என் மலர்
கிருஷ்ணகிரி
வேப்பனப்பள்ளி:
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் கம்பள புரா ஹரகலதேவி வனப்பகுதியில் மிகப்பெரிய சந்தனமரங்கள் உள்ளது. சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய மலைகள் சிறு குன்றுகள், வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தன மர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர் மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (வயது28) மல்லப்பா(58) கிருஷ்ணா(28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய நபர்களை கர்நாடக போலீசார் தேடி வருகிறார்கள்.
கர்நாடக போலீசார் நடத்திய விசாரணையில் சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பலில் சுமார் 12 முதல் 15 பேர், மலைப்பகுதியில் தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகியோரிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல் நத்தம் இருளர் காலனியை சேர்ந்த 5 பேரை சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அவர்களை கர்நாடக போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள 15 பேர் கொண்ட கும்பலில் மேலும் பர்கூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வேப்பனப்பள்ளிக்கு கைதான மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் கர்நாடக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு உண்டியல் நத்தம் இருளர் காலனிக்கு அழைத்து சென்று, அவர்களது கூட்டாளிகள் இருக்கிறார்களா? என்று கர்நாடக போலீசார் சோதனை செய்தனர்.
சந்தன மரம் கடத்தல் வழக்கில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்களை கர்நாடக மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக் கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானை கூட்டம் அடிக்கடி இடம் பெயர்ந்து நொகனூர், மரகட்டா ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை கூட்டம் நொகனூர் கிராமத்தின் அருகில் மின்கம்பங்கள் மீது உரசி மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை மின்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த யானை கூட்டத்தில் இருந்து விலகிய ஒற்றை ஆண் யானை தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரகட்டா கிராமத்தின் சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒற்றை யானை சாலையில் சென்ற பஸ்சை வழிமறித்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளை விரட்டியும் அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த யானையின் அட்டகாசத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் விரட்டினர். வனத்துறையினருக்கே போக்கு காட்டிய ஒற்றை யானை அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சியால் சாலை ஓரத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.
வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, “இப்பகுதியில் சாலைகளில் அடிக்கடி யானை கூட்டம் வாகனங்களை வழிமறிப்பதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் வனத்துறையினர் இங்கு முகாமிட்டு வனப்பகுதியில் இருந்து வெளிவராதவாறு யானைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றனர்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிகோட்டை, ஓசூர், ஊத்தங்கரை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது . இந்த திடீர் மழையால் சாலை ஓரங்களில் மழை வெள்ளம் போல தேங்கிக் கிடந்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடித்து வந்தது.
நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் கிருஷ்ணகிரியில் பல இடங்களில் மழைதண்ணீர் தேங்கி நின்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளம் போல் மழை தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை தண்ணீரில் நடந்து சென்றனர்.
பள்ளியில் தேங்கிய மழை தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கிருஷ்ணகிரி- 125. 2
ஊத்தங்கரை- 42.4
போச்சம்பள்ளி- 16.6.
பர்கூர்- 22.2
தேன்கனிக்கோட்டை- 20.4






