என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (29), இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    படப்பை அடுத்த பணப்பாக்கம் பகுதியில் செல்லும்போது காரை விட்டு கார்த்திக் கிழே இறங்கியுள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் கார்த்திக், அருண் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் சென்ற காரும் சேதமடைந்தது.

    இந்த விபத்து குறித்து ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 41), இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டி.என்.பி.எஸ்சி. பயிற்சி மையத்தில் ஆசிரியராக உள்ளார். இவர் தனது சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் சீனிவாசன் வெளியே சென்று இருந்த நிலையில் வீட்டில் அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணி ஆகியோர் இருந்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று வீட்டுக்குள் முகமூடி அணிந்த 2 நபர்கள் கத்தியுடன் நுழைந்தனர். கத்திமுனையில் அவர்களை மிரட்டி அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இது நடைபெறுகிறது.

    நாட்டிய விழாவை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுலா துறை செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதல் நாளான நேற்று நடிகை ஷோபனா தனது குழுவினருடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இல்லை.

    இதையடுத்து நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து அதிகஅளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிய விழா அடுத்தமாதம் 23-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.15 வரை நடைபெறும். இதில் பரதம், குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், சிலம்பம், கதகளி, ஒடிசி போன்ற பாரம்பரிய நடனக்கலை நிகழ்ச்சி நடக்கிறது.
    காஞ்சீபுரம் அங்கன்வாடி மையம் அருகே மூடப்படாத கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பாவா தெருவில் மூன்று சாலைகள் இணையும் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு மிக அருகில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் பணி நடைபெற்றபோது ஜே.சி.பிஎந்திரம். கால்வாய் மீது ஏறி இறங்கியதில் கால்வாய் மீது இருந்த சிலாப் உடைந்தது. 

    இதன்பின்னர் அது சரிசெய்யப்படவில்லை. மூடப்படாத இந்தக் கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படும் அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    காஞ்சிபுரத்தில் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பாவாஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வீட்டில் கியாஸ் சிலிண்டர்கள் ஆபத்தான முறையில் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் கியாசுடன் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 60 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் இங்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆலந்தூர்:

    புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தமிழகத்திலும் கால் பதித்து விட்டது. நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள்.

    தடுப்பூசி

    அந்த முதியவர் நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் முதியவர் நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதன் பின்னர் அவர் கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின்னரே முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து முதியவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், உறவினர்கள் உள்பட 91 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    பரிசோதனை செய்யப்பட்டுள்ள நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆலந்தூர் மண்டல சுகாதார அலுவலர் சுதா கூறியதாவது:-

    கடந்த 10-ந்தேதி நைஜீரியாவில் இருந்து வந்து நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 61 வயது முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

    ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்கள் 50 சதவீதத்துக்கும் மேல் முககவசம் அணிவது இல்லை. முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். டெங்கு வராமல் இருக்க கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்

    படப்பை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் புது நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் சோமங்கலம் புதுநல்லூர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் பின்புறம் கொலை செய்யப்பட்டு அவரது உடல் தார்ப்பாயில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார் விசாரணை செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் 7 பேரை பிடித்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக புதுநல்லூர் பகுதியை சேர்ந்த அன்பு (24), பழையநல்லூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (30), வெங்கடேசன் (20), நாகராஜ் (20), ஸ்ரீபெரும்புதூர் பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த யுவராஜ் ( 20), புதுநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகியோரை சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    போலீஸ் விசாரணையில் சங்கர் ஆட்களை வைத்து பெயிண்டர் வேலை செய்து வந்ததாகவும் ஒரு சில ஆர்டர்களை அன்புவிடம் கொடுப்பார். அந்த வேலைகளை அன்பும் செய்து கொடுப்பார் என்பது தெரியவந்துள்ளது.

