என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pennadam Graduate girl struggle"

    பெண்ணாடம் அருகே காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் 4-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சவுந்திரசோழபுரத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது 31). எம்.ஏ. பட்டதாரி.

    இவர் பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன்(32) என்பவரை காதலித்து வந்தார்.

    ஜானகிராமன் பெண்ணாடத்தில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காதலன் ஜானகிராமனிடம் கனிமொழி கூறினார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இது குறித்து விருத்தாசலம் மகளிர் போலீசில் கனிமொழி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜானகிராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கனிமொழி சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு அமர்ந்து 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து தலைமறைவாகியிருந்த ஜானகிராமன் விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனே ஜானகிராமனை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியிடம் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் அவரை கனிமொழியிடம் பேசும்படி போலீசார் கூறினர். ஆனால் ஜானகி ராமன் கனிமொழியிடம் பேச மறுப்பு தெரிவித்தார். அவரை திருமணம் செய்வதற்கும் மறுத்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து ஜானகிராமனை போலீசார் கைது செய்வதாக கூறி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். உடனே கனிமொழியும் போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் ஜானகிராமனை கைது செய்யாதீர்கள். எனக்கு அவரை திருமணம் செய்து வையுங்கள் என கூறினார்.

    ஆனால் திருமணத்துக்கு ஜானகிராமன் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று காலை சவுந்திரசோழபுரத்தில் உள்ள ஜானகிராமன் வீட்டின் முன்பு 3-வது நாளாக கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கனிமொழி திடீரென மயங்கி விழுந்தார். இதைபார்த்த கனிமொழியின் உறவினர்கள் உடனடியாக அங்கு டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் கையில் குளுக்கோஸ் ஏற்றபட்ட நிலையில் கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது சிறிது நேரத்தில் கனிமொழிக்கு மீண்டும் மயக்கம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    சிறிது நேரத்தில் கனிமொழிக்கு மயக்கம் தெளிந்தது. பின்னர் அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஜானகி ராமனின் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். விடிய விடிய காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து கனிமொழி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இன்று தொடர்ந்து 4-வது நாளாக காதலன் வீட்டின் முன்பு கனிமொழி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். காதலன் திருமணம் செய்யும்வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என கனிமொழி கூறினார்.
    ×