமாக பூட்டி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு கதவை திறந்து விடுமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்த போது கதவு திறக்க முடியாதபடி துணியால் கட்டுப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் துணியை அவிழ்த்து கதவை திறந்து விட்டனர்.

    இதையடுத்து செல்வராஜ் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் தனது மகன் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம், 3 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடிக்கொண்டு கதவை ெவளிப்புறமாக துணியால் கட்டி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சான மாவு வனப்பகுதியில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்த நிலையில் கடந்த மாதம் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் சான மாவு பகுதிக்குள் வந்தன. இவை பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    இதையடுத்து வனத்துறையினர் போராடி யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    இந்த நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் யானை சாலையை கடக்க முயன்றது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி, திடீரென யானை மீது மோதியது. இதில் யானையின் பின்னங்கால், வயிற்று பகுதியில் பலமாக அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்தது.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அதிர்ச்சி அடைந்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

    இதற்கிடையே அங்கு வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையால் அசையக் கூட முடியாமல் சுருண்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் கால்நடை மருத்துவர் குழுவினர், யானையை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆண் யானை பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைமுத்து (35) என்பவர் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் உள்ள தர்காவில் வருகிற 24-ந் தேதி உருஸ் விழா நடக்கிறது.

    இதையொட்டி அங்கு பராமரிப்பு பணிகளை செய்வதற்காக பெங்களூரு பொம்மஹள்ளி அருகே உள்ள மங்காபாலையா பகுதியை சேர்ந்த ஜிலான் (வயது 24), அவரது நண்பர் அர்பர் பாஷா (24), மற்றும் அவரது தம்பி கிஷான்(14) உள்பட 6 பேர் நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் கார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- கெலமங்கலம் சாலையில் அக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார், ரோட்டில் உருண்டப்படியே கவிழ்ந்தது.

    இதில் காரை ஓட்டிய ஜிலான், மற்றும் அர்பர் பாஷா ஆகியோர் காரின் இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் கிஷான் படுகாயம் அடைந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் மத்தகிரி போலீசார் விரைந்து வந்தனர். பலியான ஜிலான், அர்பர்ஷா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த கிஷான் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 3 பேர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ரோட்டில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் கெலமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பீமணப்பள்ளி ரமேஷ் (வயது 30), செட்டிப்பள்ளி லோகேஷ் (39), அலசப்பள்ளி சக்கரலாப்பா (44), அத்திமுகம் சிவா (35) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து 8 பேர் மேல்மருவத்தூருக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த காரை மாலூரை சேர்ந்த நாகேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ஒரப்பம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரப்பம் காமராஜ் காலனியைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி முருகன் (27), அவருடைய அண்ணன் மகனான எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் சக்தி (15) ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் முருகனும், சக்தியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். சக்தி படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாணவன் சக்தி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் சாலை மறியல் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளியில் இருவேறு சமூக மக்களிடையே கடந்த ஒரு ஆண்டாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் நேற்று எருதுவிடும் விழாவிற்காக கிராமத்தில் தடுப்புகள் கட்டியிருந்தனர். இன்னொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தடுப்புகளை உடைத்தும், கழற்றி வீசினார்கள்.

    இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது, சில இளைஞர்கள் தெருவில் நின்று கொண்டு தொல்லை கொடுப்பதால் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. தற்போது விழாவிற்காக கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை அகற்றி உள்ளனர். நாங்கள் எருதுவிடும் விழா நடத்த அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும். தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் எதிர் தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். 5 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தால், அச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், இருதரப்பினர் இடையே மோதல் சம்பவம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை மீது கன்டெய்னர் லாரி மோதியதில் யானை படுகாயம் அடைந்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் பேரண்டப்பள்ளி, போடூர்பள்ளம், சானமாவு உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்படட யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்து வருகின்றன. தற்போது பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை ஆண் யானை ஒன்று சுற்றி வந்தது. இந்த யானை தினமும் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுற்றித்திரிகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளியில் அந்த யானை சாலையை கடக்க முயன்றது.

    அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று யானை மீது மோதியது. இதில் யானை படுகாயம் அடைந்தது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானையை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் யானையை தூக்கி மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். கன்டெய்னர் லாரி மோதி யானை படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×