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பழைய நல்லூர் பகுதியில் சங்கர் மூலம் வந்த ஒரு வீட்டின் வேலையை அன்பு செய்து கொண்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை சங்கர் அன்புவை வேலைக்கு அழைத்துள்ளார். அப்போது நான் மது குடித்துள்ளேன். வேலைக்கு வரவில்லை என்று சங்கரிடம் அன்பு தெரிவித்தார். அப்போது சங்கர், நான் உனக்கு வேலை எடுத்து தருகிறேன். அதை செய்கிறாய். ஆனால் எனக்கு ஒரு வேலை அவசரம் என்ற போது ஏன் வர மறுக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்டு சங்கர் அன்புவை அடித்து விட்டு சென்றதாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து சங்கர் அன்புவின் செல்போனை தொடர்பு கொண்டபோது, பழையநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பு பகுதிக்கு சங்கரை வர சொல்லி உள்ளார். இதனை தொடர்ந்து சங்கர் தோப்பு பகுதிக்கு சென்றவுடன் அங்கிருந்த அன்பு மற்றும் அன்புவின் நண்பர்கள் சேர்ந்து சங்கரை கொலை செய்ததாகவும் கொலை செய்யப்பட்ட உடலை எடுத்து வந்து சோமங்கலம் பஸ் நிறுத்தம் பின்புறம் வீசி விட்டு சென்றுள்ளனர் என்பவை தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவர்களை நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
    இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் முதல் அலை வேகமாக பரவியதை அடுத்து சென்னை உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கடந்த 2020 மார்ச் 25-ந் தேதியில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.

    சரக்கு விமானங்கள் போக்குவரத்திற்கு மட்டும் மத்திய அரசு அனுமதித்து இருந்தது. ஆனாலும் சரக்கு விமான சேவைகள் மிகவும் குறைந்த அளவே இயக்கப்பட்டதோடு, சரக்குகளை ஏற்றி இறக்கும் ஊழியர்களும் மிகவும் குறைவானவர்களே பணிக்கு வந்ததால், சரக்குகளை கையாளுவது மிகவும் குறைவாகவே இருந்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை நேரத்தில் சென்னை விமானநிலைய சரகத்தில் சரக்கு விமானங்களின் வருகையும், சரக்குகளை கையாளுவதும் பல மடங்கு அதிகரித்தது.

    இந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியில் இருந்து டிசம்பா 20-ந் தேதி வரையிலான 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை சென்னை விமானநிலைய சரக ஊழியாகள் கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருந்த ஏப்ரல், மே, ஜூன், ஜுலை மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு வந்த மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் செரியூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டாகள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள், மாஸ்க்குகள், கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மற்றும் இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்களில் தொடர்ச்சியாக வந்தன. அவைகள் விமானநிலைய சரக ஊழியர்களை உடனடியாக விமானங்களில் இருந்து இறக்கி, காலதாமதமின்றி விரைந்து டெலிவரி செய்து வந்தனர்.

    அதைப்போல் கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரக பார்சல்களாக தொடர்ந்து தற்போது வரை விமானங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் கத்தார், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வழக்கமாக வரும் சரக்குகளும் பெருமளவு வந்து கொண்டிருக்கின்றன.

    கொரோனா வைரஸ் 2-ம் அலை ஊரடங்கால் ஊரே முடங்கிக்கிடந்த இந்த நேரத்திலும் சென்னை விமானநிலைய சரகப்பிரிவு இடைவிடாமல் தொடர்ந்து பணியாற்றி 10 மாதங்களில் 5 ஆயிரம் விமானங்களின் சரக்குகளை ஏற்றி, இறக்கி கையாண்ட சாதனையை சென்னை விமானநிலைய சரகப்பிரிவு ஊழியர்கள் நேற்று மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

    அதோடு 5 ஆயிரத்தை குறிக்கும் விதத்தில் அணிவகுத்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சென்னை விமானநிலைய சரக ஊழியர்கள் இதைப் போல் தொடர்ந்து மேலும் சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை படைக்க வேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் வாழ்த்தி பாராட்டினர்.
    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
    ஆலந்தூர்:

    கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக சேலை தினம் நேற்று (21-ந் தேதி) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

    விமான நிலையத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகள், விமான நிறுவனங்களைச் சேர்ந்த 75 பெண்கள், விதவிதமாக சேலைகளை அணிந்து, ஒய்யார நடை அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற பெண்கள் 75 விதமாக சேலை அணிந்து கலக்கலாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதனால் நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக்காலணி பகுதியில் 126 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

    இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி காலி குடங்களுடன் காஞ்சிபுரத்திலிருந்து ஓரிக்கை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    அண்மையில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து சென்று விட்டதால் குடிநீரை முறையாக வினியோகம் செய்ய முடியவில்லை எனவும் புதிய குழாய்கள் அமைக்கும் பணிநடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    கல்லூரி மாணவரின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    மாங்காடு:

    பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாங்காட்டை சேர்ந்த 17 வயதான மாணவி பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாங்காடுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவி உருக்கமாக எழுதி வைத்திருந்த 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், “எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். வெளியில் சொன்னா என்னைதான் தப்பா பேசுவாங்க. என்னை நீ பொண்ணுனு கூட பார்க்கவில்லை. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லக்கூடாது. நீ எல்லாம் இருக்கவே கூடாது.

    கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார். இதற்கு மேல் முடியாது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். மனசு ரொம்ப வலிக்குது. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியல. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. படிக்க முடியவில்லை. பள்ளி பாதுகாப்பானது இல்லை. கல்லறையும், தாயின் கருவறையும்தான் பாதுகாப்பானது. ஆசிரியர், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம்” என்று உருக்கமாக எழுதி இருந்தார்.

    மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து 3 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார் யார்? அவரது நெருங்கிய நண்பர்கள், தோழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த விசாரணை நடந்தது.

    இதில் மாங்காட்டை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவரான விக்னேஷ் என்பவர் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. மேலும் அவரது வாட்ஸ்அப்பில் இருந்து மாணவிக்கு ஆபாசமாக பதிவிட்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கல்லூரி மாணவரான விக்னேசை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவர் சோமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    அவர் மீது போக்சோ, பெண் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாணவி மாலை நேரத்தில் தட்டச்சு வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவர் விக்னேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவர் மாணவி படித்த அதே பள்ளியில் படித்திருக்கிறார்.

    இதன் பின்னர் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளனர். மாணவி நெருங்கி பழகியதை சாதகமாக பயன்படுத்திய விக்னேஷ் ஆபாசமாக பேச ஆரம்பித்து உள்ளார். வாட்ஸ்அப்பிலும் ஆபாசமாக சாட் செய்து இருக்கிறார். மாணவியுடன் விக்னேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், சாட் செய்த விவரங்களை போலீசார் ஆதாரங்களாக திரட்டி உள்ளனர்.

    விக்னேசின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாணவி தற்கொலை தொடர்பாக முதல் கட்டமாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    மாணவியிடம் அடிக்கடி பேசிய நபர்களின் செல்போன் நம்பர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து மாணவிக்கு தொல்லை கொடுத்தவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தனிப்படையினர் வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தக் கட்டமாக இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தில் பள்ளி பாதுகாப்பானது இல்லை. ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    மாணவியின் உறவினர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை அழைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் சிலரும் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

    இதனால் மாணவியிடம் செல்போனில் பேசியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


    தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகம் சுங்குவார்சத்திரம் வடக்குப்பட்டு, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடுதிகளில் தங்க வைத்து அங்கிருந்து அவர்கள் பணி புரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் சாப்பிட்ட உணவில் ஏற்பட்ட நச்சுத்தன்மையால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரு சிலரை தவிர மீதம் உள்ளவர்கள் சிகிச்சை முடிந்து விடுதிக்கு திரும்பினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த 8 பெண் ஊழியர்களை காணவில்லை என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது.

    இந்த தகவலை தொடர்ந்து ஊழியர்கள் ஒரகடம் வடக்குபட்டு, புளியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழி்த்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இநத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பெண் தொழிலாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த பல்வேறு அமைப்புகளை சார்ந்த 22 பேர் என மொத்தம் 89 பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பெண் ஊழியர்கள் சொந்த ஜாமீனில் விடப்பட்டனர். 22 பேர் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். சுங்குவார்சத்திரத்திலும் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.ஐ.டி.யு. சார்பில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலை படப்பை பகுதியில் கோஷங்களை எழுப்பி 30-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணிமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.அதே போன்று காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுதூண் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தரமற்ற உணவு சாப்பிட்டு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பின்னர் திரும்பிய பெண் ஊழியர்கள் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். தரமற்ற உணவு வழங்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் நேற்று முன்தினம் சிறுவானூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் அந்த தனியார் விடுதியின் வார்டன் உள்பட 97 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜமீன் கொரட்டூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் பிபின் (வயது 34), கவியரசு (32) ஆகியோரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

    தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் சேலத்தை சேர்ந்த வளர்மதி அவதூறு தகவல்களை பதிவிட்டதாக தெரிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நகர் போலீசில் சூளைப்பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் புகார் செய்தார். போலீசார் வளர்மதி மீது தமிழக அரசுக்கும், போலீஸ் துறைக்கும் ஏதிராக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    வளர்மதி ஏற்கனவே நெடுவாசல், சேலம் எட்டுவழிசாலை திட்டம் போன்றவற்றை எதிர்த்து சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×