என் மலர்
செய்திகள்

சூளகிரி அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னபேட்டு கானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40), விவசாயி. இவருக்கு திருமணமாகி நிலா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சுரேஷ், தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று கொண்டிருந்தார்.
அப்போது சின்ன பேட்டகாண பள்ளி சேர்ந்த கோவிந்தன் என்பவர் நிலத்தில் நடந்து சென்ற போது அங்கிருந்த மின்வேலியில் சுரேஷ் கால்பட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கோவிந்தன் தனது நிலதத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் வந்து சேதப்படுத்தாமல் இருப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இரவு நேரத்தில் அங்கு நடந்து வந்த சுரேஷ், மின்சார வேலியில் கால்பட்டு பரிதாபமாக பலியானது தெரிய வந்தது.
இதையடுத்து இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் மின்வேலி அமைத்த கோவிந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம், உத்தனப்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






