என் மலர்
செய்திகள்

அட்டகாசம் செய்த ஒற்றை யானை
தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சை வழிமறித்து ஒற்றை யானை அட்டகாசம்
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் ஒற்றை யானையை விரட்டினர்.
தேன்கனிக் கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானை கூட்டம் அடிக்கடி இடம் பெயர்ந்து நொகனூர், மரகட்டா ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு யானை கூட்டம் நொகனூர் கிராமத்தின் அருகில் மின்கம்பங்கள் மீது உரசி மின்கம்பங்கள் சாய்ந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை மின்துறை ஊழியர்கள் சீரமைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த யானை கூட்டத்தில் இருந்து விலகிய ஒற்றை ஆண் யானை தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரகட்டா கிராமத்தின் சாலையோரத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒற்றை யானை சாலையில் சென்ற பஸ்சை வழிமறித்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளை விரட்டியும் அட்டகாசம் செய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த யானையின் அட்டகாசத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை அறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும், அதிக ஒலி எழுப்பியும் விரட்டினர். வனத்துறையினருக்கே போக்கு காட்டிய ஒற்றை யானை அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சியால் சாலை ஓரத்தில் இருந்து வனப்பகுதிக்கு விரட்டினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது.
வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, “இப்பகுதியில் சாலைகளில் அடிக்கடி யானை கூட்டம் வாகனங்களை வழிமறிப்பதும் அச்சுறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் வனத்துறையினர் இங்கு முகாமிட்டு வனப்பகுதியில் இருந்து வெளிவராதவாறு யானைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என்றனர்.
Next Story






