என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி அருகே குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களுக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்புஅளித்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி லைன் கொல்லை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 33). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி சத்தியராஜின் வீட்டிற்கு வந்து பர்கூர் அடுத்த சக்கில் புதூர் பகுதியை சேர்ந்த அலமேலு (25) மற்றும் சீதா (30) ஆகியோர் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு கூறினார்கள்.

    அதற்கு சத்தியராஜின் மனைவி மறுப்பு தெரிவித்து வீட்டிற்குள் சென்ற நேரத்தில் வெளியில் விளையாடிய அவரது 2 வயது குழந்தையை கடத்தி செல்ல முயன்றனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்கள் 2 பேரையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார்.

    அதன்படி குழந்தையை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அலமேலு, சீதா ஆகிய 2 பேருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதமும், இதை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்பாஸ்கர் ஆஜராகிவாதாடினார்.
    புகையிலை பொருட்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி போலீசார் சின்ன பெத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கே.என்.தொட்டியை சேர்ந்த ரோஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி கீழ் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 32). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மொபட்டில் சூளகிரி மார்க்கெட் பக்கமாக சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் ஹரிபிரசாத் தவறி கீழே விழுந்தார். பின்னால் வந்த வாகனங்கள் ஹரிபிரசாத் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கார் விபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் கருணாசாகர் (வயது 24).

    இந்த நிலையில் நேற்று இரவு கருணாசாகர், தனது நண்பர்கள் 6 பேருடன் ஆடி காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது இன்று அதிகாலை 2 மணியளவில் கோரமங்கலா என்ற இடத்தில் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையின் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கருணாசாகர் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரும் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    இந்த விபத்து ஆடு கோடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருணாசாகருடன் பயணம் செய்த அவரது நண்பர்கள் 6 பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மிகவும் விலை உயர்ந்த ஆடி காரில் கருணாசாகர் அதிவேகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காரில் பயணம் செய்த 7 பேரும் சீட் பெல்ட் அணியாததால் காரில் ஏர் பேக் வேலை செய்யவில்லை. இதனால் விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

    காரில் சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் பலியான சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன அத்திகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 40). தொழிலாளி. குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி, அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் ராமமூர்த்தி அவருக்கு போன் செய்து, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியால் வேட்டையாட போனவர் பலியான சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்தசிகரளபள்ளி அடுத்த திம்மராயன் கொட்டாய் கிராமத்சை சேர்ந்தவர் திம்ம ராயப்பா (வயது 56). இவரது நண்பர் சேகர் (40).

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு 9 மணியளவில் சூளகிரி வனப்பகுதியில் காட்டு பன்றிகளை வேட்டையாட புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்காக வெடிகளை வைத்திருந்தார்.

    அப்போது வனப் பகுதியில் இருட்டாக இருந்ததால் காட்டுப் பன்றிக்கு வைத்த வெடியை திம்மராயப்பா , தெரியாமல் காலால் மிதித்து விட்டார். இதில் வெடி வெடித்ததில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் நண்பர் சேகர், படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து சூளகிரி வனத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து சென்று, வெடி வெடித்து பலியான திம்ம ராயப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சேகரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியால் வேட்டையாட போனவர் பலியான சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் காயம் அடைந்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மத்தூர்- வாலிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நடந்து சென்ற கன்னுகானூரை சேர்ந்த செல்வி (41), கல்யாணி 39) ஆகியோர் மீது மோதியது.

    இந்த விபத்தில் ராஜ்குமார் கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வி, கல்யாணி ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி சத்யா (வயது 27). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சத்யா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சத்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி அருகே மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    சூளகிரி அருகே பீலாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 52). இவர் சூளகிரி மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் முனியப்பா கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் அவர் மன வேதனையில் காணப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியப்பா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முனியப்பா மனவேதனையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
    கெலமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீசார் அகரம் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த ஹரீஷ்குமார் (வயது 26), அனுமந்தபுரம் முனிராஜ் (26), சக்கிலிபாளையம் முனிராஜ் (40), மல்லேஷ் (28) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் இருந்து காட்டு 3 யானைகள் வெளியே வந்தன. பின்னர் அந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு திம்மசந்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தது.

    பின்னர் நேற்று காலை லிங்கதீரணப்பள்ளி ஏரி பகுதிக்கு அந்த யானைகள் வந்து முகாமிட்டுள்ளன. இதையடுத்து விவசாய நிலங்களுக்கு சென்ற கிராம மக்கள் 3 யானைகள் ஏரியில் முகாமிட்டுள்ளதை பார்த்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்து ஏரியில் நின்ற 3 யானைகளை விரட்டினர். அப்போது அங்குள்ள ராகி நிலங்களை காலால் மிதித்து நாசம் செய்து கொண்டு மீண்டும் திம்மசந்திரம் காட்டு பகுதிக்குள் யானைகள் சென்றன. பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் யானைகள் சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம், உத்தனப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னபேட்டு கானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40), விவசாயி. இவருக்கு திருமணமாகி நிலா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சுரேஷ், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்ன பேட்டகாண பள்ளி சேர்ந்த கோவிந்தன் என்பவர் நிலத்தில் நடந்து சென்ற போது அங்கிருந்த மின்வேலியில் சுரேஷ் கால்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தன் தனது நிலதத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் வந்து சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இரவு நேரத்தில் அங்கு நடந்து வந்த சுரேஷ், மின்சார வேலியில் கால்பட்டு பரிதாபமாக பலியானது தெரிய வந்தது.

    இதையடுத்து இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் மின்வேலி அமைத்த கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம், உத்தனப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×