என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் அருகே 22 டன் ரேஷன் அரிசி சிக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிபாக்கம் சுப்புரத்தினம் நகர் பகுதியில் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது 2 மினி லாரிகளில் இருந்து ஒரு சரக்கு லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டிருப்பதை பார்வையிட்டார்.

    அதிகாரி வருவதை கண்டதும் டிரைவர்கள் அங்கிருந்து மினிலாரியில் தப்பிச்சென்று வி்ட்டனர்.

    அங்கு நின்றுகொண்டிருந்த லாரியை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி என்பதும் வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார் தப்பிச்சென்ற லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சீதனம்சேரி அருகே சாலவாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 50 கிலோ அரிசி மூட்டைகள் 50 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் இருந்த 2 பேரிடம் இது குறித்து விசாரித்தபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

    மினி லாரியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் வணிகர் தெருவை சேர்ந்த முஜாகிம் (வயது28), வடிவேல் (29) என்பது தெரியவந்தது அவர்களை கைது செய்த போலீசார் லாரியையும் அரிசி மூட்டையையும் குடிமையியல் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதோடு டி.ஆர்.ஐ. மற்றும் சுங்கத்துறையினா இணைந்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான பயணிகளை, குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளை சோதனை செய்தனர், மும்பையை சேர்ந்த 35 வயது ஆண் பயணிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக தகவல் அளித்தார்.

    அவர் ஆப்பிரிக்கா நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்திருந்தது தெரியவந்தது.

    அந்த பயணியை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவர்களை எடுத்து பிரித்து பார்த்தனர்.

    அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக் கற்கள் 717.95 கேரட் இருந்ததை கண்டுப்பிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.88 லட்சம் ஆகும்.

    இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் அரசு அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே உள்ள மாருதி நகரில் வசித்து வருபவர் மேகநாதன். இவர் உள்ளாட்சி நிதித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி இவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் 80 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது காஞ்சிபுரம் ஏகாம்பரபுரம் பகுதியை சேர்ந்த உறவினரான சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள், சாலவாக்கத்தை சேர்ந்த கவுதம், சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 44 பவுன் நகை, 31 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டில் பதுக்கிய 2 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அயப்பாக்கம் ஊராட்சி உள்ள வெள்ளாளர் தெருவில் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கள் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அந்த பகுதியில் ஒரு வீட்டின் பின்புறத்தில் சென்றனர் அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 4 பேர் அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிவிட்டனர்

    அங்கு சோதனை செய்த போது பிறகு 2 டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைப்பட்டு இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    ரே‌ஷன் அரிசி பதுக்கல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அருகே குண்டர் சட்டத்தில் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் மணிமங்கலம் மற்றும் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களான குன்றத்தூர் தாலுகா, நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்த வாசு என்ற வாசுதேவன் (வயது 21), பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்ற ஷார்ப் வசந்த் (21), வட்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (23) ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி 3 பேரை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    உத்திரமேரூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சிறுதாமூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று காலை 11 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் கிராமத்தை சேர்ந்த நந்தகோபால் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டர் மூலம் அங்கு துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் சிறுதாமூர் கிராமத்தை சேர்ந்த அம்புரோஸ் (வயது 48) என்பவர் வேலை செய்துகொண்டிருந்தார்.

    திடீரென டிராக்டர் 10 அடி உயரத்தில் இருந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரில் இருந்த அம்புரோஸ், நந்தகோபால் இருவரும் டிராக்டரின் அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அங்கு இருந்தவர்கள் அம்புரோசை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நந்தகோபால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சீபுரம் வடக்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29), சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (29), இவர்கள் இருவரும் சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

    படப்பை அடுத்த பணப்பாக்கம் பகுதியில் செல்லும்போது காரை விட்டு கார்த்திக் கிழே இறங்கியுள்ளார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதில் கார்த்திக், அருண் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். அருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் சென்ற காரும் சேதமடைந்தது.

    இந்த விபத்து குறித்து ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் 30 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 41), இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டி.என்.பி.எஸ்சி. பயிற்சி மையத்தில் ஆசிரியராக உள்ளார். இவர் தனது சகோதரர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் சீனிவாசன் வெளியே சென்று இருந்த நிலையில் வீட்டில் அவரது தந்தை, தாய் மற்றும் அண்ணி ஆகியோர் இருந்தனர். நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று வீட்டுக்குள் முகமூடி அணிந்த 2 நபர்கள் கத்தியுடன் நுழைந்தனர். கத்திமுனையில் அவர்களை மிரட்டி அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த நகைகள் உள்பட வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
    நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின்னர் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இது நடைபெறுகிறது.

    நாட்டிய விழாவை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுலா துறை செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதல் நாளான நேற்று நடிகை ஷோபனா தனது குழுவினருடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    தற்போது ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இல்லை.

    இதையடுத்து நாட்டிய விழாவில் முதல் முறையாக இந்த ஆண்டு 108 திவ்யதேச சுவாமிகள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்து அதிகஅளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிய விழா அடுத்தமாதம் 23-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.15 வரை நடைபெறும். இதில் பரதம், குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், சிலம்பம், கதகளி, ஒடிசி போன்ற பாரம்பரிய நடனக்கலை நிகழ்ச்சி நடக்கிறது.
    காஞ்சீபுரம் அங்கன்வாடி மையம் அருகே மூடப்படாத கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு பாவா தெருவில் மூன்று சாலைகள் இணையும் இடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு மிக அருகில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள கால்வாய் செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் பணி நடைபெற்றபோது ஜே.சி.பிஎந்திரம். கால்வாய் மீது ஏறி இறங்கியதில் கால்வாய் மீது இருந்த சிலாப் உடைந்தது. 

    இதன்பின்னர் அது சரிசெய்யப்படவில்லை. மூடப்படாத இந்தக் கால்வாயால் அசம்பாவிதம் ஏற்படும் அதனை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    காஞ்சிபுரத்தில் வீட்டில் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பாவாஜி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வீட்டில் கியாஸ் சிலிண்டர்கள் ஆபத்தான முறையில் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் கியாசுடன் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 60 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 60 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தமாக கியாஸ் சிலிண்டர்கள் இங்கு எதற்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆலந்தூர்:

    புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தமிழகத்திலும் கால் பதித்து விட்டது. நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

    அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள்.

    தடுப்பூசி

    அந்த முதியவர் நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் முதியவர் நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதன் பின்னர் அவர் கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின்னரே முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து முதியவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், உறவினர்கள் உள்பட 91 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    பரிசோதனை செய்யப்பட்டுள்ள நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆலந்தூர் மண்டல சுகாதார அலுவலர் சுதா கூறியதாவது:-

    கடந்த 10-ந்தேதி நைஜீரியாவில் இருந்து வந்து நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 61 வயது முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

    ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்கள் 50 சதவீதத்துக்கும் மேல் முககவசம் அணிவது இல்லை. முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். டெங்கு வராமல் இருக்க கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்

    ×