search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம், நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குலாலர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் தேர்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். நேற்று காலை எழுந்து கதவை திறந்த போது வெளிப்புறமாக பூட்டி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம், பக்கத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு கதவை திறந்து விடுமாறு கூறினார். இதையடுத்து அவர்கள் வந்து பார்த்த போது கதவு திறக்க முடியாதபடி துணியால் கட்டுப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் துணியை அவிழ்த்து கதவை திறந்து விட்டனர்.

    இதையடுத்து செல்வராஜ் வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் தனது மகன் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சம், 3 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருடிக்கொண்டு கதவை ெவளிப்புறமாக துணியால் கட்டி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×