என் மலர்tooltip icon

    கடலூர்

    கொலை வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு சிதம்பரம் கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடமூர் கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து குற்றவாளிகள் 14 பேரை கைது செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி தற்போது தேனியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முருகானந்தத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. 

    இதனைத்தொடர்ந்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் முருகானந்தத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
    மணல் குவாரி அமைக்காததை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மாட்டுவண்டி மணல் குவாரிகளை இயக்க வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மாட்டு வண்டிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் மாட்டுவண்டிகளோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சாலையின் இருபுறமும் மாட்டுவண்டி மற்றும் மாடுகளை நீண்ட வரிசையில் நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் எதிரில் சிஐடியு மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமையில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், நகரசெயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    சோழத்தரம் அருகே கல்லூரிக்கு செல்லும்போது மாணவியிடம் கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேனாதிபதி(வயது 52). விவசாயி. இவரது மனைவி பவானி(47). இவர்களது மகள் பானுப்பிரியா(19). இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ்(30). அவரது தம்பி சரண்ராஜ் ஆகியோர் பானுப்பிரியா கல்லூரிக்கு செல்லும்போது கேலி, கிண்டல் செய்து வந்தனர்.

    இதுகுறித்து பானுப்பிரியா தனது பெற்றோரிடம் கூறினார். உடனே பவானியும், சேனாதிபதியும் சத்யராஜ் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரது தந்தை சாமிதுரையிடம் என் மகளை உனது மகன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள் என கூறினார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோர் இரும்பு பைப்பால் பவானி, சேனாதிபதியை தாக்கினர்.

    மேலும் அவர்களை கொலை மிரட்டலும் விடுத்தனர். தாக்குதலில் காயமடைந்த சேனாதிபதி பவானி ஆகியோர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தசம்பவம் தொடர்பாக சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து சாமிதுரை. அவரது மகன்கள் சத்யராஜ், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    பெண்ணாடம் அருகே காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் 4-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது 31). எம்.ஏ. பட்டதாரி.

    இவர் பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன்(32) என்பவரை காதலித்து வந்தார்.

    ஜானகிராமன் பெண்ணாடத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கனிமொழி கூறினார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜானகிராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு அமர்ந்து 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து தலைமறைவாகியிருந்த ஜானகிராமன் விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனே ஜானகிராமனை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியிடம் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரை கனிமொழியிடம் பேசும்படி போலீசார் கூறினர். ஆனால் ஜானகி ராமன் கனிமொழியிடம் பேச மறுப்பு தெரிவித்தார். அவரை திருமணம் செய்வதற்கும் மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து ஜானகிராமனை போலீசார் கைது செய்வதாக கூறி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். உடனே கனிமொழியும் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஜானகிராமனை கைது செய்யாதீர்கள். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என கூறினார்.

    ஆனால் திருமணத்துக்கு ஜானகிராமன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு 3-வது நாளாக கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கனிமொழி திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த கனிமொழியின் உறவினர்கள் உடனடியாக அங்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் கையில் குளுக்கோஸ் ஏற்றபட்ட நிலையில் கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது சிறிது நேரத்தில் கனிமொழிக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    சிறிது நேரத்தில் கனிமொழிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜானகி ராமனின் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விடிய விடிய காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து கனிமொழி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இன்று தொடர்ந்து 4-வது நாளாக காதலன் வீட்டின் முன்பு கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். காதலன் திருமணம் செய்யும்வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என கனிமொழி கூறினார்.
    கடலூர் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அடுத்த வசந்தராம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் சூப்பர் வைசர் கோபால்சாமி மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோர் டாஸ்மாக் கடை யை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இன்று காலை டாஸ்மாக் கடை பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை ஊழியருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் வந்து பார்வையிட்டபோது டாஸ் மாக்கடையில் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் சுமார் 6,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்த திமுக பிரமுகர் மயங்கி விழுந்து பலியானார். #DMK
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 95). தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர் வேடப்பர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கருணாநிதி மீது அதிகபற்று வைத்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னை காவிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே கருணாநிதி உடல்நிலைக் குறித்து முரண்பட்ட தகவல் வலைதளங்களில் வெளியாகின. இதையறிந்த சங்கர் மனவேதனை அடைந்து மயங்கி விழுந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூதாமூர் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தி.மு.க.நகர செயலாளர் தண்டபாணி, இளைஞரணி குமார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    இறந்துபோன சங்கருக்கு ருக்மணி என்ற மனைவியும், நல்லமுத்து, அல்லிமுத்து, ஆறுமுகம், இளையபெருமாள் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். #DMK
    குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரி பண்ருட்டி அருகே கிராம மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள புது காலணியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த பல நாட்களாக இங்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினமும் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்றுதண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வந்தது

    இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் திரளாகக் கூடி பண்ருட்டி சித்தூர் காலையில் அங்கு செட்டிபாளையத்தில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்து பாதித்தது இந்த வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் அருள்ஜோதி(வயது 18). பெற்றோர் இறந்து விட்டதால் இவர் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை அருள்ஜோதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அருள்ஜோதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அருள்ஜோதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 35). இவரது மனைவி இந்துமதி(25). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் 1 மகனும், 4 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. வீரக்குமார் தற்போது தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று மாலை இந்துமதி திடீரென்று இறந்து விட்டார். வீரக்குமாரின் சொந்த ஊரான நெல்லிக்குப்பம் மேல்பாதியில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பண்ருட்டி அருகே உள்ள மேல் கவரப்பட்டில் வசித்து வரும் இந்துமதியின் தாய் ஜெயபாரதியிடம் உறவினர்கள் கூறினர்.

    இதைகேட்டதும் ஜெயபாரதி அதிர்ச்சி அடைந்தார். உடனே ஜெயபாரதியும், அவரது மகன் இளமாறனும் நெல்லிக்குப்பம் மேல் பாதியில் உள்ள வீரக்குமார் வீட்டுக்கு சென்றனர். இந்துமதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்பு இந்துமதி எப்படி இறந்தார்? என கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக வீரக்குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த இந்துமதியின் தாயார் என் மகள் எங்கு தற்கொலை செய்து கொண்டாள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் கடலூரில் இறந்ததாக கூறினர். பின்னர் ஏன்? உடலை நெல்லிக்குப்பம் மேல்பாதிக்கு கொண்டு வந்தீர்கள் என்று ஜெயபாரதி கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை.

    இதனைத்தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார். அதில் என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறுகிறார்கள். இதை நாங்கள் நம்பவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் இறந்து போன இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #VeeranamLake
    சேத்தியாத்தோப்பு:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கல்லணை வழியாக கடந்த 26-ந் தேதி கீழணைக்கு வந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது.

    இதையடுத்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.

    கீழணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர், கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியை கடந்த 27-ந் தேதி வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 32 அடியில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 40.50 அடியாக இருந்தது.

    இதே அளவு தண்ணீர் வந்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் வீராணம் ஏரி மொத்த உயரமான 47.50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பிவைப்பதற்காக சேத்தியாத்தோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை நேற்று முன்தினம் காவிரிநீர் தொட்டது.

    இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் கொண்டு செல்லப்பட உள்ளது. இதற்காக ராட்சத குழாய்கள், மோட்டார்கள் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீராணம் ஏரி நிரம்பியதும் முதலில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதன் தொடர்ச்சியாக சேத்தியாத்தோப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 76 கனஅடி வீதம் குடிநீர் அனுப்பி வைக்கப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்றார்.  #VeeranamLake
    பெண்ணாடம் அருகே காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி 3-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் கனிமொழி(வயது 31). எம்.ஏ. பட்டதாரி. இவர் பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன்(32) என்பவரை காதலித்து வந்தார்.

    ஜானகிராமன் பெண்ணாடத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கனிமொழி கூறினார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜானகிராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி கடந்த 2 நாட்களாக சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து தலைமறைவாகியிருந்த ஜானகிராமன் நேற்று மாலை விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனே ஜானகிராமனை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியிடம் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரை கனிமொழியிடம் பேசும்படி போலீசார் கூறினர்.

    ஆனால் ஜானகிராமன் கனிமொழியிடம் பேச மறுப்பு தெரிவித்தார். அவரை திருமணம் செய்வதற்கும் மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து ஜானகிராமனை போலீசார் கைது செய்வதாக கூறி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். உடனே கனிமொழியும் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஜானகி ராமனை கைது செய்யாதீர்கள். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என கூறினார்.

    ஆனால் திருமணத்துக்கு ஜானகிராமன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு 3-வது நாளாக கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கனிமொழி திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த கனிமொழியின் உறவினர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளித்தார்.

    பின்னர் அவர் கையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர் தர்ணா போராட்டத்தில் கனிமொழி ஈடுபட்டு வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி பாலைவனம் போல் வறண்டு காணப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

    அங்கிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது. இதையடுத்து கீழணையில் இருந்து கடந்த 27-ந் தேதி வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1,600 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. நேற்று இரவு அது 2,200 கன அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 4 நாட்களாக வீராணம் ஏரிக்கு தொடர்ந்து அதிக அளவு தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரி நிரம்பி வரும் காட்சி.

    நேற்று வீராணம் ஏரியின் நீர் மட்டம் 39 அடியாக இருந்தது. ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று 39.50 அடியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இதே அளவு தண்ணீர்வந்து கொண்டிருந்தால் வீராணம் ஏரி இன்னும் 4 நாட்களில் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும். 45 அடி வரை நீர் மட்டம் வந்தவுடன் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #VeeranamLake
    ×